Friday, May 27, 2011

திரு என்ற ஒரு உரு!




ஒவ்வொரு ஊருக்கும் உள்ள விஷேம் என்ன தெரியுமா? பரந்த விரிந்த தார்ச் சாலையா? இல்லை.பெரிய பெரிய பங்களாக்களா?இல்லை.ஒண்டு ஒடிசலாக ஒடுங்கிப்போய் கிடக்கும் குறுக்குச் சந்துகள்தான்.பராமரிப்பு அற்றுக் கிடக்கும் மூத்திர சந்துகள்தான். பார்க்கவே பரிதாபமாய் வெளிறிப்போய் வெளிச்சமில்லாமல் கிடக்கும் பாமரர் தெருக்கள்தான். ஒரு ஊரின் அடையாளங்கள் அழகாய் அரும்பிக்கிடக்கும் இந்த வீதிகளை பற்றி வரலாறுகள் குறைவு. அந்தக் குற்ற உணர்வு நமக்குள் மண்டிப்போய் இருப்பதால்தான் வீதிக்கு வீதி வரலாற்று நாயகர்களின் பெயர்களை பலகைகளாய் செய்து மாட்டி வைக்கிறோம். அசைவில்லாமல் குன்றிப்போய் கிடக்கும் முட்டுச்சந்துக்கு கூட ஒரு முகமலர்ச்சி இருக்கிறது. இந்தக் குறுக்குச் சந்துகள் தனக்கென்று ஒரு வரலாற்று தலைவனின் பெயரை தாங்கிக்கொண்ட பிறகு இறுமாப்பைக் கூட்டிக்கொள்கின்றன. விருத்தாசலத்தில் உள்ள ஒவ்வொரு தெருவும் எனக்கு அத்துபடி. விரல் நுனியில் வைத்து விளையாடி இருக்கிறேன்.என் கால் நரம்புகளைப்போல அவை இப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டு வருகின்றன.

கவரத்தெரு, சந்நதி தெரு, புதுப்பேட்டை, ஜங்ஷன் ரோடு, அம்பேத்கர் காலனி, கஸ்பா தெரு,லூக்காஸ் தெரு, ஆலடி ரோடு, இரட்டைத் தெரு, அய்யனார் கோவில் வீதி, வடக்கு வீதி, கைக்கோளார் வீதி,குசக்கடை தெரு,வீரப்பாண்டியன் வீதி, திரு.வி.க.தெரு, அங்காளம்மன் தெரு, செல்லியம்மன் தெரு,கடலூர் ரோடு,பென்னாடம் ரோடு,ராமச்சந்திரன் பேட்டை என்று விருத்தாசலம் அளவான தெருக்களை மட்டுமே கொண்ட ஒரு சின்ன நகரம். நகர்கள் எல்லாம் 90களுக்கு பின்னால் முளைத்த புது முகங்கள். இதில் அண்ணா நகரும் காந்தி நகரும் விதிவசத்தால் முந்திப் பிறந்தவை.

