Monday, August 2, 2010

குடும்பம் இல்லாத கருணாநிதி






பல காலமாக நான் எதிர்பார்த்திருந்த தி.மு.க.வின் உறுப்பினர் அட்டை என் கையில் வந்து சேர்ந்தது.அதில் பெரியார் முகத்தை தழுவிக்கொண்டு சற்று முன் வந்து எட்டிப் பார்க்கும் அண்ணாவின் முகம்,அதை ஒட்டியே வெளியே தள்ளி வந்து நிற்கும் கலைஞரின் உருவம் என்று ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டதை போல மூன்று தலைகள் ஓவியமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.அதன் கீழாக ஒரு அழகான இளைஞன் கழகக் கொடியை தூக்கிக் கொண்டு வீரநடை போடுவதைபோல காட்சியளிக்கும் அந்த அட்டையில் இரகு.ஹைதர்கான் என்று என் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்தது.அதை கண்டு தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துடித்தேன்.அப்படியொரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளுக்குள். அப்பாவின் பெயரான இரகுமான்கானில் வரும் -ரஹிமான்கான் என்பதை என் முன்னெழுத்தின் கவர்ச்சிக்காக அப்படி நான் திருத்திக் கொண்டேன் என்பதுதான் உண்மை- முதல் இரு எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொண்டது கூட தி.மு.கழகப் பாதிப்பால்தான்.உறுப்பின அட்டையில் கழகக் கொடியை தூக்கிச் சுமக்கும் இளைஞனைப் போலவே எங்கள் தெருவிலும் ஒரு நபர் இருந்தார்.அவர் பெயர் கருணாநிதி.அவர் எப்போதும் சட்டை அணியாமல் சாதாரண நாலுமுழ காவிநிற வேட்டி மட்டுமே உடுத்துவார்.கழகக் கறை பாடர் போட்ட கட்சித் துண்டு கட்டாயம் மார்பில் புரளும். வேட்டி அணியாத நாளில் வெறும் அரை நிஜார் மட்டும் அணிந்திருப்பார். காக்கி கலரில் துப்புறவுத் தொழிலாளி மாதிரி இருக்கும் டவுசர் அது. அவரின் முகத்தோற்றம் அப்பாவித்தனத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தது. வாயை மீறி வெளியேத் துருத்திக் கொண்டு நிற்கும் எடுப்பான பல்.மொட்டை என்றும் சொல்ல முடியாமல் அடர்ந்த கேசம் என்றும் சொல்ல முடியாமல் அப்படியொரு ஹேர்ஸ்டைல் அவருக்கு. இதன் அளவு என்றைக்கும் மாறியதில்லை.ஓரே சீராக இருக்கும்.தினமும் திருநீரை எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொள்வார்.முகத்தில் ஆரம்பித்து கெண்டைக் கால் வரை தேகம் முழுமைக்கும் படர்ந்து நிற்கும் தோல் சீக்கு அவரை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.பேச்சு வாக்கில் அவ்வியாதி குறித்து அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்.ஊருக்குள் சூதுவாது அறியாத ஆசாமி என பெயரெடுத்திருந்தார். பேச ஆரம்பித்தால் வளவளவென்று நிறுத்தாமல் உளறுவார்.ஏறக்குறைய புத்தி இடறியவர் போல வெகுளித் தனமான பேச்சாகவே அது இருக்கும்.குறைந்தது அவருக்கு முப்பத்தைந்து வயது மேல் இருக்கும்.தோற்றம் என்னவோ எப்போதும் ஐம்பதைதான் அடையாளப்படுத்தியது.இப்படி பார்ப்பதற்கே பரிதாபமாகக் காட்சியளிக்கும் கருணாநிதியை ஜில்லா முழுக்க உள்ள கழகத்துக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஊரில் ஒரு பொதுக்கூட்டம் என்றால் கழகக் கொடியை பெரிய கம்பில் கட்டிக்கொண்டு ஊர்த் தெரு முழுக்க பொடிநடையாக நடந்தே பிரச்சார நோட்டீஸை விநியோகிப்பார்.சொல்லப்போனால் அவரொரு நடமாடும் கொடிக் கம்பம்.என் காலத்தில் வாழ்ந்த ஒரு கொடிகாத்தக் குமரன்.கருணாநிதி கூட்டம் நடக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்துவிடுவார். உச்ச ஸ்தாயியில் "இன்று மாலை சரியாக ஆறு மணியளவில்..