Thursday, October 13, 2011

ஆவணமாக்கப்பட வேண்டிய நிகழ்வு




சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்கள்கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைமிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேரக் கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல. ஹரப்பா போன்று நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு குடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இப்படிச் சமகாலப் பிரக்ஞையற்றுக் கதை சொல்லித் திரியப்போகிறோம் என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆவணமாக மாறக்கூடும். அதைச் சமீப காலச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த வருடப் புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.

முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றி எத்தனை பதிவுகள் நம்மிடையே எழுதப்பட்டிருக்கின்றன? இதன் வளர்ச்சி குறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன? முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என அழைத்தபோது தமிழ் மக்களின் மனநிலை, எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டிப் பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்று வெளியிடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை. இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியை அச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் காசட் கல்ச்சர் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அது ஒலிக்கும்போது இந்தியன் சைக்கிஎன்பது எப்படிச் செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார் அவர். அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடாக் கலாச்சாரத்தைப் பற்றித் தனி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சைக்கிஎப்படிச் செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருக்கிறார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படிப் பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதைப் புவிசார் காலனிய வாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின் துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எரிக் மில்லர் என்னும் இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர் சமகாலச் சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். அவர் சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டுக் கண்ணகியின் இடப்பெயர்வில் வரும் வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்ல வேண்டும்.

பட்டாங்கில் யானும், ஓர், பத்தினியேம் ஆகில்,

ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையையும்! என்

பட்டிமையும் காண்குறுவாய், நீ

எனக் கண்ணகி உரைப்பது வெறும் செய்யுள் மட்டுமே. சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவது ஏனோ. இப்படிக் கால நகர்வின் நெடுகப்பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கலுற்றிருக்கிறது நம்முடைய வரலாறு. பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கிக் கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப்பெறக் கூடியதல்ல; மாறாக ஒரு தொடர் செயல்பாடு.

வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம். விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றனஎன்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.

நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள், புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள், சமூகவியல் வரலாற்றாசிரியர்கள், அரசியல் வரலாற்றாசிரியர்கள் எனக் கிளைத்து இத்துறை வளரவில்லை. ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்மறை உணர்வையே வெளிப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜென்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள் விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்னும் தகவல் நம்மைச் சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத் துறையே மூடப்பட்டுவிட்ட செய்தி எத்தனை பேரைச் சுடக்கூடியதாக இருந்திருக்கும்.

இதையெல்லாம் முன்வைத்துப் புத்தகக் காட்சி பற்றி அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோத்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் சென்னைப் புத்தகக் கண்காட்சி: தோற்றமும் வளர்ச்சியும்என்னும் நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்துநாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என நம்புகிறேன்.

முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள்வரை வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஐம்பது பைசா நுழைவுக் கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயை எட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரம்மாண்டம் என எல்லாவற்றிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரிப் புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டு அனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறி வசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.

பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது. கடைகளின் வரிசைக் கிரமங்களில் குழப்பங்கள் இருப்பதாகப் பலர் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல் நலத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவிவிடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையைப் பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில் ஆரோக்கியம் இருப்பதாகச் சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன் தருவதாக இருக்கின்றனவா? வழக்கமான பட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா? வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.

முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டு தோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களைப் பபாசி எப்படித் தேர்ந்தெடுக்கிறது? அதற்கான தேர்வுக் குழு எது என்பதில் எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் அல்லவா?

ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களைச் சந்திக்கும் போக்கு உற்சாகமானது. காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப்போட்ட காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப்போய் இருக்கிறது இந்த அறிவுச் சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவில்லை என்றாலும் அம்முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் பதிப்பாளர்கள் அறுவடை செய்வார்கள்.

இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். காலச்சுவடு கண்ணனுடன் பேசியபோது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான இரு தினங்கள் சற்றுச் சோடையாக இருந்ததாகவும் போகப் போகச் சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம், பாரதி புத்தகாலயம், என். பி. டி. என எல்லாப் பதிப்பகங்களும் விறுவிறுப்பாகவே இருந்தன.

ந. முருகேச பாண்டியனும் நானும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்க காலப் பெண் கவிஞர்களைப் பற்றி ந. மு. விவாதித்துக்கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாக இருந்தது. ந.மு, அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (காலச்சுவடு) என்னும் தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில் பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது. அந்த நூலிற்கு எழுதியிருந்த முன்னுரையில் சங்க காலப் பிரதியைக் கட்டவிழ்த்து அவர் எழுதியிருந்தவிதம் எனக்குப் பிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.

ஒருவகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை. இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூல்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்னும் உலகம் முந்தைய தலைமுறைக்கு அரசியலாகவும் அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது. புத்தக அறிவால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்னும் சமகால உண்மையே இன்று நம்பக்கூடியதாக இல்லை. அறிவுசார் விவாதங்கள் பொதுமேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளைச் சொல்லித் தந்தவர்களே அதை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு தேசம் தன்னுடைய இலக்கியச் சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டுசெல்லப் பல லட்சங்களைச் செலவழித்துத் தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டிக் கப்பல் கப்பலாக அனுப்பிய கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ளப்போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்பவர்களை ஜென் எக்ஸ் என அழைக்கிறது நவீன உலகம். புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறை. புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை. இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக்கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சினையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள். ஏறக்குறைய இன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய்சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் அறிஞர்களின் இன்றைய காலத்தைப் பற்றிய ஆய்வு வெளிப்பாடு.

புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒவ்வோராண்டும் முந்தைய ஆண்டைவிட ஏராளமான நூல்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகியிருக்கின்றன. பல வருடமாகப் புத்தகச் சந்தைப் பக்கமே தலைகாட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியா இந்த வருடம் கடைபோட்டிருக்கிறது. ஆயிரத்து ஐந்நூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத்தொகுப்பு என மறு பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றுமிருக்கின்றன. காலச்சுவடின் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத் தொகுதி ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இவையெல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன?

நன்றி:காலச்சுவடு 2009 பிப்ரவரி

Sunday, September 11, 2011

வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி


ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில் வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில் அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவரான அதியமான், வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும் அரிய நூல்.
2008ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டதற்கான தகவல்கள் தட்டுப்படவில்லை. அதீத உழைப்பைக் கோரும் இம்மாதிரியான ஆய்வுகள் சகலத் தரப்புகளிலும் கவனம் பெறாதுபோவதற்கு வாசகர்களின் நோஞ்சான் தன்மையே முக்கியக் காரணம். ஒருசேர அனைவரும் ஒரே இடத்தில் குவியும் இச்சந்தைக் கடை மனப்போக்கு சத்தானதல்ல; ஊட்டச்சத்து குன்றிய ஆகாரத்திற்கு ஒப்பானது.
இன்று தமிழ் அச்சுத் துறை அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பின் எனக் குறிப்பிடுவதைவிட அழுத்தம் திருத்தமாக இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு இந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாக ஊதிப்பெருத்துள்ளது. தமிழில் சிறந்த நூற்பதிப்பு என்ற வேட்கையோடு இனிதே இயங்கிவந்த பதிப்புத் துறை இன்றைக்கு நூல் உற்பத்தித் துறையாக மட்டுமே சுருங்கிப்போனது சகிக்கக் கூடாத அவக்கேடு. இம்மாற்றம் லேசானதல்ல; சர்வதேசப் பெரும் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கிய உருமாற்றம். இது உருப்படியான மாற்றமா என்னும் விசாரணை தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. தொடர்ந்து பொருள் தேடக் கூடியது. தமிழ் அச்சுத் துறையின் வளர்ச்சி இன்று நேற்று உண்டானதல்ல; அச்சுத் துறையில் இந்திய மொழிகளிலேயே முன்னோடி என்னும் நட்சத்திர அந்தஸ்திற்குரிய பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமேயுண்டு. தரங்கம்பாடியில் சீகன் பால்கு, மிஷனரி பணிக்காகக் கால்வைத்த காலத்திலேயே தமிழ் ஊடகம் மறுமலர்ச்சியைக் கண்டுவிட்டது. அதன் அடையாளமாக இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகப் பைபிளைத் தமிழ்மொழியில் தான் வெளிக்கொணர்ந்தார் சீகன் பால்கு. இது வரலாறு. மிஷனரி பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட அச்சகங்கள் மக்கள் பயன்பாட்டை நோக்கி மெல்ல நகர்த்தப்பட்டன.
ஒரு நூற்றாண்டைத் தாண்டி ஆசிரியரின் பொறுப்பில் மட்டுமே செயல்பட்டுவந்த வெளியீட்டுத் துறை 1930களுக்குப் பிறகே ஆசிரியர், தொகுப்பாசிரியர் தனிப்பொறுப்பிலிருந்து சுயாதீனம் பெற்றது. பின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு அச்சேற்றும் தொழிலாக வளர்ச்சிகண்டிருக்கிறது. அச்சு என்பது தனித்த தொழிலாக வளர்ந்த காலத்தில்தான் ஏனைய பதிப்பகங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதையொட்டி உ. வே. சாமிநாதையர் எண்ணிலடங்காத ஓலைச் சுவடிகளுக்கு அச்சு உருவம் கொடுத்தார். அதன்பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மர்ரே பதிப்பகம், முருகவேள் புத்தகச் சாலை, திரு. வி. கவின் சாது அச்சுக் கூடம், அல்லயன்ஸ், நவயுக பிரசுராலயம், ஸ்டார் பிரசுரம், சக்தி பிரசுராலயம், பாரி நிலையம், தமிழ்ப் பண்ணை, பூங்கொடி பதிப்பகம், சக்தி காரியாலயம் இப்படி எண்ணற்ற பதிப்பகங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இவற்றில் பாதி, பொதுப் பதிப்பகங்களாகவும் நிறுவனங்களாகவுமே இயங்கின. அவ்வாறு தோன்றிய பதிப்பகங்களில் அச்சுத் தொழிலில் முன்னெட்டு வைத்த முதல் பதிப்பகம்தான் சக்தி காரியாலயம். அதன் உரிமையாளர் சக்தி வை. கோவிந்தன். இவரின் அச்சகச் சாதனைகள் ஆச்சரியம் கொள்ளத்தக்கவை. மலைக்கவைக்கும் காரியத்தையும் வை.கோ. அன்றே சாதுர்யமாக நிகழ்த்திக் காட்டினார். அதன் சான்றே பின்வரும் ஒரு சம்பவம்:
அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் ஒரு விஷேசத்தையொட்டிப் பன்னிரெண்டு வண்ணங்கள் கொண்ட படங்களை அச்சடிக்க முடிவெடுத்திருக்கிறது அந்நிர்வாகம். அதன் ஆர்டரைத் தூக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவர் கல்கத்தா, மும்பை என அலைந்து திரிந்து முடியாமல் கடைசியில் சென்னை திரும்பி கோவிந்தனிடம் வேலையைக் கொடுத்திருக்கிறார். அரைகுறை மனதோடு ஆர்டர் கைமாறியுள்ளது. பெரிய பெரிய கம்பெனி கதவுகளைத் தட்டிவிட்டுத் திரும்பியவரின் நம்பிக்கை பிசகாதபடி மிக நேர்த்தியாக அமைந்த கோவிந்தனின் அச்சுப் பணி ஆங்கிலேயரை அசரடித்திருக்கிறது. அப்படங்கள் மிகப் பழைய எந்திரத்தில் அச்சாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி வேறு ஆங்கிலேயருக்குக் காத்திருந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பழகியவர் கோவிந்தன். கைவசம் உள்ளதைக் கொண்டு வளர்ச்சியைப் புகுத்தியவர். எதையும் இலாவகமாகக் கையாளக் கற்றவர். இத்தனைக்கும் இவர் படித்தது வெறும் எட்டாம் வகுப்பு. மொத்தத்தில் வை. கோவிந்தன் அச்சுக் கலாச்சாரத்தின் நவீன அரிச் சுவடி. பரவலாக்கல் எனும் வடிவிற்காக அயராது சுழன்றுகொண்டிருந்த சமர்த்தான பல் சக்கரம் அவர்.
பொதுத்தளத்தில் இயங்கிய கோவிந்தன், காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இந்தக் கதர்ச் சட்டைக்காரருக்குள் சிறிதளவு சிகப்புச் சாயச் சார்பும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் உதயமான திராவிட அரசியலின் மீது கோவிந்தனுக்குச் சிலாக்கியமில்லை. வெறுப்பு உண்டு. ஆனால் சுயமரியாதைக் கட்சியினர் புகுத்திய மொழிச் சீர்திருத்தத்தில் உடன்பாடு கொண்டிருந்தார். தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கும் பண்பே தொழில்காரனுக்கு அழகு. அதன் லயம் உணர்ந்தவர் கோவிந்தன். திராவிட அரசியலுக்கு எதிரானவரான இவர் மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்திருக்கிறார். மேற்சொன்னவை கோவிந்தனைப் பற்றிய புறவயமான முக்கிய அம்சக் குறிப்புகள்.
1939இல் தொடங்கப்பட்ட சக்தி காரியாலயம் தமிழில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கே. எம். முன்ஷியின் அகண்ட இந்தியாவில் இருந்து ராஜ கோபாலாச்சாரியின் அபேத வாதம், வெ. சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பில் உருவான பிளேட்டோவின் அரசியல், சூடாமணியின் அலமு, டால்ஸ்டாயின் அன்ன கரினா, தொ. மு. சி. எழுதிய ஆணா பெண்ணா, மு. அருணாசலத்தின் உணவுப் பஞ்சம், ஏ. கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன், ஜே. சி. குமரப்பாவின் ஏசுநாதர் போதனை, கு. அழகிரிசாமியின் கதைகள், கொத்த மங்கலம் சுப்புவின் காந்தி மகான் கதை, புதுமைப்பித்தனின் சிற்றன்னை, வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி, ஆஸ்கர் வைல்டின் சிலையும் குருவியும், ஜான் ஸ்டீன்பெக்கின் சிவப்புக் குதிரைக்குட்டி, மார்க்சிம் கார்க்கியின் தந்தையின் காதலி, செல்லம்மா பாரதியின் பாரதியார் சரித்திரம், மகாகவி பாரதியார் கவிதைகள், கம்ப ராமாயணம், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்று ஏகப்பட்ட வரிசைகள். வை.கோ. தானே சில நூல்களை எழுதியும் இருக்கிறார். பதிப்பகம், எழுத்தாளர் என்னும் இரட்டைக்குதிரையில் சவாரிசெய்தவர் இவர். இவரது சக்தி பத்திரிகையில் தான் கரிசல்காட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணியாற்றினார். அழகிரிசாமியின் ஏராளமான கதைகளை வெளியிட்ட பெருமை சக்தி பத்திரிகைக்கு உண்டு. அழகிரிசாமியின் வெந்தழலால் வேகாதுஎனும் மிகச் சிறந்த கதையின் தொடர்ச்சி போலமைந்த விட்டகுறைசக்தியில் பிரசுரமான கதை. அவர் பல அயலகப் படைப்புகளைச் சக்தி காரியாலயத்திற்காக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
வை. கோவிந்தனின் வாழ்க்கைப் பருவத்தை ஆய்வாளர் மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கிறார். 1912இல் பிறந்தது முதல் தொழிலுக்கு வந்த 1938 வரை இளமைக்காலம்; 1939 முதல் 1960வரை பதிப்பு காலம்; வாழ்வின் இறுதிப் பகுதியில் எழுத்தில் ஈடுபாடு உண்டான காலம். கோவிந்தனின் சொந்த ஊர் ராயவரம். தன் இளமையைப் பர்மாவில் கழித்த இவர், சென்னை விஜயத்திற்குப் பிறகே பதிப்பகப் பணியின் பக்கம் தலைவைத்தார். இப்பதிப்பகம் சென்னை, காரைக்குடி, ராயவரம் என்று மாறிமாறி இயங்கியுள்ளது. இதற்குக் கோயமுத்தூர், திருநெல்வேலி நகரங்களில் கிளைகளும் இயங்கின. பின்னால் ஓர் உத்வேகம் பிறந்து சக்தி, மங்கை, அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, கதைக்கடல் எனப் பல இதழ்களைத் தருவித்தார் கோவிந்தன். தவிர சினிமா இதழொன்றையும் நடத்தியுள்ளார். இதில்தான் கவியரசு கண்ணதாசன் பணியாற்றினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் கால இவரது செயல்பாடு அச்சுத் தொழிலில் தீவிரமாக இயங்கியிருக்கிறது. கோவிந்தன், முதல் மனைவி அழகம்மை மறைவுக்குப் பின்னால் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சந்நியாச சம்போகம் கொண்டும் இருந்திருக்கிறார். அப்புறம் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்திருக்கிறார். அச்சுத் தொழிலைத் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இவரால் பழக்கப்பட்டு உருவான பிற பதிப்பகங்கள் பழனியப்பா பிரதர்ஸ், தமிழ்ப் பண்ணை உள்ளிட்டவை. தான் கற்றதை ஊராருக்கும் எடுத்தோதும் நற்குணம் வை.கோவிந்தனுக்குள் தூக்கலாகவே இருந்திருக்கிறது.
சக்தி காரியாலயத்தின் முதல் நூல் டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டியது யாது. பின்னர் போரும் வாழ்வும் நூலின் ஆறில் ஒரு பகுதியை அச்சிட்டுப் போரும் காதலும் என்னும் தலைப்பில் 1943இல் வெளியிட்டார். தொடர்ந்து அதன் மற்ற பகுதிகளை வெளியிடவில்லை. இதற்கு இரண்டாம் உலக யுத்தத்தால் உருவான காகித நெருக்கடியும் சரியான ஆங்கில மூலம் கிடைக்காததுமே காரணம். மூல நூல் 1957இல் கிடைத்ததும் 2,500 பக்கமுள்ள முழுப் பிரதியையும் வெளியிட்டார். இதன் அடக்க விலை 24 ரூபாய். தனித்தனி பாகங்கள் எட்டு ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. அதை மொழிபெயர்த்தது பேனா மன்னன் டி. எஸ். சொக்கலிங்கம். குறிப்பிட்ட ஒரு மூல நூலுக்காக இப்பதிப்பாளர் 14 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார். கொஞ்சமும் அச்சு அறமில்லாமல் செயல்படும் இக்காலத்துப் பதிப்பகத்தார் சிலர் கோவிந்தனிடம் கற்றுத்தேற வேண்டிய மிகச் சிறந்த பாடம் இது.
டி. எஸ். சொக்கலிங்கம் எழுதிய மக்கள்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் பஞ்சம் பற்றிய சிறு பிரசுரம் வாயிலாகவே சக்தி காரியாலயத்தை நான் முதன்முதலாகக் கண்டடைந்தேன். ஏ. கே. செட்டியார் எழுதிய பிரயாண நினைவுகள் புத்தகத்தைப் பின்னர் படிக்க நேர்ந்தது. அப்படியே சில பழம் பதிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை தமிழில் வாசகர் வட்டம் பதிப்பகத்தை உச்சிமுகர்ந்து கொண்டுவந்த எனக்குச் சக்தி காரியாலயச் சாதனைகள்மீது ஒரு சரித்திரச் சாய்வு இங்குதான் உண்டானது. பல வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் கோவிந்தனின் வாரிசுகள் நித்ய ஆகாரத்திற்கே அவதிப்படுவதாய் ஒரு செய்தி படித்து மனம் சரிந்தேன். தமிழின் முன்னோடி ஆளுமைக்கு இப்படி நேர்வது வழமைதானே.
தனது பதிப்பகத்தை லாப நோக்கிற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல் வை.கோ. மக்கள் வசதி கருதி, பல மலிவுப் பதிப்புகளைக் கொண்டு வந்தார். அப்படி மலிவுப் பதிப்பாக வெளிவந்ததே கம்பராமாயணத்தின் பால காண்டம்-அயோத்தியா காண்டம். வெ. சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்திற்கு இணையாக வாசக நலம் கருதி வெ. சாவின் தத்துவ முன்னோடி நூல்களை சக்தியும் வெளியிட்டது. பாரதியாரின் கவிதைகள் முதற்பதிப்பில் 15,000 படிகள் அச்சடிக்கப்பட்டு விற்றும் தீர்ந்துள்ளன. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கோவிந்தன் தெரிவித்த கருத்தை இன்று படிக்கவும் பிரமிப்பாக இருக்கிறது. ஏழரை ரூபாய் விலைக்கு விற்ற பாரதியின் கவிதைத் தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். திருக்குறள் விஷயத்திலும் அவ்வாறே. ‘15 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. 21 ஆயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் சுலபமாக விற்பனையாகும்என்கிறார். இத்தனை வசதி வாய்ப்புகளும் வாசல் தேடி சுலபமாக வந்திட்ட வரப்பிரசாதமல்ல; கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உழைப்பால் இக்கோட்டை மதிற் சுவரைக் கோவிந்தன் கட்டி எழுப்பினார். ஆகவேதான் சி. சு. செல்லப்பா இவரது பதிப்பகத்தை பென்குவினுக்கு நிகர் என்கிறார். சக்தி இதழை டைம்ஸோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அரசு நூலகப் பொருளுதவிகள் இல்லாத நாளில் தனித் தெம்போடு அமைந்த இவரின் லட்சிய நடை மெச்சக் கூடியது. அச்சுத் துறையில் தனிச் சூரியனாய்க் கிளம்பிய கோவிந்தன் 1966இல் தனது தொடர்ச்சியான இயக்கத்தை நிறுத்திக்கொண்டது ஒரு பேரிழப்பு. ஒரு பதிப்பாளரைப் பற்றி அவர்தம் அரும் பெரும் ஆற்றல் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட பழ. அதியமானின் இந்நூல் காலக் கண்ணாடியின் உடைந்த சிறு துண்டு. ஆனால் அதற்குள் தெரிவது பெரிய வானம்.




ஆசிரியர்: 
பழ. அதியமான்
பக். 232, விலை ரூ.175 (2008)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில்

Monday, August 22, 2011

மரத்தை மறைக்கும் மாமத யானை!


ஹெச் வில்லியம்ஸ் ஒரு ஆங்கிலேய அதிகாரி. யானை ஆராய்ச்சியாளர் கிடையாது. ஆனால் அவர் யானைகளுடன் வாழ்ந்திருக்கிறார். யானைகளுடனான அவரது சகவாசம், பணி நிமித்தமானது. காலனிய ஆட்சிக் காலத்தில் அவர், பர்மியக் காடுகளிலும் அதையொட்டி இந்திய அந்தமான் காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறார். 1931ம் ஆண்டில் வடக்கு அந்தமானை ஆராய வந்தக் குழுவில் இவரும் இருந்திருக்கிறார். வேட்டைக்காரனின் சாகஸத்துடன் தொடங்கிய வில்லியம்ஸின் வன வாழ்க்கை, போகப்போக யானைகளைப் பழக்கும் பர்மிய மக்களுடன் கூடிப் பிணைக்கப் பெற்ற ஒன்றாக உருமாறுகிறது.

1914-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் போரின் போது முதலில் வில்லியம்ஸ் பர்மாவில் ஒட்டகப் படையில் பணியாற்றினார். அடர்ந்த வனங்களில் தன் அன்றாட வேலைகளுக்கு மனித உழைப்பு எந்த அவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இமியும் குறையாமல் யானைகளின் உழைப்பும் வில்லியம்ஸுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. நாள்தோறும் மேய்ப்பாளன் இடும் கட்டளைகளை புரிந்துக்கொண்டு வேலை பார்க்கும் யானைகளை வெறும் மிருகங்களாக கருதாமல், அவற்றை மனிதன் தன் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நுட்பத்தை வியக்க ஆரம்பிக்கிற வில்லியம்ஸின் மூளையில் ஒரு நாள் பொறித்தட்டுகிறது. இனி, வேலைகளோடு மட்டுமே மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, இந்த ஜீவராசிகளின் குணதிசங்களை உற்று நோக்கி புரிந்துகொள்ள முற்பட வேண்டும் என தீர்மானிக்கிறார். அன்று முதல் யானைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறார். அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுத்தும் அதே மும்முரத்தோடு யானைகள் பற்றிய தன் நாட்குறிப்புகளையும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தக் குறிப்புகளோடு சேர்த்து தன் நினைவுகளையும் திரட்டி பல காலங்களுக்கு அப்புறம் ஒரு புத்தம் எழுத ஆரம்பிக்கிறார். அவ்வாறு உருவான நூல்தான் –யானைக்கூட்டம். அகல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள சமீபத்திய நல்வரவு. வன உயிரின ஆர்வளர்களை தாண்டி அனைத்து வாசகர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

யானைகளை பற்றிய வில்லியம்ஸின் அவதானிப்பு ஒரு வெளிப் பார்வையாளனின் அறிவுலகத்தோடு பொருந்தக்கூடியது. அதே சமயம் அவற்றோடு அனுதினம் இரண்டறக் கலந்து வாழும் மக்களை விட அதிகப்படியான தகவல்களை எடுத்து சொல்வது. இன்னதன் காரணம் எதுவென்றறியாமல் ஒரு பழக்கத்தைப் போல மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளுக்குள் புதைந்து கிடக்கும் பல்லாயிரமாண்டு கால அறிவை, ஒரு கோழியைப் போல சீய்த்து சீய்த்து மனித மனங்களின் தனது எழுத்தின் மூலம் மேற்பரப்புக்கு கொண்டு வருகிறார். வில்லியம்ஸின் அவரின் புத்தகத்தினை ஒரு சாக்காக வைத்து நாம் யானைகள் பற்றிய அடிப்படையான சில தகவல்களை அறிந்துகொள்வோம்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.தாவரங்களின் இலைத் தழைகளை மட்டுமே இவை உணவாக உட்கொள்கின்றன. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெறிய விலங்காக யானை கருதப்படுகிறது.இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள்.ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது இருக்கிறது. அரிமா,வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. அதே சமயம் புலி,சிங்கம் போன்ற விலங்குகளை தன்னிடம் நெருங்கவே அச்சுறுத்தும் விலங்காகவும் யானை இருக்கிறது. பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம்.அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு அவ்வளவு லேசானதல்ல.

.

· யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவது இல்லை.தாவர உண்ணியான இவை மாமிசங்களை உண்ணாது. புலி, பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழி உள்ளதைப் போல் யானைக்கு எவ்வளவு கடும் பசி எடுத்தாலும் அது மாமிசம் உண்ணாது என்று நாம் ஒரு புது மொழி எழுதிப் பழகலாம். யானை மூங்கில்,கரும்பு போன்றவைகளை மட்டுமே விரும்பி உண்ணக் கூடியது.ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றது. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது.உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது.எனவே அளவுக்கு அதிகப்படியான நிறைய உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது.வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றது.

· யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு எஞ்சியுள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்,ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு.இனங்களுக்கு தக்க,நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள்,அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை.ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை.ஆண் பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும்,பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும்.இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும்.முன்னங்கால்,பின்னங்கால் உட்பட தலா நான்கு நகங்களைக் காணலாம்.ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் சுமார் 3செ.மீட்டர் தடிமனாக இருக்கும்.யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும்.அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.

· யானையின் துதிக்கை மிக விஷேசமானது.மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினான் பெரும் மரக் கிளைகளை ஒடிக்கவும்,உடைக்கவும் அதனால் முடியும்.அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

· யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும்.இதற்கு எயிறு,தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன.தந்தம் என்றால் பல் என்று பொருள்.சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும்.அதோடு இத்தந்தங்கள் சுமார் 90கிலோகிராம் எடை வரை கனக்கக்கூடியவை.

· தன்னுடைய துதிக்கைகளை தரையில் படுக்கை வாட்டில் கிடத்தி தரையிலிருந்து எழும் அதிர்வு ஒலிகளைக் கொண்டு, தன் புலனுணர்வை மூளைக்கு அனுப்புகின்றன என்கிறது யானைகள் பற்றிய சமீபத்திய ஆய்வுகள்.அதேபோல யானை, தான் புதியதா பார்க்கும் பொருட்களை தன் பாதங்கள் மூலம் மெதுவாக அழுத்திச் சோதித்தப் பின்பே அவற்றை சேதப்படுத்தவோ,அப்புறப்படுத்தவோ செய்கின்றது என்றும் இப்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.

· ஆசிய யானைகளின் தோல்,ஆப்பிரிக்க யானையின் தோல்களை விட கூடுதலான ரோமங்களை கொண்டுள்ளன. ஆண் யானையை தமிழில் களிறு என்பர்.பெண் யானையை பிடி என்பர். குட்டி யானையை கன்று என்று குறிப்பிடப்படுகிறது.யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பார்கள். சீதோஷண மாறுதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பொதுவாக யானைகள் சேற்றில் கிடந்து உழுலும் குணாதிசயம் கொண்டவை.மண்ணை வாறி உடல் முழுவதும் போட்டும் கொள்ளும்.இதனால் கடுமையான சூரிய வேப்பத்தில் இருந்தும்,அட்டைப் பூச்சி,உண்ணி போன்றவற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. யானைகளுக்கு வேர்க்காது என்பதால் இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. இவற்றின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் என்னவோ அதிகம்தான்.

· யானை தன் வலிமையான உடற்பருமனை தாங்கும் அளவிற்கு அவற்றின் கால்கள், பாதங்கள் வலிமையானதாக இருக்கின்றன.இதன் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் உள்ளதாலும் யானை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையிராது. எனவே இவற்றால் அதிகப்படியான நேரங்கள் நிற்க இயலும்.ஆசிய யானைகள் அடிக்கடி உட்காந்து இளைப்பாரும்.ஆனால் ஆப்பிரிக்க யானைகள் உடல் சீக்கு காணும் வரை உட்கார்ந்து இருப்பதை தவிர்கவே செய்கின்றன. யானைகளால் நதிகளில் இலகுவாக நீந்த முடியும்.ஆனால் குதிக்க இயலாது.குட்டி யானைகள் பிறந்த சில வாரங்களிலேயே தாய்,தாதி யானைக் கூட்டங்களால் நீந்தப் பழகிக் கொடுக்கப்படுகின்றன

· யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன.யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.

· யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.

· யானைகள் மிக மெல்லிய வாசனைகளை கூட விரைவில் கண்டறியும் முகர் உணர்வு உடையவை.சில மையில்களுக்கு அப்பால் வரும் மனித வாடையை முன் கூட்டியே தன் மோப்ப சக்தியினால் கண்டறியும் ஆற்றலும் இதற்கு உண்டு.உப்பின் வாடை யானையை எங்கிருந்தாலும் சுண்டி இழுத்துவிடும்.இவற்றிற்கு கண்பார்வை கொஞ்சம் மங்கலானதாக இருப்பதால் தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் அறிந்துக் கொள்ள முடியாது.எனவே மோப்ப உணர்வையே இவை அதிகம் நம்பி வாழ்கின்றன.இதன் பாதங்கள் மிக குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரவல்லன.

· யானை மனிதனைப் போல குடும்ப உறவில் வாழ்பவை. தாய் யானை தனது குட்டியை தன் தாதி யானையோடு இணைந்தே வளர்க்க ஆரம்பிக்கும்.ஒரு சமூகக் கூட்டமாக இருக்கும் யானைகளில் ஒரு ஆண் யானை மட்டுமே தலைமை வகிக்கும். புணர்ச்சிக் காலங்களில் வேறு யானை ஒரு கூட்டத்திலுள்ள பெண் யானையை புணர விரும்பினால் அக்கூட்டத்தின் தலைமை யானையான ஆண் யானையை சண்டையிட்டு வீழ்த்திய பின்பே அதனால் உறவை மேற்கொள்ள முடியும். குட்டியாக உள்ள ஆண் யானை பருவம் அடைந்தக் கையோடு தாய்க் கூட்ட்த்தினை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுவிடும்.அது தனித்து சென்று தன் புதிய வாழ்க்கையை மேற்கொள்ள தாய் செய்யும் புத்திசாலித்தனம் இது. இதனால் ஒரே சந்ததியினருக்குள்ளான உறவு முற்றிலும் தடுக்கப்படுகிறது

· யானைக்கள் தண்னுணர்வு கொண்டவை.இதன் முன்னால் வைக்கப்பட்ட கண்ணாடியைக் கண்டு இவை தங்களின் அடையாளங்களை பழக்கிக் கொள்ள முற்பட்டன என்கிறது ஒரு ஆய்வு.குரங்குகளும் டால்பின்களும் இக்குணத்தை கொண்டிருப்பவையே. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள்.இது பாலுட்டி இனங்களில் அதிகப்படியான காலங்களாகும்.யானை ஒரு குட்டியையையே ஈனும்.இரட்டைப்படை என்பது அரிதானதொன்று.கன்றானது 90முதல் 115 கிலோ எடை வரை இருக்கும். இதன் பிரசவக் காலத்தில் மற்ற யானைகள் கூடி நின்று உதவி செய்கின்றன. யானைக்கன்று பிறந்த்து தொட்டு அது யானைக்கூட்ட்த்தினாலேயே வளர்க்கப்படுகின்றது.

· சங்க இலக்கியங்களில் யானை 23விதமான சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.அவை வருவன: யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனா வதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு

யானைகள் பற்றிய இன்றைய நிலவரம் என்ன? அவற்றின் வாழ்விடப் பிரச்னை உள்ளிட்ட சில அடிப்படைத் தகவல்களை இனி பார்ப்போம்:

· இன்று நிலத்தில் வாழும் பெரிய இனமான யானைகள் அழியும் தருவாயில் உள்ளன.அவற்றின் உணவு பற்றாக்குறை,தொடர்ந்து வனப்பகுதிகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் இருத்தல் கேள்விக்குறியாகிவிட்டது. அதோடு வனப் பகுதிகள் மனிதனின் பாசனப் பயன்பாட்டின் மாற்றத்தினால் சுறுங்கிடுவதினால் யானைகள் குறுகலான நிலத்தின் உள்ளாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றது. இதனை மீறி வலுக்கட்டாயமாக மற்றப்பட்ட விளைநிலங்களுக்குள்ளாக யானைகள் நுழைய நேரிடும் போது அது மனித யானை மோதல்களாக மாற்றம் கொள்கின்றன. மனிதற்கல் போடும் மின் வேலிகளில் அடிப்பட்டு காயம் உண்டாகி பின் இறந்தும் போகின்றன.

· இலங்கயில் இந்த மாதிரியான மோதல்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாவதாக பி.பி.சி.(தமிழ்) அறிக்கை வெளிவந்திருகிறது.யானை-மனித மோதலால் இலங்கயில் உள்ள மொத்தம் 9மாகாணங்களில் 8மாகாணங்கள் பதிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.அக்டோபர் 15க்கு முந்தய நான்கு நாட்களில் மட்டும் 4பேர் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் மட்டும் அடிப்பட்டு இறக்க நேர்ந்திருக்கிறது.

· இந்த ப்ரச்னையைக் கையாள இலங்கையில் எலி அலார்ட் என்ற புதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது அவ்வரசு.பாதுகாப்பிற்காக போடப்பட்ட வேலிகளை யானைகள் உடைக்கும் போது,ஏற்கெனவே எலி அலாட் கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த ஊர் முக்கியஸ்தர்களின் மொபைல் போனுக்கு தாமாகவே அக்கருவி குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.இதனை லங்கா விஜேசிங்க என்பவர் அரிமுகப்படுத்தியுள்ளார்.

· தமிழ்நாட்டில் அதிகப்படியான நீர் நிலைத்தடங்கள் மூடப்பட்டதினால் யானைகள் ஒழுங்கான பாதைகளை விட்டு கட்டுப்பாடற்ற பாதைகளில் குறுக்கிட்டு ரயில் தடங்களில் அடிப்பட்டும் கும்பல் கும்பலாக சாகின்றன.

· யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால் அது வேட்டையாடப்படுவதுதான்.அதன் தந்தங்களுக்காக மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன என்பது ஊரறிந்தத் தகவல். யானைகளின் உணவான மரச் செடிக்கொடிகள் அழிக்கப்படுவதாலும் நீராதாரம் சுறுங்கிப்போவதாலும் யானைகள் உலக அளவில் செயற்கையான சாவை சந்திக்கவேண்டியுள்ளது.

· ஆப்பிரிக்காவில் பெரிய தந்தங்கள் உள்ள யானைகளையே குறிவைத்து அழிக்கப்படுவதினால் புதியதாக பிறக்கும் யானைகள் சிறிய தந்தங்களோடு பிறக்கும் அவலமும் நடந்தேறி வருகின்றது.இன்னும் தந்தங்கள் அற்றும் பிறக்க நேரிடுகின்றது.1930களில் ஒரு சதவீதமாக இருந்த இவ்வாறான யானைகளின் எண்ணிக்கை இன்று சில பகுதிகளில் 30 சதவீதமாக அதிகரித்து நிற்கிறது.

· வனப்பகுதிகளின் ஏற்படும் குடியேற்றத்தினால் யானைகளுக்கு இருதயக் கோளாறு,மாரடைப்பு,மூளையில் இரத்தக்கட்டி,சர்க்கரைநோய் போன்ற புதுப்புது வியாதிகள் யானைகளிடன் பரவ ஆரம்பித்திருக்கிறது.

· மலைப்பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தோண்டப்படும் பெரும் குழிகள் அல்லது பள்ளங்களில் விழுந்து யானைகள் சாவது தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்துவருகிறது.

வில்லியம்ஸின் புத்தகம் தரும் தகவல்கள் இவை:

· ஆப்பிரிக்க யானைகளை அடக்கிப் பழக்க முடியாது என பலராலும் நம்பப்படுகிறது.இதில் உண்மையில்லை.நீக்ரோ இனத்தவர்கள் இந்த யானைகளை அடக்கி தங்களின் வேலைகளுக்கு பழக்கி இருக்கிறார்கள்.ஆப்பிரிக்க யானை இனத்தைத்தான் கார்த்தேஜீனியர்கள் அடக்கிப் பழக்கி ரோம் நாட்டுக்கு எதிராக நட்த்திய யுத்தங்களில் பயன்படுத்தினார்கள் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

· இந்திய வரலாற்றில் யானைகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன.புகழ் பெற்ற அலெக்சாண்டரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யப் போரில் யானைகள் பழக்கி வைக்கப்பட்டன.

· காட்டில் வாழும் யானைகள் பொதுவாக முப்பது முதல் ஐம்பது வரையில் கூட்டமாக வசிக்கின்றன. பர்மா யானை மூங்கிலை விடபுல்லையே அதிகமாகத் தின்கின்றன.

· அவரச நேரத்தில் எந்த வழியாக தப்ப வேண்டும் என்பதை அந்தக் கூட்ட்த்தின் தலைவனாக இருக்கும் யானையே முடிவுசெய்யும்.அப்போது அவை ஒன்றின் துதிக்கை மற்றொன்றின் மேல் போட்டவாறு ஒரு வரிசையில் மும்மூன்றாகவோ அல்லது நான்குகவோ செல்லும்

· பெரும்பாலான யானைகள் மார்ச் மாத்த்திற்கும் மே மாத்த்திற்கும் இடையேதான் குட்டிப்போடுகின்றன.

· யானையைப் பிடிப்பதற்கு முன்னால் சுமார் எட்டு மைல் தூரத்திற்கு அதன் அடிச்சுவட்டைக் கொண்டே போகவேண்டும்.

· யானைகள் பிடிபட்டுள்ள காலங்களில் கரு தரிப்பதில்லை.இயற்கயான சூழல் ஏற்படும் போதே மீண்டும் அவை கருதரிக்கின்றன.

· இயல்பாக ஒரு பெண் யானை 17 வயதில்லிருந்து இருபது வயதுக்குட்பட்டபோது முதன்முதலாக இணை சேர்கிறது.வருட்த்தில் இந்தக் குறிப்பிட மாத்த்தில்தான் அது இணை சேரும் என்ற எந்த வரையறையும் கிடையாது.

· குட்டியானை தாய் யானையை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிந்தொடரும்.அது தாய் யானைகளினால் பாலூட்டப்படுகிறது. பிறந்தவுடனே குட்டி யானையின் துதிக்கை அதற்குப் பயன் இல்லாத ஒரு பொருளாக உள்ளது.இந்தக் காலங்களில் குட்டி தன் வாயாலேயே தாயிடம் பால் குடிக்கும்.துதிக்கை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பயனுள்ளதாகவும்,வளையக்கூடியதாகவும் இருப்பதில்லை. 5 அல்லது 6 வயதில் குட்டித் தன தீனியைத் தானே சேகரிக்கக் கற்றுக்கொள்கிறது.

· ஒருபெண் யானை தன் வாழ்நாளில் சராசரியாக 4குட்டிகள் ஈனும்.இருகுட்டிகள் பொடுவது மிக ஆச்சரியமானதில்லை(கவனிக்க:எந்த ஒரு விலங்கினை பற்றிய ஆய்வும் முழுமையாக முற்று பெற்றவையல்ல;காலங்கள் தோறும் பழய ஆய்வுகள் உடைக்கப்பட்டு புதிய ஆய்வுகள் நிறுவப்படலாம்)

· 15,16 வயதில் வாட்டஞ்சாட்டமான மனிதைனைப்போல் யானையும் ஆகிவிடும்.20முதல் 35 வயது வரையில் மதநீர் சிறிது கசியத் தொடங்கும்.இந்த்த் திரவத்தின் நாற்றம் கடுமையான மணம் எழுப்பக்கூடியதாக இருக்கும். கண்ணுக்கு அருகிலும்,வயிற்றுக்கு மேலேயுள்ள கோட்டிற்கு மேலும் உள்ள மதநீர் சுரப்பியிலிருந்து மதநீர் கொஞ்சம் கொஞ்சமாக கசியும். தகுதி வாய்ந்த ஆன் யானைக்கு ஆண்டு தோறும் வெப்பமான மாதங்களில் அது காணப்படுகிறது.இந்தப் பருவம்தான் அது பெண் யானையோடு சேர்வதற்குரிய காலமாகும். முப்பது வயது முதல் நாற்பது வயது வரயில் அக்கசிவு அதிகரித்து தாராளமாக ஓடும்.சொட்டுச் சொட்டாக அதன் வாயிற்குள் நீர் செல்ல அது அதன் சுவையை உணரும்.அச்சுவை அதை கோபமூட்டி அதை மேலும் அதிக்க் கொடுரமாக்கிவிடும்.அந்தச் சமயத்தில் மிகுந்த வலிமை அதற்குண்டு. 40-50 வயதில் மதநீர் குறையத் தொடங்கி இறுதியில் நின்றுவிடும். மதம்பிடிக்கும் காலத்தில் யானையை நம்பக்கூடாது.அப்படி நம்புவதானால் அதற்கு 60 வயது முடிந்திருத்தல் அவசியம்.

· 15முதல் 20 வயதுவரை உள்ள காலமே காட்டு யாணைகளைப் பிடிப்பதற்குரிய தகுந்தக் காலம்.இதிலிருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது கடுமையான வேலையைச் செய்யப் போதுமான பக்குவத்தையும்,தண்ணீரைத் தானே பெறும் சக்தியையும் அடைகிறது.

· தாயைப் பிரிந்து இரண்டு இரவுகள் குட்டியானை அழத்த வண்ணம் இருக்கும் காட்சி காட்டில் சர்வசாதாரணமாகும்.பர்மாவில் உள்ள ஒஸிகள் வழக்கமாக யானைகளை அவற்றின் பெயரிட்டு அழைப்பதில்லை.

· தாய் யானையிடம் இருந்து பிரிக்கப்பட்ட இளைய யானைகள் 19வயது முடியும் வரையில் பயிற்சிக்காக வைக்கப்படுகிண்ரன.சுமார் எட்டு வயதுள்ள இளைய யானைகள் முதன் முதலாக கட்டையைத் துக்குகின்றன.இவற்றின் வேலை செய்யும் வயது ஐம்பது வயதுவரை என நாம் கொள்ளலாம்.

· வேலைசெய்யும் யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரையில் உள்ள வெப்பக்காலத்தில் வேலை செய்ய வைக்க்க் கூடாது.வனப்பரப்புகளில் போதுமான தண்ணீரும் தீனியும் இப்பருவத்தில் சீராக்க் கிடைப்பதில்லை.ஆகவே அவைகள் ஓய்வை விரும்பக்கூடும் காலமாகிறது. ஒரு மாதத்தில் பர்மிய யானைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் 18 நாட்கள் வரை வேலை செய்தன.12நாட்கள் ஓய்வுநாளாகும். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய நேரிட்டால் இரு தின்ங்கள் ஓய்வளிக்கப்பட்டன. ஒரு வருடத்தில் 9மாதங்களில் 162 நாட்கள் வேலை நாட்கள்.ஒவ்வொரு நாளும் சுமார் 8மணி நேரமே அன்று யானைகள் வேலை செய்தன. இவ்வாறு ஒரு யானை வருத்த்திற்கு 1,300 மணி நேரம் வேலை செய்த்தது.

· இருபது வயதுள்ளபோது பாகன் காட்டும் ஜாடைகளைத் தவிரக் கட்டளையிடப்படுகின்ற 24 தனி வார்த்தைகளைக் கட்டாயம் யானை புரிந்துக் கொள்ளக்கூடும்.

· தன் உடலில் துதிக்கை எட்டாத ஒரு பாகத்தில் சொறிய வேண்டிய உணர்ச்சி ஏற்பட்டால் அது அந்தப் பாகத்தை மரத்தில் சாய்த்து தேய்த்துக் கொள்வதில்லை.ஒரு பெரிய குச்சியை எடுத்து அதைக்கொண்டு தன்னைத்தானே தேய்த்துக் கொள்கிறது.குச்சு போதுமானதாக இல்லாவிட்டால் வேறு ஒரு குச்சியை அது நாடிச் செல்லும் அறிவைக் கொண்டுள்ளது.

· யுத்தத்திற்கு முன்பு உணர்ச்சியில்லாதவாறு செய்கின்ற மருந்துகளைப் பற்றிய பரிசோதைகள் யானைகளின் மீது செய்துபார்கப்பட்டன.

· எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளும் சக்தி யானைக்குண்டு.இவை அசைபோடும் மிருகம் இல்லை.அதற்கு ஒரே ஒரு இரைப்பைதானுண்டு.நாளொன்றுக்கு 600ராத்தல் தீமியை அது சேகரிக்கிறது.

· மனிதன் எவ்வளவு நேரம் தண்ணிருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம்தான் யானையாளும் நீருக்குள் இருக்க முடியும்.சுமார் 1,000கெஜ தூரம் நீந்திச் செல்லும்.அதில் 400கெஜ தூரத்தை நீருக்குள்ளாகவே நீந்திப்போகும் தறன் அதற்கு இருக்கிறது.

யானைகள் பற்றிய ஆரய்ச்சி இதோடு முடிந்து விடவில்லை. ஆராய்ச்சியாளர்களால் ஒவ்வொரு தகவலும் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் மறுபடியும் பல விஷயங்கள் பற்றி ஆராய்வோம். விருப்பமுள்ள அன்பர்கள் கட்டாயம் வில்லியம்ஸை வாசித்து பாருங்கள்.