பாலக்கரை கடைவீதியில் போலீஸ் டேஷன் இருந்த பழங்காலத்துக் கட்டிடத்தில் தான் இன்று மகளிர் காவல் நிலையம் வந்திருக்கிறது.அந்தக் காவல் நிலையத்தை ஒட்டியது போல இரண்டு பக்கங்களிலும் இரண்டு தெருக்கள்.இதில் கொஞ்சம் பெரிய தெரு இரட்டைத் தெரு.நேராக மணிமுத்தாற்றங்கரைக்கு போய் முட்டும். படித்துறை எட்டும் அளவிற்கு ஆற்றுத் தண்ணீரோடி நான் பார்த்திருக்கிறேன்.பல அய்யர்கள் ஸ்நானம் பண்ணிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதை பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க அய்யர்கள் வசிக்கும் அக்ரஹாரம்.எல்லா வீடுகளும் நாட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டு பெரியத் திண்ணைகளுடம் காட்சித் தரும்.வீட்டின் வர்ணம் கூட ஒன்றுபோலவே இருக்கும்.வெள்ளைச் சுண்ணாப்பின் நடுவே வெளிறிய காவிப்பட்டைகளை அடித்து வைத்திருப்பார்கள். விருதகிரீஸ்வரர் சிவபெருமானுக்கு சேவகம் பண்ணி அத்தனை அய்யர்கள் காலத்தைக் கழித்தவர்கள். இதுதான் நித்ய ஜீவனம். அதிகம் மக்கள் புழக்காதத் தெரு. மெயின் சாலையான கடைவீதிலிருந்து பிரியும் இந்த இரட்டைத் தெருவின் முனையில் சில காப்பிக்கடையும் காப்பித்தூள் விற்கும் கடைகளும் இருந்தன. கும்பகோணம் நரசுஸ் காப்பி,முத்துராம் காப்பித்தூள்,அம்மாள் காப்பி,லியோ காப்பி, என்ற பெயரில் ஏகப்பட்டக் கடைகள். காப்பிக் கொட்டைகளை அரைக்கு சத்தம் அங்கே எழும் வாசம் எல்லாம் வீதியை செழிப்பாக்கும். டிகிரி காப்பி,ஜிக்ரி காப்பி என்று பல பேதங்கள்.அவ்வளவும் அய்யர்கள் சரக்கு. காப்பி என்பது மருந்துக்கு சாப்பிடுவோம்.என்றாவது ஒருநாள் எங்களுக்கு வாய்க்கும் பேரு.கொடை. அக் காப்பிக்கடைகளுக்கு முன்னால் ஒரு சைக்கிள் நுழையும் அளவுக்கு சின்ன பொது மூத்திர சந்திருந்தது பிரியும்.சந்தென்றால் தெருவே சந்து.பெயர்:ஜெயில் தெரு.பேருக்கு தக்க தோற்றமும் உண்டு.அசப்பில் ஜெயில் போல வீட்டு மதில்கள் உசந்து உசந்து நிற்கும். இச்சந்தில் கவரிங் நகைகளுக்கு கிலிட் பிடிக்கும் கடைகள் இருந்தன.சேர்ந்தார் மாதிரி டைலர் கடை, அடகு கடை என்றும் இருந்தன. இப்பகுதிக்குள் நுழையவே அடிவயிறு குமட்டும். கிலிட் பிடிப்பவர்கள் சின்னச் சின்ன கண்ணாடி பாட்டில்களில் மின் கம்பிகளை போட்டு ஏதேதோ செய்வார்கள். சீராகப் பாயும் மின்னாசரம் நகைகளை அழக்காகும் கலை மாற்றம் அரங்கேறும் இடங்கள்.சில்வர் பேஷன்களில் புங்கங்கொட்டை ஊர வைத்து அதை இரும்பு பிரஷால் போட்டுத் தேய்ப்பார்கள்.நுரைப் பொங்கிகொண்டு வரும். பார்க்கப் பார்க்க நம் ரசனை அடங்காது. வெள்ளிக்கொலுசுக்கு அழுக்கெடுப்பது.கவரிங் செயினுக்கு மினுமினுப்புக் கூட்டுவது என்று பல மாயாஜாலம் நடக்கும்.

இந்த மூத்திர வாடைக்கு இடையில் எப்படிதான் இவர்கள் பணி செய்தார்களோ என்று படிப்பவர்கள் ஐயப்படலாம்.அங்கேதான் விஷயம் இருக்கிறது. மூத்திர வாடையை உள்ளே வர விட்டாமல் தடுத்துக்கொண்டு நிற்கும் காப்பிக் கடைகள் இவர்களுக்கு காலம் காலமாய் சேவகம் பண்ணிக்கொடிருந்தன. இந்த காப்பி வாசனையில் மூத்திர வாடை மூழ்கடிக்கப்பட்டது.

இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பெரியார் நகர், ஊரில் 90களின் பிற்பகுதியில் பிறந்த நகர் பகுதி. இந்தப் பகுதியில் மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்களும் வசதி படைத்த வர்கத்தினரும் மாதச் சம்பளம் வாங்கும் ஆஃபீஸர்களும் வந்து புதியதாக குடியேறி புழங்க ஆரம்பித்த பின்னால் அழகான நகர் பகுதியாக ஆனது. அதற்கு முன்னால் அந்தப் பகுதியே வயல்வெளியாய் விரிந்துக் கிடந்தது.இன்று அத்தைனையும் அழகிய மனைகள். குறிஞ்சித் தெரு,முல்லை தெரு,செம்மருத்தி தெரு, மல்லிகை தெரு, சூரிய காந்தி தெரு, ரோஜா தெரு, கனகாம்பரத் தெரு, சாமந்தி பூத் தெரு, அல்லி தெரு, தாமரை தெரு என்று வடக்கு பெரியார் நகர் முழுக்க மலர் பெயர்களாய் தாங்கி நின்ற நேரத்தில் தெற்கு பெரியார் நகர் முழுக்க கம்பர் தெரு, வள்ளுவர் தெரு, அவ்வை தெரு, இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, நக்கீரன் தெரு, சேக்கிழார் தெரு, வள்ளலார் தெரு,அப்பர் தெரு, திருஞானசம்பந்தர் தெரு,ஆண்டாள் தெரு,நாலடியார் தெரு என்று தமிழிலக்கிய புலவர் பெயர்களை தாங்கி நின்றன. 90களில் விளக்கு வைத்த பிறகு இவ்விடத்தில் கால் வைக்கவே மக்கள் அஞ்சுவார்கள்.அந்தளவுக்கு ஆள் நடமாட்டமில்லாதப் பகுதி.இன்று அப்படியில்ல்லை.ஊரின் முக்கிய பகுதியாக மவுசு கூடி நிற்கிறது. எனக்கு தெரிந்து 89களில் இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட அகதிகளை இந்த மயானக்காட்டில்தான் கொண்டு வந்து டேரா அடித்து குடியமர்த்தினார்கள். இன்றைக்கும் அரசு விவாசாய பொருட்களை கொள்முதல் பண்ணும் கமிட்டி இங்கேதான் உள்ளது.அதன் பின்னால் கிடந்த கேட்பாரற்ற நிலத்தியே அகதிகள் வசிப்பதற்கென்று வசதி பண்ணிக்கொடுத்தது தமிழக அரசு.விளக்கு வசதிகள் இருந்ததாகக் கூட நினைவில்லை.

நான் புதுப்பேட்டையிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்பபடித்து வரை படித்தேன்.அப்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் பெயர்ந்தேன். எட்டாம் வகுப்பில் பாதிப்படிப்பு முடியும் நேரத்தில் திடீரென்று பல பிள்ளைகள் வந்து உட்கார்ந்தார்கள்.அவர்களின் பேச்சில் ஒன்றும் தமிழ் இருப்பதற்கான தடயமில்லை. கனத்த வார்த்தைகளை இலகுவாக பேசிய மாணாக்கர்களை பார்த்து நாங்கள் பீதியுற்றோம். அவர்களின் ஒரு வார்த்தைக்கூட எங்களுக்கு ஒட்டவில்லை.ஒப்பவுமில்லை. அரசு இலவசாமாக வழங்கிய காக்கி அரை டவுசரையும் மட்டமான வெள்ளை உடுப்பையும் கட்டியிருந்த எங்களுக்கே அவர்கள் பரதேசி கோளத்தில் தென்பட்டார்கள். அவர்களோடு ஒட்ட எங்களுக்கு தனி பயிற்சி வேண்டியிருந்தது.ஆசிரியர்களும் இந்த இடைவெளியை கலைய கால்கடுக்காய் நின்று கத்தினார்கள்.