விருத்தாசலம் வானொலித் திடலில்..கழகத்தின் போர் வாள்..இயக்கத்தின் இடிமுரசு..”என்று அவர் ஊர் முழுக்க முழங்கிக் கொணடே திரிவார். இப்படி பிரச்சாரம் பண்ண கருணாநிதிக்கு தனியாக கூலி என்று எதுவும் கட்சியினர் கொடுப்பதில்லை. அவரும் கேட்டதும் இல்லை.எல்லாம் கலைஞருக்காக அவர் செய்யும் ஊழியம்.அதில் வருமானம் பார்ப்பது அப்பத்தமான காரியம் என்பது கருணநிதியின் எண்ணம்.இவ்வாறு தெருத் தெருவாக கத்தி நா வறண்டவர்,ராமச்சந்திரனின் மளிகைக் கடையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து களைப்பாருவார்.பின் உச்சு வெயிலை தணிக்க ஒரு கோலி சோடாவில் சிறிதளவு உப்புப்போட்டுப் குடிப்பார்.இதனால் தொண்டையின் கரகரப்பு சரியாகும்.அப்புறம் சில பீடித் துண்டுகளை வாங்கி இடுப்பு மடிப்பில் வேட்டியில் சுறுட்டிக் கொள்வார்.காசு இருந்தால் கொடுப்பார் இல்லை என்றால் அக்கெளண்டில் எழுதிக் கொள்ளச் சொல்வார்.கடையில் அப்படி எந்த அக்கெளண்டும் அவர் பெயரில் இருந்ததாக தெரியவில்லை.யாசகமாக கடை உரிமையாளர் ராமச்சந்திரன் கொடுப்பதை மற்றவர்கள் முன்பு அப்படி நாகரிகமாக சொல்லிக் கொள்வது கருணாநிதியின் சுபாவம். பீடியை பற்ற வைத்தக் கையோடு அப்படியே கடையில் கிடக்கும் அன்றைய தினம் முரசொலியை எடுத்து வாசிப்பார். வாசிப்பார் என்பதைவிட படம் பார்ப்பார்.அன்றைக்கு வெளியாகி இருக்கும் தலைவரின் உடன்பிறப்புக் கடிதத்தை பற்றி சீரியஸாக கேட்டு தெரிந்து வைத்துக் கொள்வார். கருணாநிதி ஒரு கழகக் கண்மணி என்பதற்கு சரியான உதாரணம். தனக்கென்று வீடு வாசல் இல்லாத தனிக்கட்டையான கருணாநிதிக்கு கழகம்தான் ஊர்.தலைவர்தான் உடமை.இப்படிபட்ட பலர் தி.மு.க.வை ஊர் ஊருக்கு தனித் தனியாளாக நின்று வளர்த்திருக்கிறார்கள்.ஆனால் இந்த உதிரிகளுக்கு இயக்க வரலாற்றில் ஒரு சின்ன இடமும் இதுவரை இருந்ததில்லை. இந்த லட்சிய இளைஞனுக்கு நோய் முற்றிபோய் ஒரு நாள் தெருவோரத்தில் இறந்துகிடந்தார்.தூக்கிப் போடகூட நாதியில்லாமல் சீமித்துக் கொண்டிருந்த பிணத்தை நகராட்சியின் குப்பை வண்டி வந்து தூக்கிக் கொண்டுபோய் புதைத்தது என்பது தனி வரலாறு.

கழக சார்பில் எங்களூர் வானொலித் திடலின் நடக்கும் அத்தனைப் பொதுக் கூட்டத்திற்கும் நான் ஆர்ஜராகிவிடுவேன். ஊர்ப் பாலத்திற்கு அந்தப் பக்கம்
தான் இந்தத் திடல் உள்ளது.இங்குதான் ஊருக்கு என்று பொதுவில் சங்கு பிடிக்கும் மிஷின் ஒன்றும் இருந்தது.பனிரெண்டே முக்கால்,மாலை நாலு மணி என்று முறை வைத்து தினமும் சங்கொலி எழுப்பப்படும். சங்கொலி கேட்டப் பிறகே ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் பள்ளியைவிட்டு களைவார்கள். சங்கு சத்தம்தான் ஊரில் சகலத்திற்கும் சமிக்ஞை.இச்சத்தம் மாதிரியே பள்ளிவாசலின் பாங்கு சத்தமும் மக்களிடம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. நல்லவேளை இன்று இப்படிப்பட்ட பழக்கங்கள்
ஊரில் இன்றில்லை.ஒருவேளை இருந்திருந்தால் இன்றைய கருணாநிதி ஆட்சியின் மின்வெட்டால் முதல் நாள் காலை சங்கு மதிய சங்கு எல்லாம் அடுத்த நாள் காலையில்தான் ஒலித்திருக்கும்.அந்த அளவுக்கு வெகு சிறப்பாக ஆற்காட்டார் தன் துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் இடம் தராமல் இச் சம்பர்தாயங்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் காலவதியாகப்பட்டு விட்டன.
