Friday, February 4, 2011

நாடோடி இயக்குநரும் புத்தகச் சந்தையும் (பார்ட்2)




இரண்டாவது பத்தி எழுதும் அளவிற்கு இந்த வருட புத்தகச் சந்தை எனக்கு தகவல்களை கொடுத்திருக்கிறது.பொதுவாக புது வருடம் பிறக்கப்போகிறதென்றால் சென்னையில் எல்லோரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவிடுகிறார்கள்.நம்பை போன்றவர்களுக்கு அதும் ஒரு அடுத்த நாள் காலை அவ்வளவுதான்.அதை தாண்டி குதூகலிக்க அதில் ஒரு சந்தோஷமும் இல்லை.
புத்தாண்டு பிறக்கப்போகும் இரவை சென்னை வந்தகாலத்திலிருந்து சைதாப்பேட்டை த.மு.எ.க.ச.கிளை நடத்தும் கலை இரவுவில் கழிப்பது வழக்கமாகிப் போனது.வருடம்தோரும் போன வேகத்திலேயே ஒட்டாமல் திரும்பிவிடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.முழு இரவையும் கலை ராத்திரியில் கழித்தேன்.கொட்டும் பனியையும் கொண்டல் காற்றையும் பொருட்படுத்தாது உட்கார்ந்து நாட்டுபுறக் கலை விழாவையும் ஆட்டக்கலைஞர்களின் ஆளுமையையும் கண்டு ரசித்தேன். ப்ரகதீஸின் புதுகோட்டை பூபாளம் கலைக்குழு வழங்கிய நையாண்டி கலை நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது.மனிதர் சமகால அரசியல் பகடிகளை அவிழ்த்துவிட்டார் பாருங்கள் என் வயிறு புண்ணாகிபோனது.சிரிப்பு சிரிப்பு ஒரே சிரிப்புதான்.நிறுத்தாமல் அசரடித்தார் மனிதர்.நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் மக்கள் தொலை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நட்த்துபவர் என்றார்கள்.நான் பார்த்ததில்லை.

கலை இரவு நிகழ்ச்சியில் நல்ல சினிமா இயக்குநர்களுக்கு விருதும் கொடுக்கிறார்கள்.அந்த வருடத்தில் வந்த ஆரோக்கியமான படங்களுக்கு எளிமையான விருது என்றார்கள்.மதராசப்பட்டினத்தின் இயக்குநர் விஜய்க்கு ஒரு விருது கொடுத்தார்கள்.அவர் பேசும்போது இந்தப் படத்திற்கு கிடைத்த முதல் விருது இதுதான் எனவே வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என நெகிழ்ந்தார்.அப்புறம் பல இயக்குநர்கள் வந்தார்கள்.மதராசப்பட்டினம் நல்லப்படம் என்று சொல்லமுடியாது.அது ஒரு ப்ரீயட் ஃபிலிம்.அதில் இருக்கும் அக்கபோர் சமாச்சாரங்களை பட்டியலிட்டால் கட்டுரை சினிமாகட்டுரையாகிபோகும் அபாயமுள்ளது.ஆகவே தவிர்த்துமுன்னேறுகிறேன். பொதுவாக த.மு.எ.க.ச.போன்ற பண்பாட்டு அமைப்புக்கு எது நல்ல சினிமா எது கேவலமான சினிமா என்பதெல்லாம் புரிவதில்லை.மொக்கைப்பட்த்தை தூக்கிக்கொண்டு ஆடுவார்கள்.அவர்களுக்கு தேவை படத்தின் அம்சமல்ல;பிரச்சாரம்.மூட்டைமூட்டையாக அறிவுரை சொல்லவேண்டும்.கருத்து பொட்டகமாக காட்சிக்கு காட்சி கதா பாத்திரம் கண்ணீர் வடிக்கவேண்டும்.உடனே காவியம்,யதார்த்தம்,அபாரமான நல்ல படம் என்பார்கள். படத்தில் இயக்குநர் பார்வைக்கு வரமலேயே காரல்மார்க்ஸின் சுவரோவியம் ஒன்று இடம் பெற்றிருக்கும்.உடனே புரட்சி படம் என்று புல்லரிப்பார்கள்.இவ்வளவுதான் இவர்களின் சினிமா ரசனை,கோட்பாடெல்லாம்.அந்த லட்சணத்தில் தான் விரு துவழங்கும் விழா இருந்தது. இந்த மாதிரி சின்ன எரிச்சலை கடந்துபோனால் நிறைய கலாபூர்வங்களை அனுபவிக்க முடிந்தது. இல்லையானால் பூ மாதிரி பேத்தல் படத்தின் பொட்டியை ஊர் ஊராக தூக்கி சுமந்து திரிந்திருப்பார்களா இவர்கள்?
ச.தமிழ்ச்செல்வனின் அந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன்.அந்தக் கதைக்கும் பட்த்திற்கும் பல்லாயிரம் பரலாங்கு தூரம்.இதை தமிழ்ச்செல்வனிடமே நான் சொல்லியும் உள்ளேன்.அவரும் ஆமாம் ஏதோ ஒப்பேற்றியிருந்தார்கள்.எனக்கே பிடிக்கவில்லை என்றார்.ஆனால் தொண்டர்களுக்கு பிடித்துவிட்ட்து.அதான் தலைமைக்கும் தொண்டனுக்குமான கலா இடைவெளி.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே எத்தனை நிகழ்ச்சிகள். ஒருபக்கம் சென்னை சங்கமம் சடங்கு.இன்னொரு பக்கம் நேஷ்னல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவும் தமிழக அரசின் கலைபண்பாட்டுத்துறையும் இணைந்து நடத்திய சர்வதேச நடகவிழா.ஒரு மனுஷன் எங்கதான் போவான். நாகேஷ் ஒரு படத்தின் படபிடிப்புக் காட்சி முடிந்த உடனேயே இன்னொரு அறைக்கு ஓடிபோய் முகத்தை அலம்பிவிட்டு அடுத்தப் பட்த்திற்கு ஒப்பணை செய்துகொள்வார் என்று ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் என்ற மூத்த நடிகர் என்னிடம் சொன்னார்.ஏறகுறைய அப்படி ஆகிவிட்து கலை ரசிகர்களின் நிலைமை. ஒன்றை முடித்துகொண்டு அடுத்த இட்த்திற்கு போவதற்கு முன்னால் நாடகம் பாதி முடிந்திருக்கும்.அப்புறம் தலையும் புரியாது வாலும் புரியாது. எல்லோரும் சிரிக்கும்போது நாம் மட்டும் மெளனமாக உட்கார்ந்திருப்போம்.அப்படிதான் போனது என்னுடைய நிலமையும்.

முழுதாக பார்த்த மூன்று நாடகங்களில் இரண்டு நாடகங்கள் அற்புதமாகய் மிளிர்ந்தன. ஒன்று:அஸாம் நாடகம்.மற்றொன்று பெங்கால் நாடகம்.இதில் இந்தி நாடகம் சுத்த ஹம்பக். இந்தி நாடக ரசிகர்களின் காமெடி ரசனை சுமார்தான்.நாடகத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாகவே நினைத்து சகலத்தையும் செய்துகொள்கிறான். அக் கதா பாத்திரம் ஒரு திருநங்கை.நடை உடை பாவனை உட்பட மிதமிஞ்சிய பெண் தன்மை துருத்தி நிற்கிறது அவளிடம். அந்த திருநங்கையின் வீட்டு வேலையாள் ஒரு கிராமத்துப் பெண்.ஆனால் அவள் ரொம்பவும் இயல்பானவள்.உட்கார்வதிலிருந்து சாப்பிடுவது பழகுவது வரை அஷ்டகோணலாய் நடந்து கொள்கிறாள்.பெண் என்றால் எதிலும் ஒரு நளினம் தேவை என்கிறாள் ஆணிற்குள் ஒளிந்திருக்கும் பெண்.அதை எப்படி வேலைக்காரி கடைபிடிக்க வேண்டும் என்று கற்றும் கொடுக்கிறாள்.வேலைக்காரி அப்படியெல்லாம் கிடையாது இதுதான் சரி என்கிறாள். தன் இஷ்டப்படியே தாறுமாறாய் நடக்கிறாள்.இந்த விஷயம் நாடகத்தின் காட்சியில் எடக்கு மடக்கான நிகழ்த்திக் காட்டப்படுகிறது.வேலையாள் தொட்டதில் எல்லாம் குத்தம் பார்க்கிறாள் திருநங்கை.இவ்வாறு நீள்கிறது நாடகம்.
ஒருகாட்சியில் சாப்பிட வீட்டில் ஏதாவது இருக்கிறதா என வேலைக்காரி கேட்க,திருநங்கை சாப்பாடெல்லாம் இல்லை இந்த வெற்றிலையும் பாக்கும் தான் உள்ளது என பெட்டியை எடுத்து நீட்டுகிறாள்.வயிற்றிற்கு சாப்பாடே இல்லை.வெற்றிலை ஒரு கேடா என பிடுங்கி வாவில்போட்டு ராட்சஷிபோல மென்று காட்டுகிறாள் கிராமத்து நங்கை.உடனே இந்தி ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.நானும் நெய்தல் கிருஷ்ணனும் உன்மென்று உட்கார்ந்திருந்தோம்.எனக்கு இந்தி புரிந்து சிரிக்காமல் இருந்தேன்.நெய்தல் இந்திபுரியாமல் சிரிக்காமல் இருந்தார்.இதான் வித்தியாசம்.

அஸாம் நாடகம் உண்மையில் பிரமாதம். அஸாம் மொழியில் அவர்கள் பாடி இசைத்த நாட்டுபுற பாடல்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது என்றால் நீங்களே எப்படியிருந்த்து என்பதை புரிந்துகொள்ளுங்கள்.அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.எல்லா நடிகர்களின் முகமும் புத்தரைபோல தூய்மையாய் இருந்தன.
இந்த நாடகத்தின் கதை சுருக்கம்:
ஒரு திருடன் சாமியாரிடம் நான்கு சத்தியங்களை செய்து கொடுக்கிறான். இளவரசியை மணக்க மாட்டேன்.தங்க தட்டில் சாப்பிட மாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன். ராஜ பதவியை ஏற்கமாட்டேன். தன்னுடைய வாழ்க்கையில் இதெல்லாம் எங்கே நடந்துவிடப்போகிறது என்று நம்பி இவன் செய்த சத்தியங்கள் காலபோக்கில் கடைபிடிக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது.உண்மையில் இந்தத் திருடனை ஒரு இளவரசி மணமுடிக்க முன்வருகிறாள்.இவன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஏற்க வருக்கிறான்.ராணியையே மணக்க சம்மதிக்கத்தால் அவனை இன்னலுக்கு உட்படுத்தி தண்டிக்கிறாள் ராணி. இப்படி செய்த சத்தியத்தையொட்டி பல சங்கடங்கள் நாடகத்தில் வந்தன.மொழிபுரியவில்லை ஆனால் அது ஒரு ப்ரச்னையே இல்லை.எல்லோரும் குலுங்கக் குலுங்கக் விழுந்து சிரித்தோம்.300 நபர்களுக்கு மேல் வந்திருந்தனர்.முதல் பார்வையாலர்கள் முழுக்க வசதியானவர்கள்.பார்வையிலேயே தெரிந்துவிட்டது.எல்லாம் கல்லூரு இளசுகள்.

திருடன் ஒரு சாமி சிலையை திருடும் காட்சி வெகு சிறப்பாய் நிகழ்த்திக்காட்டப்பட்டது.பார்த்துவிட்டு புல்லரித்துபோனேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த காலச்சுவடு கண்ணன் சிரித்த ஓரே காட்சியும் அதுதான்.அழகு!

பெங்கால் நாடகத்தை எழுதியவர் ரவிந்திரநாத் தாகூர்.மக்கள் கடவுளுக்கு காணிக்கையாக மிருகங்களை பலியிடுகிறார்கள்.இதை அரசன் தடுக்கிறான்.மக்களுக்கு உவப்பில்லாத அரசாணையை எதிர்த்து கலகம் செய்கிறார்கள்.இதான் மொத்தக் கதையின் சாரம்சம். நாடகத்தை பார்த்ததும் ஜெயல்லிதா தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வந்தார்.அந்தக் காலத்திலும் ஜெயலலிதாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு தாகூரின் நாடகமொரு அத்தாட்சி.இந்நாடகம் அவ்வளவு அழகியலாக இல்லை.தெலுங்கில் டப் செய்யப்படும் மந்திரவாதி படம்போல இருந்தது.வசனமும் காதில் அப்படியே ஒலித்தன.

கண்காட்சி,நாடகம்,சங்கமம், நடந்த இதே சமயத்தில் புத்தக வெளியிட்டு விழா,அசோகமித்திரனுக்கு சாரல் விருதளிப்பு விழா,திலிப்குமாருக்கு விளக்கு விருது கொடுக்கும் விழா என்று ஒரே விஷாகோலம்.
அசோகமித்திரனின் விருது விஷாவுக்கும் போனேன்.நிறைய கூட்டம்.ஃபிலிம் சேம்பரில் நடந்தது. கூடவே கலம்காரி ஓவிய கலைஞர்,ஸ்தபதி வித்யாசங்கர் என்று பலருக்கும் பாராட்டும் நடந்தது. ஜேடி-ஜெர்ரி வருடம் தோறும் வழங்கும் விருது.பிரபஞ்சன் அ.மி.யையும் அவர் படைப்பையும் கோடிட்டு காட்டிபேசினார்.
50 ஆயிரம் பரிசு தொகை படிப்படியாக 5லட்சமாக மாறவேண்டும் என்பது என் அவா என்றார். வழக்கமான சினிமாகாரகள் பாணியில் இதை 5லட்சமாக மாற்றுவது சுலபமானதொன்று, சொல்லுங்கள் உடனே மாற்றிவிடலாம் என்றார் இயக்குநர் லிங்குசாமி. பரிசை பெற்றுக்கொண்டு பேசிய அ.மி.,”எனக்கு எதுக்கு பரிசு பணமெல்லாம்.அதோட தெரிஞ்சவங்களே கொடுக்குற பரிசை வாங்குறதுல ஒரு சங்கோஜம் இருக்கு.சங்கடமிருக்கு. ஜேடி.ஜெர்ரியை இருபது வருஷமா எனக்கு தெரியும்.ஏதோ பிரியப்பட்டு கொடுக்குறாங்க.
5லட்சமா பரிசு தொகை மாறுனும்னு யாரோ பேசினாங்க.எவ்வளவு வந்து நான் இப்போ என்ன செய்யபோகிறேன்.இப்போ எனக்கு 80 வயசாகிடுச்சு.இனிமேல் இந்த 50 ஆயிரத்தை நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்கோ?”என்றார் வழக்கமான தன் நடையில்.ஆனால் இந்தக் கூட்ட்த்தில் அசோகமிரனின் பேச்சு ஏனோ அதிகம் பகடியாகயிருக்கவில்லை. திலிப்குமாரின் விளக்கு கூட்டத்தில் அ.மி.பேசும்போது செம கிண்டல்.குத்தல் எல்லாம் இருந்தன.

காலச்சுவடு ஏற்பாடி செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.தேவநேய பாவாணர் அரங்கில் நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருத சிஸ்தர் ஜெஸ்மி,வாஸந்தி,பால் சக்காரியா,சுகுமாரனை அழைத்துகொண்டு காரில் புறப்பட்டேன். ஜெயலலிதா வீட்டு சாலையில் ஏக நெரிசல்.சக்காரியா அரண்டுபோய்விட்டார். மெளண்ட்ரோட்டில் பல இடங்களை அவருக்கு தெரிந்திருந்தது.பி.ஆர்.அண்ட் சன்ஸ் கடையை பற்றியும் அதன் பழமையை பற்றியும் சொன்னார். செம்மொழிபூங்கா,100கோடியில் கலைஞர் உருவாக்கிய நூலகம் வரை தமிழகத்து அன்றாட நடவடிக்கைகளை அறிந்து வைத்திருந்தார்.பாதி தமிழ் எடுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரிய்து.இவர்கள்பத்திரிகை படிக்கிறார்களா என்பதே சந்தேகம்.அப்புறம் என்கே அண்டை மாநிலத்தை பற்றி அறிந்துகொள்ளவது?

நாம் போவது 100கோடியில் கட்டிய நூலகமா என்றார்.இல்லை இது மாவட்ட தலைமை நூலகம் என்றேன். அப்படியா என்றார். கலைஞர் பற்றியும் சமகால அரசியல் பற்றியும் பேச்சு போனது.அதையெல்லம் சொல்லக்கூடாது.சஸ்பென்ஸ்! சுகுமாரன் சக்காரியாவோடு சரளமாக ஆங்கிலம் மலையாளத்தில் மாறிமாறி உரையாடி வந்தார்.சுகுமாரன் மலையாளம் சம்சாரிச்சு நான் இப்போதுதான் முதன்முறையாக கேட்டேன்.உண்மையில் க்ரேட் மேன்! மூன்று மொழி கற்ற புலவராயிற்றே!