இந்தப் பள்ளியில்தான் திருநிறைச்செல்வன் என்று ஒரு பையன் எனக்கு நண்பனான்.அவன் ஈழத்தவன்.பாதி காலம் பதிவேட்டில் பெயர் பதியும் வரை என்னோடு சத்துணவை சரிபாதியாய் பகிர்ந்தவன். அவனோடு வந்தப்பிள்ளைகள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து அந்த அரசு தங்களை அடித்து விரட்டிவிட்டதாகவும் கடல்வழியில் கள்ளத்தனமாய் இங்கே வந்துவிட்டதாகவும் இரவில் கடலை கடக்கும் போது கரையென்று நம்பி இறங்கியபோது அது தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் பின் விடியும் வரை கடல்நடுவிலேயே நின்று வெளிச்சம் பார்த்த பிறகும் தமிழ்நாட்டை அடைந்ததாகவும் எங்களுக்கு கதை சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. சமைக்ககூட பண்ட பாத்திரங்கள் இல்லாமல் உண்மையில் கஷ்டப்படுவதாகவும் சொன்னான்.நாங்கள் நம்பவில்லை. உங்களின் வீடு எங்கே என்றேன். ஓலைப்பாய் அடித்த குடிசையில் கும்பலாக தங்குகிறோம் உங்களைப் போல தனி வீடெல்லாம் இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.உங்களுக்கு இங்கே சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா?என்றோம்.இல்லை என்றான்.நாங்கள் நம்பவில்லை.இப்படி சந்தேகம் இன்னொரு தலையா கனத்தது எங்களுக்கு. வேற நாட்டுக்காரன் எப்படி தமிழ் பேசுவான்? மண்டையை சுற்றிய சந்தேகம் இது!

திருவின் கதைகளை கேட்ட நாங்கள் அவனது வீட்டை போய் பார்க்கத் தீர்மானித்தோம். அவன் அது நல்லதல்ல;நீங்கள் எல்லாம் உள்ளே வரமுடியாது.போலீஸ் பிடித்துக்கொள்ளும் என்றான்.திரு வாட்ட சாட்டமாக இருப்பான்.எட்டாம் வகுப்பு தோழனுக்கான எந்த அடையாளத்தையும் அவன் உடம்பில் பார்க்க முடியாது. பாதி ஆண் பிள்ளைக்கான லட்சணங்கள் அவன் சரீரத்தில் சடுகுடு ஆடின.ஆகவே நீதான் பலசாளியாயிற்றே போலிஸை அடித்து சாய்த்துவிட்டு எங்களை அழைத்துக்கொண்டுபோய் காட்டு என்றேன்.சிரித்தான்.

எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவனது குடிலுக்கு போவது என்பதில் திடமாய் நின்றோம்.மறுநாள் கட்டாயம் போகலாம் என்றான். எங்களின் புலனாய்வுக்கு நல்லத் தீனி என்று அன்று பள்ளியிலிருந்து கலைந்திட்டிடோம். அடுத்த நாள் வகுப்பில் பிரேயர் முடிந்து உள்ளே நுழைந்ததும் இன்னைக்கு சாயுங்காலம்..கட்டாயம் போகணும்என்றேன். ம் என்று கண்ணசைத்தான். திருவை போல பல பிள்ளைகள் வந்திருப்பதால் பள்ளியின் இட நெருக்கடி அதிகமானது.அதோடு அவர்கள் யாரும் சரிவர பள்ளிக்கு வரமாட்டேன் என்கிறார்கள் என்றும் அவர்களை ஒன்றாக கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச்.எம்.வீரமணி விரும்பினார். அழைத்து விசாரித்தபோது குடம்குடமாய் கண்ணீர் விட்டார்கள் பிள்ளைகள்.அவ்வளவு வாழ்வியல் நெருக்கடிகள். மாற்றுக்கு துணியில்லை.வீட்டிற்குள் சமைக்க விறகில்லை என்று அழுது புலம்பினார்கள்.பட்டினிக்கிடக்கிறோம் அய்யா என்றார்கள். தமிழகத்து பல மாணவர்களை அழைத்து அவரவரர் வீட்டில் உள்ள பழைய உடுப்புக்களை எடுத்து வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார் தலைமை ஆசிரியர். நாங்கள் வீட்டில் இருந்ததை கொண்டுவந்து கொடுத்ததை தவிர்த்து ஊரிலுள்ள பல வீட்டிற்கு ஆசிரியரின் துணையோடு யாசகம் கேட்டு படியேறினோம். நிறைய உடுப்புகள் கைவசம் வந்தன. அள்ளிக் கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி அகதிகள் முகாமிற்குள் நுழைந்தோம். இரண்டாள் உருப்படியாக உறக்கம் கொள்ளமுடியாத துளியோண்டு இடத்தில் பத்து ஆட்கள் பட்டியில் அடைப்பதைப்போல அடைத்து வைத்திருந்தார்கள். முள் கம்பி இல்லாத முகாம்.காலைக் கடன் கழிக்க அரசு தரப்பில் கட்டிக்கொடுத்திருந்த கழிப்பறையின் வாய்கள் நிரம்பி மனித மலம் மலையாய் குவிந்திருந்தது.அக்காட்சிய கழிவறையை பார்த்ததும் குடலை பிறட்டும் துர்நாற்றம்.எங்கும் சுகாதாரம் பேச்சுக்கும் இல்லை. திரு மீது இறக்கம் கவிழ்ந்த தருணம் அது.