மணிக்கூண்டு என்ற கலாச்சாரம் எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் கடைபிடிக்கப்பட்ட ஒரு வடிவம் இது. பழமையின் பிரதிநிதியான சங்கு,மிச்சமாக சொச்சமாக ஊரில் அன்று முழங்கிக் கொண்டிருந்தது.அதனால்தான் இந்த இடத்திற்கு வானொலித் திடல் எனும் பெயர் வந்திருக்கலாம்.திடலையொட்டி ராஜராஜேஸ்வரி டாக்கீஸ்,ஊரின் பிரதான பெரியக் கோயிலான பழமலைநாதர் ஆலயம் ,திடலை ஒட்டியே வாடகை கார் ஸ்டேண்ட்,மின் விளக்குகளின் அலங்காரக்கடை,வளையல்,குங்குமப் பொட்டு கடைகள் என அகண்டு பரப்பிக் கொண்டு நிற்கும் பெரியக் கடைவீதி இது. இங்குதான் சர்வக் கட்சியின் பொதுக்கூட்டங்களும் நடக்கும்.அ.தி.மு.க கூட்டமானால் எங்கள் கட்சியாட்கள் ஏதாவது கடையின் கூரைக்கு கீழ் நின்று இருட்டில் மறைந்தபடி கூட்டம் கேட்பார்கள்.எதிர்கட்சியின் எகத்தாளமானப் பேச்சுக்கு எதிரடிக் கொடுக்கவேண்டும் இல்லையா? அதற்குதான் இந்தத் தீவிர அவதானிப்பு.அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குள் பதிலடியாக எங்கள் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று சபையேறும்.வை.கோபால்சாமி,நாஞ்சில் மனோகரன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,வெற்றிகொண்டான்,தஞ்சைக் கூத்தரசன்,நன்னிலம் நடராசன்,திருச்சி சிவா,தீப்பொறி ஆறுமுகம்,செஞ்சி ராமச்சந்திரன் இப்படி யாராவது சிறப்புப் பேச்சாளர்கள் வந்து வீர முழக்கம் இடுவார்கள்.வெற்றிகொண்டானின் எகத்தாளமான பேச்சும் நையாண்டி நடையும் இடையிடையே வெளிப்படும் இரட்டை அர்த்தங்களும் கூட்டத்தினரை கும்மாளமிட வைக்கும்.அந்தப் பேச்சின் சார்ஜ் எங்களுக்குள் இருந்து இறங்க பல நாட்கள் ஆகும்.

இப்படி கூட்டம் கேட்டுக் கேட்டு நானும் ஒரு பேச்சாளனாக என்னையும் அறியாமல் வளர்ந்து கொண்டிருந்தேன். பெரிய பேச்சாளர்களின் பேச்சில் உள்ள சாரத்தை மட்டும் அப்படியே உள்வாங்கி என் சொந்த சரக்கையும் சேர்த்து பேசும் அளவிற்கு நான் வளர்ந்திருந்தேன்.என்னை பேச்சாளனாக முன்னிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில்தான் சட்டமன்ற தேர்தல் தலைக்காட்டியது.அப்போது குழந்தை தமிழரசன் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஒரு இடம் விடாமல் ஊர் முழுக்க கட்சிக்காக கத்து கத்து என்று நாய்க்கத்தலாய் ஒலிப்பெருக்கியில் அலறினேன்.பிரச்சாரத்தின் மூலம் எனக்கென்று ஒரு தனி அடையாளம் கிடைத்தது.வளரும் பேச்சாளராக நண்பர்கள் மத்தியில் உச்சுமுகரப்பட்டேன். என்னுடைய பேச்சுக்கும் நாலு ஆட்கள் நின்று சிலாகிப்பார்கள் என்ற தைரியத்தை ஊர் மக்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்து அழகு பார்த்தார்கள் என்றுதான் இன்றைக்கு சொல்லத் தோன்றுகிறது. சட்டமன்றம் முடிந்ததும் நாடாளுமன்றத் தேர்தல்.இதில் எழுத்தாளர் இமையத்தின் அண்ணன் வெ.கணேசன் நிறுத்தப்பட்டார்.மைக் பிடித்தவன் வாய் சும்மா இருக்கும்? லொங்கு லொங்கு என்று வண்டிக்கட்டி கொண்டு சுற்றினேன்.