கண்காட்சிக்காகவே 4பேண்ட் நாலு சட்டை புதுசாக வாங்கி இருந்தார் தேவிபாரதி.தினமும் ஒன்று என மாப்பிள்ளைகோலத்தில் மணந்தார்.ஆனால் எல்லாம் சர்பத் கலர் சட்டை.கொஞ்சம் கூட இன்றைய கால ஃபாஷன் இல்லை.மைதிலி இனி ச்ட்டை வாங்குவதாக இருந்தால் சொல்லுங்கள் நான் தேர்வு செய்துதருகிறேன் என்றார் தேவிபாரதியிடம். கா.சு.ஸ்டாலில் பழைய கா.சுவடுகளை இலவசமாக விநியோகித்தார்கள்.பபாசி அதற்கும் தாடை போட்டுவிட்டது.கலைஞர்தான் மக்களுக்கு இலவசமாக தரவேண்டும்.கண்ணன் தரகூடாது என அவர்கள் நினைத்திருக்கலாம்.
சாஹித்ய அகாடெமி பெயருக்கு கடைபோட்டிருந்தது.உள்ளே நூழந்தேன்.பாதி புத்தகங்கள் கன்னடமொழி புத்தகங்கள்.தமிழ்ல வச்சாலே எவனும் வாங்கமாட்டான்.கன்னடத்துல வைத்தால் எப்படி என்றேன்.கடையை பிடித்துவிட்டோம்.அகாடெமி அலுவலகத்தில் இருந்து நூற்களை கொண்டுவாருங்கள் என்று ஊழியர்களை அனுப்பி வைத்திருந்தோம்.போனவர்கள் கன்னட புத்தகத்தை எடுத்து வந்துவிட்டார்கள் என்றார்கள்.இந்த லட்சணத்தில் இருக்கிறது அகாடெமி.இவர்கள் கொடுக்கும் விருது மட்டும் விளங்குமா என்ன?

உயிர் எழுத்து செந்தில் இந்த வருடமும் ஸ்டால் போட்டிருந்தார்।போனேன்.”குடிக்குறதெ நிறுத்திட்டேன் மாப்ள.ஒன்லி சனி ஞாயிறு மட்டும் தான்.அதுவும் அளவுதாண்டுவதில்லை”என்றார். இந்த திடீர் முடிவால் அவ்ருக்கும் கொஞ்சம் பிறழ்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருந்தது அவரது உரையாடல். “ஃபர்ஸ்ட் லாஸ் ரூம் போட்டு இருக்கேன் மாப்ள.தினமும் ஒரு சினிமாகார வி.ஐ.பி.தான் அலோட்.நீ என்ன பண்ற முடிஞ்சா வடிவேலுவை கூட்டிகிட்டு நைட் ரூமுக்கு வந்துடு.சரக்க போட்டுகிட்டு ஜாலியா பேசிகிட்டு இருப்போம்”என்றார். வடிவேலுவை பார்க்க சாட்டிலைட் சானல்கள் தெவ்வுடு காத்துகொண்டிருக்கும் காலத்தில் மனிதன் குடிக்காமலே உலர ஆரம்பிச்சுட்டாரே? என்று சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து நழுவிப்போனேன். வந்த பிறகு ஒரு பத்திரிகையாளரிடம் இருந்து போன். என்னவென்று விசாரித்ததில் ”உயிர் எழுத்து புத்தகத்தை வெளியிட வந்த நாடோடி இயக்குநர் 2ஆயிரம் ரூபாக்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டு அபேஸ் ஆகிவிட்டாரம்.பார்ட்டி பணம் கேட்க தர்மசங்கடபட்டுகிட்டு இருக்குறாப்புல.உதவுங்க!” என்றார்.
மறுநாள் அள்ளிக் கொண்டுபோன புத்தகங்கள் எல்லாம் நான் இந்த வருடச் சந்தையில் காசு கொடுத்து தான் வாங்கின புத்தகங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் பிரபல வார இதழில் வெளியாகி இந்தது.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

( தொடரும்)



15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பதிவு...

கடற்கரய் said...

சார் காமெடி பண்ணுறீங்களா? படிக்காமலே கமெண்ட் வேற?

பக்கம் said...

குருவே இதை படித்து பார்ப்பதில் இருந்து எனக்கு என்ன தெரிகின்றது என்றால் நீங்கள் புத்தக சந்தைய விட்டு வேற எங்கயும் போகல பொலிருக்கு எழுத்தில் உயிர்வாழ்பவன் என்பது சரியாதான் இருக்கு

கடற்கரய் said...

குமார்,நீங்கள் சொல்வதில் பாதியளவு உண்மை உள்ளது!

பக்கம் said...

அப்போ மீதி குருவே

umavaratharajan said...

தங்கள் எழுத்தில் உள்ள அங்கதச் சுவையை ,எளிமையை நான் பெரிதும் ரசிப்பவன்.த .மு.எ .ச. வுக்கும், திரைப் பட ரசனைக்கும் உள்ள உறவைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.இல்லா விட்டால் ஒரு காலத்தில் வி.சேகரை எல்லாம் உயர்த்திப் பிடித்திருப்பார்களா?
தேவிபாரதி சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட புகைப் படங்களைப் பார்த்தேன். மிகுதி மூன்று செட் ஆடைகளையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

கடற்கரய் said...

உங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றி,உமா வரதராஜன்

எஸ்.கருணா said...

தமுஎகசவின் சினிமா அறிவு குறித்த உங்கள் மதிப்பீட்டுக்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் அளவுக்கு தமுஎகசவுக்கு அறிவில்லைதான். என்ன பண்றது. நீங்களெல்லாம் வெளியில் இருந்து சொல்வதை அமல்படுத்த முயற்சிக்கிறோம்.ஆனால் மொக்கை படத்தை தூக்கிவைத்து கொண்டாடுகிறோம் என்பது கொஞ்சம் அதிகம்தான்.மதராஸப்பட்டனம் சிறந்த படமென்பதர்க்காக அதற்கு பாராட்டுவிழா நடத்தவில்லை. அந்த இயக்குனரின் முயற்சிக்காகத்தான் பாராட்டினோம்.

கடற்கரய் said...

கருணா இது அமைப்பு சார்ந்த ஒரு விமர்சனம்.நீங்கள் ஏதோ உங்களை சுற்றிய த.மு.எ.க.ச. இயங்குவதாக வருத்தம் கொள்கிறீர்கள்! இங்கே யாருக்கு அறிவு அதிகம் என்ற போட்டியா நடகிறது? எல்லா இடங்களிலும் குறைகள் உள்ளன.அதை தனி மனிதன்தான் கலைய முற்படவேண்டும்.அதன் வெளிப்பாடே இப்பதிவு

இவ்வுலகம் இனிது said...

எஸ். ராமகிருஷ்ணன் காலச்சுவடு ஸ்டாலில் புத்தகம் பெற்றுக்கொண்டு காசு கொடுக்காமல் சென்றுவிட்டாராமே, பதிப்பக ஊழியர்கள் புலம்புகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா கடற்கரய் அது.

கடற்கரய் said...

அப்படியா? எனக்கு தெரியாதே? ரிவிவ்க்கு வாங்கி இருப்பார் செல்லப்பா..எதுக்கும் செக் பண்ணிக்கோங்க?

VINAYAKA MOORTHY - J said...

சில நேரங்களில் நமது மனதில் உள்ள கருத்துக்களையும், ஆற்றாமைகளையும் வேறு யாரேனும் சொல்லும்போது, அளவற்ற மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க முடியாது.
த.மு.எ.ச குறித்த விஷயத்தில் வெளிப்பட்டுள்ள கருத்துக்களும் அப்படியே..
ஏதோ கட்சிக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும், மற்ற பொது நபர்களை மிக கவனமாக தாம் நடத்தி வரும் இலக்கிய, குறும்பட நிகழ்வுகளில் நுழைந்து விட இடமளித்து விடக்கூடாது என்பது போன்றும், இவர்கள் சொல்வது மட்டுமே நல்ல படைப்புகள் போன்றும் பிரச்சாரப்பாணியோடு சற்றும் தொலைநோக்குப்பார்வை இல்லாத நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை என்னவென்பது? இதை இவர்களிடத்தில் யார் சொல்வது? புதிதாய் கற்றுக்கொள்ள வரும் ஆர்வமுடையவர்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்பதை எந்த ஆதங்கத்தில் வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை....!

கடற்கரய் said...

உங்களின் மனநிலை சரிதான் VINAYAKA MOORTHY-J
கட்டாயம் அவர்களிடம் நமக்கு தனிப்பட்ட வெறுப்புகள் ஒன்றுமில்லை

Unknown said...

புத்தகத்திருவிழாவைப் பற்றி ஆனதா விகடனில் வந்த சிறுகதை என்னை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது!

கடற்கரய் said...

எம்.ஜி.ஆ.வி.க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?