இலங்கையில் இருந்து வந்த இவர்கள் பிழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததால் பள்ளியை பாதியிலேயே பல பிள்ளைகள் விட்டுவிட்டார்கள். தாய்மார்கள் வீட்டு வேலைகளுக்கும் தகப்பன்மார்கள் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்கும் வேலைக்குப் போக ஆரம்பித்தனர்.ஒத்தாசைக்கு பிள்ளைகள் சுண்ணாம்பு வாளியை சுமக்க வேண்டிய நிலை.ஆகவே பள்ளியின் பக்கம் தலைவைக்காட்ட நேரமில்லாமல் பல மாணவர்கள் எங்களைவிட்டு பிரிந்தார்கள்.

இலங்கயின் தமிழ் பாஷை பச்சையாய் இருந்தது எனக்கு பிடித்திருந்தது.அதோடு சாகஸம் கொண்ட திருவின் கடல் பயணக் கதைகள் என்னை ஈர்த்தன.ஆகயால் திருவின் வீட்டிற்கு திரும்பத் திரும்ப நடையாய் நடந்தேன்.அப்படி போய் வந்த நாளில்தான் அவன் தங்கை மார்பளவு கடல்நீரில் மூழ்கு செத்தக்கதையை என்னிடம் சொன்னான். முகாம் முழுக்க உள்ளவர்கள் சுண்ணாம்படிக்க கூலி வேலைக்கு போனார்கள்.திருவின் வீட்டார் மட்டும் சுண்ணாம்பு அடிக்க போகவில்லை.பூர்வீகமாய் அவனின் குடும்பம் மீனவக் குடும்பம்.ஆகவே கடலூர் ரோட்டிலுள்ள டிபி பங்களாவிற்கு முன்னால் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து மீன் வியபாரம் பண்ண ஆரம்பித்தார்கள். மீன் மார்கெட் என்றால் அது பாலக்கரையிலுள்ள காய்கறி மார்கெட் பின்புறம்தான் இருந்தது.ஊரின் மீன் வியபாரிகள் முழுக்க அங்குதான் கடைப்போட்டிருந்தார்கள். திடீரென்று முளைத்த இந்த சிலோன் மீன் கடையில் ஐஸ் போடாமல் கடலூரிலிருந்து மீன்களை கொண்டு வந்து உடனுக்கு உடன் விற்பனை செய்ததால் வியபாரம் சூடு பிடித்திருந்தது.உள்ளூர் வியபாரிகள் எடைப்போட்டு மீன்களை விற்கும் காலத்தில் இவர்கள் கொடுக்கின்ற காசிற்கு கைநிறைய கூடையில் மீன்களை அள்ளிப்போட ஆரம்பித்தது ஊர் மக்களை இவர்கள் பக்கம் திரும்ப வைத்தது. நாளுக்கு நாள் நல்ல வியபாரம்.ஓரிருக் கடைகள் காலப்போகில் கால் டஜன் அரை டஜன் என்று வளர்ச்சியடைந்தன. உள்ளூர் வியபாரிகளுக்கு இருப்புக்கொள்ளவில்லை.இவர்களால் தங்களின் இலாபம் குறைக்கிறதென்று இலங்கைக்கார மீனவன் கையில் தராசை தந்தார்கள் ஊர் வியபாரிகள்.அப்படியும் கூட்டம் குறையவில்லை. ஊர் வியபாரிகளுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு மக்கள் சிலோன் கடை பக்கமே தலைவைத்து படுத்துவிட்டனர். நாடோடி மன்னனில் எம்ஜிஆர் செல்வந்தர்களை எதிர்த்து சண்டையிடுவாரில்லையா அதேபோல் ஊர் வியபாரிகளை எதிர்த்து யுத்தம் செய்தார்கள் இலங்கையாட்கள்.கோபத்தின் எல்லைய மீறிய பல வியபாரிகள் சிலோன் கடைக்காரகளிடம் இருந்த இடத்தை அபகரிக்க ஆரம்பித்தனர். தெருவோரக்கடைதான் என்றாலும் நிலத்திற்கு சொந்தமில்லாதவர்கள் என்று விரட்டப்பட்டார்கள். அங்கே இருந்து நகர்ந்துபோய் தங்களின் வியபாரத்திற்கு வேறு இடத்தை கட்டியெழுப்பினார்கள்.அங்கேயும் வம்புகள்.மாமுல்கள் என்று நெருக்கடிகள் தொடர்ந்தன. சின்ன அளவில் இருந்தவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்கள்.இப்போது சுரேஷ் தியேட்டர் பகுதியில் உள்ள மீன்கடைகள் முழுக்க உள்ளூர் ஆட்கள் கைக்கு வந்துவிட்டன. இலங்கை வியபாரி இன்று வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும் தொழிலாளியாகிவிட்டான். வாழ்நாளில் ஒரு சைக்கிள் வாங்குவது அம்மக்களின் உச்சபட்ச கனவாகிவிட்டது. பெரிய பிழைபொன்றுமில்லை.சீரான வருமானத்தில் வயிற்றைக்கழுவுகிறார்கள்.எங்கள் ஊரில் எங்கோ ஒரு முளையில் என் பால்ய நண்பன் திருவும் அவனது குடும்பமும் இன்று சுண்ணாம்பு அடித்துக் கொண்டுருக்கலாம்.அல்லது ஊர் எல்லையைக் கடந்து கண் காணாது இடம் பெயர்ந்திருக்கலாம்.உண்மையாய் திருவின் முகம் என் கண்ணிற்கு முன்னால் இன்றைக்கும் நிழலாடுகிறது. அவனது குடும்பமும்தான்.அவனை பார்ப்பேனா தெரியவில்லை.என் ஆயுளுக்கும் அவனை பற்றி அவனது குடும்பத்தை பற்றி விரும்பக்கூடாத செய்தியை கேட்டுவிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

8 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மனசு கனக்கிறது.

umavaratharajan said...

துயரங்கள் எங்கு போனாலும் விரட்டிக் கொண்டுதான் இருக்கும் போலும்.uma

Anonymous said...

சொந்த ஊரைப் பற்றி எழுதுவதில் உள்ள சுகமே சுகம்.யாரும் மறு கேள்வி கேட்க முடியாதே

கடற்கரய் said...

நன்றி ரத்னவேல். இந்த உறைவை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.செய்தேன்.

கடற்கரய் said...

உண்மைதான் வரதராஜன்.அம்மக்களின் ஆறத்துயம் அடிமனதில் கனக்கிறது இன்னும்!

கடற்கரய் said...

Anonymous அதற்காக பீலா,கப்ஸா இல்லை இந்தக் கதைகள்.நேரில் நீங்கள் ஆய்வே நடத்தலாம்.அத்ற்கு உங்களுக்கு கொஞ்சம் தைரியம் தேவை

Garunyan Konfuzius said...

ஒருபகுதி மக்களின் துயர வாழ்வையாவது வெளிச்சம்போட்ட உங்கள் பதிவுக்கு நன்றிver

கடற்கரய் said...

Garunyan நன்றி