இந்தப் பிரச்சாரத்தையெல்லாம் விட நகரமன்றத் தேர்தலில்தான் ஜகஜோதியான என் பிரச்சாரம் சூடுபிடித்தது.நகரமன்றத் தலைவராக பூக்கடை இராசாங்கம் நிறுத்தப்பட்டார்.எங்கள் வார்டில் பூண்டுக்கடை இராமலிங்கம் கவுன்சிலராக நிறுத்தப்பட்டார். இராமலிங்கம் முதலியார் வகுப்பை சார்ந்தவர் என்பதால் சீட்டுக் கிடைத்ததாக கட்சிக்காரர்கள் பொடி வைத்துப் பேசிக்கொண்டார்கள்.எனக்கு இராமலிங்கம் உறவு முறையில் சொந்தமில்லை.ஆனாலும் எங்கள் குடும்ப அளவில் நெருங்கியவர்.வீட்டு மளிகை சாமான்கள் எல்லாம் மாத அக்கெளண்டில் கொடுத்து உதவக்கூடியவர்.அதோடு ஊர் வந்தப் புதுசில் அவரது வீட்டில்தான் முதன்முதலில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம் என்று அம்மா சொல்லி நான் பலதரம் கேட்டதுண்டு. அவரை மாமா என உறவுமுறை வைத்துதான் என் அண்ணன் தம்பி உட்பட வீட்டில் எல்லோரும் அழைப்போம். இதையெல்லாவற்றையும் காட்டிலும் அவர் தி.மு.க.வின் வேட்பாளர்.அவரை ஜெயிக்க வைப்பது என் தலையாகிய கடமையல்லவா?
தேர்தல் சூடு பிடித்தது.இராமலிங்கமே என் பிரச்சாரத்தால்தான் வெற்றிபெறப் போகிறோம் என்று நம்பினார்.தினமும் காலை என் வீட்டு வாசலுக்கு ஆட்டோ வந்துவிடும்.பல் கூடத் துலக்காமல் வண்டியில் ஏறி மைக்கை பிடித்தால் மீண்டும் ஆட்டோவை விட்டு நான் இறங்க இரவாகிவிடும்.வார்டில் ஒரு இடம் தப்பாது.ஒண்டு ஒடிசலான தெருவுக்குள் கூட புகுந்து புகுந்து காட்டுக் கத்தலாய் கத்துவேன்.எனது பிரச்சாரத்தின் தீவிரத்தை பார்த்த பக்கத்து வார்டு கட்சி வேட்பாளர்கள் தனக்கும் பிரச்சாரம் பண்ணச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்கள். எங்கள் 12வது வார்டில் இராமலிங்கம் ஜெயிப்பது உறுதியென்றானபோது உள்ளே புகுந்தார் சுயேட்சை உறுப்பினரான ஏக் பாய்.இவரது பெயர் ஷேக் பாய்,ஆனால் பேச்சுவாக்கில் மருவி இப்படியாகிவிட்டது.அவர்,தெருவில் தவணை முறையில் வீட்டுக்கு வீடு சீட்டுப் பிடிப்பவர் என்பதால் ஜெயிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக வார்டு மக்கள் பேசிக்கொண்டார்கள்.அவருக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் குதித்தார் வின்சென்ட் ராஜ்குமார் என்னும் இளைஞர் . இன்று மதுரையில் எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பை நடத்திக்கிக் கொண்டிருப்பவர் இவர்தான்.கதிர் என தன்பெயரை இப்போது மாற்றிக்கொண்டுவிட்டார் என்று பிறகுதான் அறிந்தேன்.அவரது பிரச்சாரத்தையும் தாண்டி சூடுபிடித்தது எங்களின் பிரச்சாரம். அணல் பறக்கும் கருத்து மோதல்கள் முடிந்து இராமலிங்கம் ஒருவழியாக ஜெயித்துவிட்டார்.ஆயிர சரவெடி,பண்டல் பண்டலான பட்டசுகள் வெடிக்க அவரை வீடு வரை தூக்கிச் சுமந்து கொண்டு வந்து இறக்கினோம்.அன்றைக்கு எல்லோருக்கும் கரம்கூப்பி நன்றி சொன்ன கையோடு இராமலிங்கம் நெடிஞ்சான் கிடையாக என் கால்களில் விழுந்து வணங்கினார்.அவரது நா தழுதழுத்தது.குரல் நடுங்கியது.உணர்ச்சிப் பெருக்கில் அவர் காணப்பட்டார்.அவரது இந்தச் செய்கைதான் என் பிரச்சாரத்திற்கும் மேடைபேச்சிற்கும் கிடைத்த வெளிப்படையான முதல் அங்கீகாரம்.