Sunday, November 13, 2011

கடந்த காலம் சொன்ன கதை





















சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. 90களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால், இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகின்றன. ஆவணத் தரவுகள் அடிப்படையில் சுயசரிதை என்பது வேறுபடும். ஆனால் தமிழ்ச் சுயசரிதைப் பிரதிகளில் ஆவண உசாத்துணை என்பது ஒப்பிற்கு மட்டும் கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வஸ்து. இது வேதனைக்குரிய நிலை. விரைந்து களையப்பட வேண்டிய நடத்தை.
நினைவோடை எழுத்தாக்கத்தில் கனமான அடையாளத்தை உண்டாக்கியவர் சுந்தர ராமசாமி. தான் நெருங்கிப் பழகிய பல ஆளுமைகள் பற்றி எழுத்தில் தன்னால் இயன்றவரை அவர் பதியவைத்திருக்கிறார். அவரின் துணிச்சல் நமது சூழலில் ஓர் அரிய குணம். எழுத்தாளர், தலைவர், சீர்திருத்தவாதி, ஞான ஆசிரியன் ஆகியோர் பற்றிப் பன்முகக் கோணத்தில் பல்வித நோக்கில் ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட வேண்டும். இதைக் கொண்டே புதிய தலைமுறையின் அறிவு நாணயம் பசுமையடையும்; அபிவிருத்திகொள்ளும். அந்தப் போக்கு தமிழில் அறவே இருப்பதில்லை. எழுத்தாளர்கள் பலர் தன் நேர் பேச்சுக்கும் எழுத்திற்கும் மத்தியில் பெரிய பள்ளத்தையே வெட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். பலரைக் காவுவாங்கும் விபத்துப் பகுதியாக அது செயல்படுகிறது. கல்மிஷம் எனும் சராசரி பண்பு படைப்பாளியையும் சேர்த்துக் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து வெதும்புவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. இந்தப் பின்புலத்தோடுதான் சு.ராவின் சகதர்மினி கமலா ராமசாமி அம்மாளின் புத்தகத்தை அணுக வேண்டியுள்ளது.
கமலா ராமசாமி, தனது உதிரி உதிரியான நினைவுச் சேகரங்களை ஒன்று கோத்து நளின மொழியில் எழுதியிருக்கும் நூலின் தலைப்பு: நெஞ்சில் ஒளிரும் சுடர். ஏறக்குறைய சுயசரிதை. கமலாவுக்கு எழுத்தாளராகும் விருப்பம், கனவுகள் இல்லை. தன் வீட்டில் ஒலித்த கணவர் சு.ராவின் அனுசரனையான வார்த்தைகளால் புத்தகம் எழுதும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறார். உன் சிறுவயது நினைவுகளை எழுதிப்பாரேன். பத்து, பதினைந்து பக்கங்கள் எழுதிய பிறகு வாசித்துப் பார்க்கிறேன்” - அவருடைய கணவர் அளித்த உசுப்பல் வார்த்தைகள் இவை. இவற்றைக் கேட்டபின் லேசாக ஆவல் முளைக்கிறது. சு.ரா. என்ற பெரிய கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தன் வாஞ்சையான வாழ்நாளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார் கமலா ராமசாமி. அக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டியது பெரும் எழுத்தாளர் சு.ராவின் தோற்றத்தையல்ல; கூடவே ஒட்டிக்கொண்டு நின்ற கமலா என்ற ஒற்றை மனுஷியின் வழியே உருவான வம்ச விருத்தியின் பிம்பத்தையும் சேர்த்துதான். அதன் பொருட்டுக் கடம்போடுவாழ்வு என்ற தன் சொந்த ஊர்ப் புராணத்திலிருந்து அசைபோட ஆரம்பிக்கிறது அவரின் உள்ளம். அப்படியே ஆலப்புழை பாலப் பருவம், வளர்ந்ததும் தாமிரபரணி நடைபழகும் திருநெல்வேலி சீமைச் சுகவாசம், இடையில் எழுந்த மதுரை குடிபெயர்வு. அங்கிருந்து நாகர்கோவில் புகுந்தவீட்டு சங்காத்தம் எனக் கடகடவென உருள ஆரம்பிக்கிறது.
கமலா ராமசாமி, அவருடைய பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை. உறவு அறுந்துபோகாமல் தூரத்து சொந்தத்திற்குள்ளே அவர் வாக்கப்படுகிறார். அப்பா கடம்போடுவாழ்வில் பெரிய நாட்டாமை. செல்வாக்கு நிரம்பிய வம்சம். தெருவில் ஹரிஜன மக்கள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டு. அந்த உரிமை பிராமணர்களுக்கு அடுத்து பிள்ளைவாள் குடும் பத்திற்கு மட்டுமே உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்தில் கக்கூஸ் வசதிகள் எல்லாம் கிடையாது. ஆகவே தோட்டி என்ற வகுப்பினரே இருந்ததில்லைஎன இவர் சுட்டும் கிராமம் தமிழகத்தின் அச்சு அசலான குக்கிராமம். இவரின் ஜோடிப்புகளற்ற இந்த மாதிரியான சிறு சிறு குறிப்புகளே நூலுக்கு வரலாற்று வலுச்சேர்க்கின்றன. இன்றும் தன் மனத்தைவிட்டு அகலாமல் அடிமனசில் அண்டிக்கிடக்கும் பால்ய நினைவுகளை, அதன் அழகழகான காட்சிகளை, மிக எளிமையாய்ப் போகிறபோக்கில் இவர் குறிப்பிடும் பாணி கவர்வதாக அமைகிறது. உமிக்கரி கொண்டு பல் தேய்த்ததில் தொடங்கி, பெண்பிள்ளைகள் தோண்டியும் கையுமாகத் தெருக்களில் திரியும் சின்னச் சின்னச் சித்திரங்கள்வரை அகண்டு போகிறது இவரது நினைவு.
பூப்பெய்தல் தொடங்கிப் பிள்ளைப் பேறு வரை. வீட்டு உரசல்கள் தொடங்கித் தன் கணவர் விருது வாங்கியது வரை, கைக்குத்தல் அரிசி சமைக்கத் தொடங்கி, கடை அரிசி பொங்கியது வரை. தோழியின் தலையில் பேன் குத்தியதிலிருந்து சினிமா பார்த்ததுவரை. இப்படி எண்ணற்ற ஊர் சோலி கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. காலம், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தன் ஈவு இரக்கமற்ற கால்களால் மிதித்து நொறுக்கி, தூக்கித் தூரக் கடாசிய அத்தனை பழங்கதைப் பண்பாட்டையும் பாவனையற்று எழுத்தில் படம் பிடித்திருக்கிறார் கமலா அம்மாள். பேறு காலத்துக் கை வைத்தியம். அதனுள் காலகாலமாக ஒளிந்துகிடக்கும் சாமான்ய மக்களின் மதிநுட்பம் என விவரிக்கும் இவர், “அம்மாவுக்கும் பெரியக்காவுக்கும் சில மாத வித்தியாசங்களில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அம்மா பிரசவத்திற்கு அக்காவும் அக்கா பிரசவத்திற்கு அம்மாவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள்என்கிறார். இப்படித் தலைமுறை இடைவெளிக்கே உரித்தான பல விஷேசத் தகவல்கள் இவரது பதிவில் அதிகம். மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் வீட்டில் உடன்பிறப்புகள் ஜனனமாவதும் வந்த வேகத்தில் நோவுகொண்டுபோவதும் வாடிக்கையாக இருந்துள்ளன.
இவரது தம்பி ஹரியின் மரணச் சம்பவம் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தங்கை பத்மா, சீமந்தத்திற்காகப் பிறந்த வீட்டுக்கு வருகிறார். சீமந்தம் முடிந்த மறுதினம் அவருக்கு வலிப்பு கொண்டு விடுகிறது. சிறுநீரகப் பரிசோதனையில் அல்பமின்அதிகமாகிவிட்டதாகவும் தாய் - சேய் இரு உயிரில் ஒன்றைத் தான் கரையேற்ற முடியுமென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தாயை மட்டும் காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை உணர்ந்தவர்கள் உயிரற்றுப் பிறக்கவிருக்கும் பச்சிளங்குழந்தையின் இறுதிக் காரியத்திற்கு மண்வெட்டியும் கையுமாக முன்கூட்டியே தயாராகிவிடுகிறார்கள். முடிவில் சுபமாக மண்வெட்டிக்கு வேலையில்லாமல் போனது என்று கமலா ராமசாமி சொல்லும் பாங்கு முதிர்ந்த எழுத்துக்கான அடையாளம்.
1954இல் சு.ராவோடு கமலா அம்மாளின் கல்யாணம். திருமணத்தின் போது ஊரில் மின்சார வசதி கிடையாது. ஆனால் ஜெனரேட்டர் போட்டுத் திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஊர் மக்கள் முகத்தில் ஈ ஆடாத நாள். இந்தத் தம்பதியின் புண்ணியத்தில் ஊர்க்காரர்கள் மின்விளக்கை முதன் முதலாகக் கண்கொட்டப் பார்த்து அலுக்கிறார்கள். இவ்வளவு தடபுடலாகக் கரம்பிடித்த தன் மனைவிக்கு சு.ரா. முதன்முதலாக வாங்கிக்கொடுத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு ஜதை செருப்பு. அது தேய்ந்துபோய் இன்று மாமாங்கம் கடந்துவிட்டது. மனம் தேயாது இன்றைக்கும் சொல்லி மகிழ்கிறார். திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்கு வந்திட்ட பின்பும் டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கப்போகிறார் கமலா ராமசாமி. இவர் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த கதை சுவாரஸ்யம் நிரம்பியது. அதே பள்ளியில் சு.ராவின் தங்கை சாரதா எட்டாம் வகுப்பு மாணவி. அண்ணியும் நாத்தனாரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க இந்த நாளில் யாருக்கு வாய்க்கும்? இந்தப் பொருந்தா சகவாசக் கதைகளைக் கொண்டு ஒரு மிகப் பெரிய காலமாற்றத்தை நம்மால் மதிப்பிட்டு உணர முடிகிறது. தன் மனைவி பற்றி சு.ரா. ஒரு கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: செங்கமலம் என்ற கமலா, மாராசி புண்ணியத்தால் தான் மனிதன்போல் நடமாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எங்களுக்கு எவ்வளவோ மேடு பள்ளங்கள். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன். அப்போதெல்லாம் அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்திருக்கிறாள்” - கணவரின் இன்பமூட்டும் இதமான சொற்கள். ஒரு எழுத்தாளனின் மனைவி லௌகீக கோடு தாண்டாமல் காலம் முழுக்க அடுப்படிக் கரித்துணியை மட்டுமே கட்டி அழுத காலத்தில் சு.ராவின் தாராள குணம் மனைவிக்குச் சரி பங்கு வழங்க முற்படுகிறது. கமலாவின் எழுத்தே அதற்குச் சாட்சி. அதில் அவருக்குச் சாதக பாதகங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் சு.ராவின் மெனக்கெடல் கூடுதல் எடை நிரம்பியது என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் புரியவைக்கிறது.
பாரதிக்குத் திருமணமான நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து, வீட்டில் ஊஞ்சல் வைபவம். சகலரின் முன்னிலையில் உட்கார்ந்து மனைவியைப் புகழ்ந்து ஓர் ஊஞ்சல் பாட்டுப் பாடுகிறான் பாரதி. பாட்டு முடிந்த கையோடு ஊராருக்கு விளக்க உரை என நீளுகிறது முண்டாசுக்காரன் பேச்சு. இச்சம்பவத்தைத் தன் பாரதியார் சரித்திரத்தில் உச்சுமுகர்ந்து எழுதுகிறார் செல்லம்மா. இல்லறத்தைத் தாண்டி சம்சார பந்தத்தைத் தூக்கி நிறுத்தப் போராடிய தன் உத்தமக் கணவன் இறந்த பிற்பாடு செல்லம்மா எப்படிப் பேசினார் தெரியும்தானே? 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் என்கணவர்என்ற தலைப்பில் அவரது உரை இவ்வாறு பதிவானது: காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போட வேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாழலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்துவிடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லைஎன வெந்தழல் சொற்களில் வேகுகிறார் செல்லம்மா. மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடிஎன்று வைரக் கிரீடம் பதிக்க முற்பட்டவன் மீது விழுந்த தர்ம அடி இது. அவ்வாறே காரல் மார்க்ஸுடனான வறுமை வாழ்க்கை பற்றி ஜென்னி மார்க்ஸ் குறிப்பிட்ட வரிகள் உலக பிரசித்தம் பெற்றவை: குழந்தைகள் பிறந்தபோது தொட்டில் வாங்க காசில்லை. அவர்கள் இறந்தபோது சவப்பெட்டி செய்யப் பணமில்லை.இப்படி ஓர் ஆளுமையைக் குற்றம் குறையோடு கணக்கிட முடியாமல் தவித்த மனைவியர்கள் மத்தியில் சு.ராவின் மனைவி வஞ்சனை கொள்ளாமல் வாக்குமூலம் வழங்கியிருப்பது தமிழில் இதுவே முதல் ஈடு. சு.ராவோடு தன் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைக் குறிக்கும் அவரின் வாக்குமூலம் இப்படி விரிகிறது. எனக்கும் சு.ராவிற்கும் உயர ஒற்றுமை இல்லை. சு.ரா.சொல்லும்படி ஆரோக்கியமானவர் இல்லை என்றாலும் எங்கள் இருவருடைய மனநிலையும் முதலிலிருந்தே இணைந்து போகக் கூடியதாகத்தான் இருந்தது.
நிறைய விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருவரும் இருந்திருக்கிறோம். நாள் செல்லச்செல்ல எங்களுடைய அந்நியோன்யம் கூடிக்கொண்டே போயிற்று. அதன்பின் என் உயரக் குறைவோ அவரின் ஆரோக்கியக் குறைவோ எங்கள் மனத்தில் இம்மியளவுக்கூட இல்லாமல் காற்றில் கரைந்தேபோயிற்றுஎன்கிறார். இந்தப் புரிதல்தான் கமலா ராமசாமியின் மூல ஆதாரம். சு.ராவைப் பற்றித் தமிழ் வாசகர்களிடம் ஏனைய சித்திரங்கள் புகை போலச் சுற்றுகின்றன. அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சில கற்பிதங்கள், வழுவல்கள் உள்ளன. அவர் ஒரு பணக்கார எழுத்தாளர். அவரது குடும்பச் சூழல் அவரை சௌகர்யமாக வைத்திருந்தது. சொந்த ஊரில் அவரின் அப்பா பெரிய ஜவுளிக் கடை அதிபர். பணமுடை இல்லாத குடும்பம். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். அத்தனை புனைவுகளையும் கலைத்துப்போடுகிறார் கமலா அம்மாள்.
அப்பாவின் கணக்குப்படி சு.ரா. ஒரு பரோபகாரி. சொத்து சுகம் சேர்க்க விரும்பாத சரா சரி. வாயில்லாப் பூச்சி. ஜவுளிக்கடை வியாபாரத் தந்திரங்களை அறியாத அம்மாஞ்சி. தேக பலமில்லாத சவலை. ஏறக்குறைய இந்த வார்த்தைகள் தோற்றுவிக்கும் ரூபத்தில்தான் அப்பாவுடைய கண்களுக்குக் காட்சி தந்திருக்கிறார் சு.ரா. அதை நாசூக்காக எடுத்தியம்புகிறது கமலாவின் எழுத்து. உளப்பூர்வமாக சுந்தர ராமசாமிக்கு வியாபாரத்தைக் கவனிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. தறியில் பிசிறும் நூலாய்ப் பிரிந்திருக்கிறார். விடாமல் உள்ளே கோத்து கோத்து அடித்திருக்கிறது அப்பாத் தறி. இவற்றுக்கிடையில் ஊடாட்டம் கிடந்து தலையை உருட்டுகிறது. அவருக்குள் எழுத்தாளன் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் செய்யப் பிறந்தவன் அல்லஎன்று அலுப்பாகப் பேசியிருக்கிறார். மறுத்திருக்கிறார்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தேய்வழக்கு சு.ராவுக்கும் பொருந்தும் தானே? பலரையும் போல அவருக்கும் சில அசட்டுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. மனைவியருக்குத் தயாராகும் பிரசவ லேகியத்தை விரும்பிச் சுவைப்பது. குளியலறைக்குள் தாழிட்டுக்கொண்டு சினிமா பாட்டை முணுமுணுப்பது எனச் சகல சந்தோஷங்களையும் சுவைக்க விரும்பிய அசல் கலைஞனின் அசரிரீகள் பல. பொதுவாக சு.ரா. பதினொன்று மணிக்கு மேலே எழுத ஆரம்பிப்பார். ஒன்றரை வாக்கில் முடித்துக்கொண்டு எழுவார். காலையில் எட்டரை ஒன்பதாகும் படுக்கையை மடிக்க. வீட்டில் அப்பாவுக்கு பயந்து ஒரு தப்பான காரியத்தை செய்யும் குற்றவுணர்வோடு தான் அவர் தன் கதைகளை வீட்டில் மறைத்து வைத்து எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்ததும் வீட்டுப்பெண்களிடம் - அப்பா இல்லாத சமயம் பார்த்து தன் கதைகளை வாசித்துக்காட்டுவது அவரது இயல்பு” - இவ்வாறு இவர் கொடுக்கும் குறிப்புகள் முழுக்க இதுவரை நாம் அறியாத சுந்தர ராமசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சு.ராவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றிய பதிவுகள் இதில் உள்ளன என்பது வாஸ்தவம்.
ஆனால் அதே சமயம் சில விடுபடல்களும் பதிவில் உள்ளன. கிருஷ்ணன் நம்பி, ராஜமார்த்தாண்டன், எம். எஸ்., அ. கா. பெருமாள், ஜெயமோகன், கனிமொழி, அம்பை, சல்மா இப்படிப் பலர். ஆனால் அவை நம் ஆவல் மிகுதியின்பால் எழும் தத்தளிப்புகள். எழுதியிருக்கலாமே எனத் தொனிக்கும் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கலாம். அனைத்தையும் சேர்த்து அடுத்த பதிப்பில் இவர் எழுதி விரிவுபடுத்தலாம். செல்லம்மா பாரதிக்குப் பிற்பாடு நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருடைய மனைவியின் வரலாற்றுப் பிரதி என்பதாலேயே இந்நூலை நான் கவனப்படுத்த விரும்பினேன். இனி, வரும் காலத்தில் பெண்ணிய வாசிப்பில் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சு. ராவின் வீட்டிற்கு ம. பொ. சியின் வருகை, கி. ராஜாநாராயணன், கு. அழகிரிசாமியின் குடும்பத்தோடான விஜயம். நா. பாவின் வாத்சல்ய தங்கல், லா. ச. ராமாமிருத்தின் அடுக்களை ஒத்தாசை, ஜானகிராமனின் வாஞ்சை நிரம்பிய வாசம், வண்ணநிலவன் அடிக்கொருதரம் எட்டுவைத்துப் பார்க்க வந்த பந்தம் என்று பலரின் வருகையைச் சிலாகிக்கும் கமலா ராமசாமி பிரமிளின் கோணல் புத்தியைக் குறிபார்த்துக் கொட்டிவிட்டு நகர்கிறார். தன் கணவரின் அதே எண்ணத்தை மறுபடியும் ஆழப் பதியவைக்கிறார். ஆனால் ஜி.நாகராஜன் உரசலைப் போகிற வேகத்தில் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை என்றாலும் இவரது நூலில் குறைகொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மனிதர் பிரமிள் மட்டுமே. இதைத் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் யாருக்கும் பொல்லாப்பாகாமல் கமலா ராமசாமி அம்மாள் வஞ்சனையற்ற வாக்குமூலத்தை வழங்கி விட்டுத் தப்பியிருக்கலாம்.


நெஞ்சில் ஒளிரும் சுடர், ஆசிரியர்: கமலா ராமசாமி பக். 160. நன்கொடை:100 (2011)வெளியீடு , காலச்சுவடு அறக்கட்டளை, 669 கே.பி.சாலைநாகர்கோவில் 629001 )
நன்றி:காலச்சுவடு நவம்பர் 2011

No comments: