Wednesday, February 11, 2009

பதியப்பட வேண்டிய வரலாற்று ஆவணம்





சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் ஒரு நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்களே கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை மிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேர கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல.ஹரப்பா மாதிரி நீண்ட பாரம்பர்யம் மிக்க ஒருகுடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குதான் இப்படி சமகால பிரக்ஞையற்று கதை சொல்லிக்கொண்டு திரியப் போகிறோம் என்பது ஒருகேள்வி. ஒவ்வொரு நாளும், பொழுதும் ஓர் ஆவணமாக மாறக்கூடும்.அதை சமீப கால சான்றுகள் நிறையவே நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதைஇந்த வருட புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.
முப்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றிய பதிவுகள் எத்தனை நம்மிடையே எழுதப்பட்டு இருக்கின்றன? இதன் வளர்ச்சிகுறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன?முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என்று அழைத்தபோதுதமிழ்மக்களின் மனநிலை,எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதெல்லாம் ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்றை வெளியிட்டதாக அறிந்தேன்.ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை.இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியைஅச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் கூவிக் கூவி அழைத்து கொண்டிருக்கிறது.இதுபோன்ற கூத்துகள் எல்லாம் இங்கு மட்டுமே நடக்கக்கூடியவை.சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் ”காசட் கல்ச்சர்”என்ற புத்தகத்தை பார்த்தேன். அதில் அவர் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அதுஒலிக்கும் போது ” இந்தியன் சைக்கி ” என்பது எப்படி செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார்.அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடா கலாச்சாரத்தைப் பற்றிதனி நூல் ஒன்றை எழுதி இருக்கிறார்.அதில்” தமிழ் சைக்கி” எப்படி செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருந்தார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படி பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதை புவிசார் காலனியவாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின்துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டி இருக்கிறது. எரிக் மில்லர் என்ற இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர்.சமகால சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டு கண்ணகியின் இடப்பெயர்வில் வரும்வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் அவர் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது.
”பட்டாங்கு யானும், ஓர், பத்தினியேம் ஆகில், ஒட்டன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையும்! என்பட்டிமையும் காண்குறுவாய், நீ” என கண்ணகி உரைப்பதுநமக்கு வெறும் செய்யுள் மட்டுமே.சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவதுஏனோ தெரியவில்லை. இப்படி வரலாற்றில் நெடுக பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கிச் சிக்கலுற்றிக்கிறது நம்முடைய வரலாறு.பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கி கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப் பெறக்கூடியதல்ல; மாறாக ஒரு தொடர்ச் செயற்பாடு.”வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலானவிவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம்.விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன”என்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்,புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள்,சமூகவியல் வரலாற்றாசிரியர்கள்,அரசியல் வரலாற்றாசிரியர்கள் என்று கிளைத்து இத்துறை வளரவில்லை . ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்ப்புணர்வையே கடைப்பிடிக்கிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜன்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள்விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்ற தகவல்நம்மைச்சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத்துறையே மூடப்பட்டுவிட்டது என்றதகவல் எத்தனை பேரை சுடக்கூடியதாக இருந்திருக்கும்.இதையெல்லாம் முன்வைத்து புத்தகக் காட்சி பற்றியும் அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோர்த்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் ”சென்னைப் புத்தகக் கண்காட்சி; தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்து நாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள் வரை வளர்ந்திருக்கிறது.அந்தக் காலத்தில் அரை அணா நுழைவுக்கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயைஎட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரமாண்டம் என எதிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரி புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டுஅனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறிவசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை. கட்டுப்பாடற்ற ஒரு சூழலே தென்படுகிறது.பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது.கடைகளின் வரிசைக் கிரமங்களில் ஏதோ குழப்பங்கள் இருப்பதாக பலர்என்னிடம் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல்நலத்தில் ஏதேனும்குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவி விடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையை பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில்ஆரோக்கியம் இருப்பதாக சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன்தருவதாக இருக்கின்றனவா. வழக்கமான பாட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா என்ற வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டுதோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களை பபாசி எப்படி தேர்வுசெய்கிறது? அதற்கான குழு எது? என்பதில்எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தேவையாகிறது. லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் இல்லையா?
ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களை சந்திக்கும் போக்கு உற்சாகமானது.காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப் போடும் காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் கூட அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப் போய் இருக்கிறது இந்த அறிவுச்சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவிலை என்றாலும் அம் முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் அறுவடை செய்யும் பபாசி.இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் ஏற்பட்டிருப்பதென்னவோஉண்மைதான்.காலச்சுவடு கண்ணனுடன் பேசிய போது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான சில தினங்கள் சற்று சோடையாக இருந்ததாகவும், போகப் போக சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம்,பாரதி புத்தகாலயம்,என்.பி.டி என எல்லாப் பதிப்பகங்களுமே விறுவிறுப்பாகவே இருந்தன.நானும் ந.முருகேசபாண்டியனும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்ககால பெண் கவிஞர்களை பற்றி ந.மு. விவாத்திதுக் கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாகஇருந்தது.ந.மு, ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” (காலச்சுவடு) என்ற தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில்பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது.அவரின் நூலிற்கு அவர் எழுதி இருந்த முன்னுரையில் சங்ககால பிரதியை கட்டவிழ்த்து எழுதியிருந்தவிதம் எனக்குபிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.
ஒரு வகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்கு தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை.இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூற்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்ற ஓர் உலகம் முந்தையதலைமுறைக்கு அரசியலாகவும், அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது.புத்தக அறிவினால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்ற சமகால உண்மையேஇன்று நம்பக் கூடியதாக இல்லை . அறிவுசார் விவாதங்கள் பொது மேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளை சொல்லித்தந்தவர்களே அதனை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தேசம் தன்னுடைய இலக்கிய சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டு செல்ல பல லட்சங்களை செலவழித்து தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டி கப்பல் கப்பலாகஅனுப்பியது என்ற கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ள போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்பவர்களை ஜென் எக்ஸ் என்று குறிப்பிட்டு அழைக்கிறது நவீன உலகம்.புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறையை,அவர்கள் புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை.இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக் கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சனையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள்.ஏறக்குறையஇன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய் சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் இன்றைய காலத்தைப் பற்றி அறிஞர்கள்குறிப்பிடும் ஆய்வறிக்கை.புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படி புரிந்து கொள்வது? ஒவ்வொராண்டும் முந்தைய ஆண்டைவிடவிட ஏராளமான நூற்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகி இருக்கின்றன. பல வருடமாக புத்தகச் சந்தைப் பக்கமே தலை காட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியாஇந்த வருடம் கடை போட்டிருக்கிறது. ஆயிரத்து ஐநூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத் தொகுப்பு,என்று இரண்டாம் பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றும்கின்றன. புதுமைப்பித்தனின் முழுத்தொகுதி ஐந்து பதிப்புகளைத் தாண்டிருக்கிறது. இவை எல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன.?

- நன்றி:காலச்சுவடு

No comments: