Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

Sunday, November 13, 2011

கடந்த காலம் சொன்ன கதை





















சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. 90களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால், இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகின்றன. ஆவணத் தரவுகள் அடிப்படையில் சுயசரிதை என்பது வேறுபடும். ஆனால் தமிழ்ச் சுயசரிதைப் பிரதிகளில் ஆவண உசாத்துணை என்பது ஒப்பிற்கு மட்டும் கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வஸ்து. இது வேதனைக்குரிய நிலை. விரைந்து களையப்பட வேண்டிய நடத்தை.
நினைவோடை எழுத்தாக்கத்தில் கனமான அடையாளத்தை உண்டாக்கியவர் சுந்தர ராமசாமி. தான் நெருங்கிப் பழகிய பல ஆளுமைகள் பற்றி எழுத்தில் தன்னால் இயன்றவரை அவர் பதியவைத்திருக்கிறார். அவரின் துணிச்சல் நமது சூழலில் ஓர் அரிய குணம். எழுத்தாளர், தலைவர், சீர்திருத்தவாதி, ஞான ஆசிரியன் ஆகியோர் பற்றிப் பன்முகக் கோணத்தில் பல்வித நோக்கில் ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட வேண்டும். இதைக் கொண்டே புதிய தலைமுறையின் அறிவு நாணயம் பசுமையடையும்; அபிவிருத்திகொள்ளும். அந்தப் போக்கு தமிழில் அறவே இருப்பதில்லை. எழுத்தாளர்கள் பலர் தன் நேர் பேச்சுக்கும் எழுத்திற்கும் மத்தியில் பெரிய பள்ளத்தையே வெட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். பலரைக் காவுவாங்கும் விபத்துப் பகுதியாக அது செயல்படுகிறது. கல்மிஷம் எனும் சராசரி பண்பு படைப்பாளியையும் சேர்த்துக் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து வெதும்புவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. இந்தப் பின்புலத்தோடுதான் சு.ராவின் சகதர்மினி கமலா ராமசாமி அம்மாளின் புத்தகத்தை அணுக வேண்டியுள்ளது.
கமலா ராமசாமி, தனது உதிரி உதிரியான நினைவுச் சேகரங்களை ஒன்று கோத்து நளின மொழியில் எழுதியிருக்கும் நூலின் தலைப்பு: நெஞ்சில் ஒளிரும் சுடர். ஏறக்குறைய சுயசரிதை. கமலாவுக்கு எழுத்தாளராகும் விருப்பம், கனவுகள் இல்லை. தன் வீட்டில் ஒலித்த கணவர் சு.ராவின் அனுசரனையான வார்த்தைகளால் புத்தகம் எழுதும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறார். உன் சிறுவயது நினைவுகளை எழுதிப்பாரேன். பத்து, பதினைந்து பக்கங்கள் எழுதிய பிறகு வாசித்துப் பார்க்கிறேன்” - அவருடைய கணவர் அளித்த உசுப்பல் வார்த்தைகள் இவை. இவற்றைக் கேட்டபின் லேசாக ஆவல் முளைக்கிறது. சு.ரா. என்ற பெரிய கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தன் வாஞ்சையான வாழ்நாளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார் கமலா ராமசாமி. அக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டியது பெரும் எழுத்தாளர் சு.ராவின் தோற்றத்தையல்ல; கூடவே ஒட்டிக்கொண்டு நின்ற கமலா என்ற ஒற்றை மனுஷியின் வழியே உருவான வம்ச விருத்தியின் பிம்பத்தையும் சேர்த்துதான். அதன் பொருட்டுக் கடம்போடுவாழ்வு என்ற தன் சொந்த ஊர்ப் புராணத்திலிருந்து அசைபோட ஆரம்பிக்கிறது அவரின் உள்ளம். அப்படியே ஆலப்புழை பாலப் பருவம், வளர்ந்ததும் தாமிரபரணி நடைபழகும் திருநெல்வேலி சீமைச் சுகவாசம், இடையில் எழுந்த மதுரை குடிபெயர்வு. அங்கிருந்து நாகர்கோவில் புகுந்தவீட்டு சங்காத்தம் எனக் கடகடவென உருள ஆரம்பிக்கிறது.
கமலா ராமசாமி, அவருடைய பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை. உறவு அறுந்துபோகாமல் தூரத்து சொந்தத்திற்குள்ளே அவர் வாக்கப்படுகிறார். அப்பா கடம்போடுவாழ்வில் பெரிய நாட்டாமை. செல்வாக்கு நிரம்பிய வம்சம். தெருவில் ஹரிஜன மக்கள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டு. அந்த உரிமை பிராமணர்களுக்கு அடுத்து பிள்ளைவாள் குடும் பத்திற்கு மட்டுமே உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்தில் கக்கூஸ் வசதிகள் எல்லாம் கிடையாது. ஆகவே தோட்டி என்ற வகுப்பினரே இருந்ததில்லைஎன இவர் சுட்டும் கிராமம் தமிழகத்தின் அச்சு அசலான குக்கிராமம். இவரின் ஜோடிப்புகளற்ற இந்த மாதிரியான சிறு சிறு குறிப்புகளே நூலுக்கு வரலாற்று வலுச்சேர்க்கின்றன. இன்றும் தன் மனத்தைவிட்டு அகலாமல் அடிமனசில் அண்டிக்கிடக்கும் பால்ய நினைவுகளை, அதன் அழகழகான காட்சிகளை, மிக எளிமையாய்ப் போகிறபோக்கில் இவர் குறிப்பிடும் பாணி கவர்வதாக அமைகிறது. உமிக்கரி கொண்டு பல் தேய்த்ததில் தொடங்கி, பெண்பிள்ளைகள் தோண்டியும் கையுமாகத் தெருக்களில் திரியும் சின்னச் சின்னச் சித்திரங்கள்வரை அகண்டு போகிறது இவரது நினைவு.
பூப்பெய்தல் தொடங்கிப் பிள்ளைப் பேறு வரை. வீட்டு உரசல்கள் தொடங்கித் தன் கணவர் விருது வாங்கியது வரை, கைக்குத்தல் அரிசி சமைக்கத் தொடங்கி, கடை அரிசி பொங்கியது வரை. தோழியின் தலையில் பேன் குத்தியதிலிருந்து சினிமா பார்த்ததுவரை. இப்படி எண்ணற்ற ஊர் சோலி கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. காலம், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தன் ஈவு இரக்கமற்ற கால்களால் மிதித்து நொறுக்கி, தூக்கித் தூரக் கடாசிய அத்தனை பழங்கதைப் பண்பாட்டையும் பாவனையற்று எழுத்தில் படம் பிடித்திருக்கிறார் கமலா அம்மாள். பேறு காலத்துக் கை வைத்தியம். அதனுள் காலகாலமாக ஒளிந்துகிடக்கும் சாமான்ய மக்களின் மதிநுட்பம் என விவரிக்கும் இவர், “அம்மாவுக்கும் பெரியக்காவுக்கும் சில மாத வித்தியாசங்களில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அம்மா பிரசவத்திற்கு அக்காவும் அக்கா பிரசவத்திற்கு அம்மாவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள்என்கிறார். இப்படித் தலைமுறை இடைவெளிக்கே உரித்தான பல விஷேசத் தகவல்கள் இவரது பதிவில் அதிகம். மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் வீட்டில் உடன்பிறப்புகள் ஜனனமாவதும் வந்த வேகத்தில் நோவுகொண்டுபோவதும் வாடிக்கையாக இருந்துள்ளன.
இவரது தம்பி ஹரியின் மரணச் சம்பவம் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தங்கை பத்மா, சீமந்தத்திற்காகப் பிறந்த வீட்டுக்கு வருகிறார். சீமந்தம் முடிந்த மறுதினம் அவருக்கு வலிப்பு கொண்டு விடுகிறது. சிறுநீரகப் பரிசோதனையில் அல்பமின்அதிகமாகிவிட்டதாகவும் தாய் - சேய் இரு உயிரில் ஒன்றைத் தான் கரையேற்ற முடியுமென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தாயை மட்டும் காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை உணர்ந்தவர்கள் உயிரற்றுப் பிறக்கவிருக்கும் பச்சிளங்குழந்தையின் இறுதிக் காரியத்திற்கு மண்வெட்டியும் கையுமாக முன்கூட்டியே தயாராகிவிடுகிறார்கள். முடிவில் சுபமாக மண்வெட்டிக்கு வேலையில்லாமல் போனது என்று கமலா ராமசாமி சொல்லும் பாங்கு முதிர்ந்த எழுத்துக்கான அடையாளம்.
1954இல் சு.ராவோடு கமலா அம்மாளின் கல்யாணம். திருமணத்தின் போது ஊரில் மின்சார வசதி கிடையாது. ஆனால் ஜெனரேட்டர் போட்டுத் திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஊர் மக்கள் முகத்தில் ஈ ஆடாத நாள். இந்தத் தம்பதியின் புண்ணியத்தில் ஊர்க்காரர்கள் மின்விளக்கை முதன் முதலாகக் கண்கொட்டப் பார்த்து அலுக்கிறார்கள். இவ்வளவு தடபுடலாகக் கரம்பிடித்த தன் மனைவிக்கு சு.ரா. முதன்முதலாக வாங்கிக்கொடுத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு ஜதை செருப்பு. அது தேய்ந்துபோய் இன்று மாமாங்கம் கடந்துவிட்டது. மனம் தேயாது இன்றைக்கும் சொல்லி மகிழ்கிறார். திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்கு வந்திட்ட பின்பும் டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கப்போகிறார் கமலா ராமசாமி. இவர் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த கதை சுவாரஸ்யம் நிரம்பியது. அதே பள்ளியில் சு.ராவின் தங்கை சாரதா எட்டாம் வகுப்பு மாணவி. அண்ணியும் நாத்தனாரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க இந்த நாளில் யாருக்கு வாய்க்கும்? இந்தப் பொருந்தா சகவாசக் கதைகளைக் கொண்டு ஒரு மிகப் பெரிய காலமாற்றத்தை நம்மால் மதிப்பிட்டு உணர முடிகிறது. தன் மனைவி பற்றி சு.ரா. ஒரு கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: செங்கமலம் என்ற கமலா, மாராசி புண்ணியத்தால் தான் மனிதன்போல் நடமாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எங்களுக்கு எவ்வளவோ மேடு பள்ளங்கள். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன். அப்போதெல்லாம் அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்திருக்கிறாள்” - கணவரின் இன்பமூட்டும் இதமான சொற்கள். ஒரு எழுத்தாளனின் மனைவி லௌகீக கோடு தாண்டாமல் காலம் முழுக்க அடுப்படிக் கரித்துணியை மட்டுமே கட்டி அழுத காலத்தில் சு.ராவின் தாராள குணம் மனைவிக்குச் சரி பங்கு வழங்க முற்படுகிறது. கமலாவின் எழுத்தே அதற்குச் சாட்சி. அதில் அவருக்குச் சாதக பாதகங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் சு.ராவின் மெனக்கெடல் கூடுதல் எடை நிரம்பியது என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் புரியவைக்கிறது.
பாரதிக்குத் திருமணமான நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து, வீட்டில் ஊஞ்சல் வைபவம். சகலரின் முன்னிலையில் உட்கார்ந்து மனைவியைப் புகழ்ந்து ஓர் ஊஞ்சல் பாட்டுப் பாடுகிறான் பாரதி. பாட்டு முடிந்த கையோடு ஊராருக்கு விளக்க உரை என நீளுகிறது முண்டாசுக்காரன் பேச்சு. இச்சம்பவத்தைத் தன் பாரதியார் சரித்திரத்தில் உச்சுமுகர்ந்து எழுதுகிறார் செல்லம்மா. இல்லறத்தைத் தாண்டி சம்சார பந்தத்தைத் தூக்கி நிறுத்தப் போராடிய தன் உத்தமக் கணவன் இறந்த பிற்பாடு செல்லம்மா எப்படிப் பேசினார் தெரியும்தானே? 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் என்கணவர்என்ற தலைப்பில் அவரது உரை இவ்வாறு பதிவானது: காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போட வேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாழலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்துவிடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லைஎன வெந்தழல் சொற்களில் வேகுகிறார் செல்லம்மா. மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடிஎன்று வைரக் கிரீடம் பதிக்க முற்பட்டவன் மீது விழுந்த தர்ம அடி இது. அவ்வாறே காரல் மார்க்ஸுடனான வறுமை வாழ்க்கை பற்றி ஜென்னி மார்க்ஸ் குறிப்பிட்ட வரிகள் உலக பிரசித்தம் பெற்றவை: குழந்தைகள் பிறந்தபோது தொட்டில் வாங்க காசில்லை. அவர்கள் இறந்தபோது சவப்பெட்டி செய்யப் பணமில்லை.இப்படி ஓர் ஆளுமையைக் குற்றம் குறையோடு கணக்கிட முடியாமல் தவித்த மனைவியர்கள் மத்தியில் சு.ராவின் மனைவி வஞ்சனை கொள்ளாமல் வாக்குமூலம் வழங்கியிருப்பது தமிழில் இதுவே முதல் ஈடு. சு.ராவோடு தன் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைக் குறிக்கும் அவரின் வாக்குமூலம் இப்படி விரிகிறது. எனக்கும் சு.ராவிற்கும் உயர ஒற்றுமை இல்லை. சு.ரா.சொல்லும்படி ஆரோக்கியமானவர் இல்லை என்றாலும் எங்கள் இருவருடைய மனநிலையும் முதலிலிருந்தே இணைந்து போகக் கூடியதாகத்தான் இருந்தது.
நிறைய விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருவரும் இருந்திருக்கிறோம். நாள் செல்லச்செல்ல எங்களுடைய அந்நியோன்யம் கூடிக்கொண்டே போயிற்று. அதன்பின் என் உயரக் குறைவோ அவரின் ஆரோக்கியக் குறைவோ எங்கள் மனத்தில் இம்மியளவுக்கூட இல்லாமல் காற்றில் கரைந்தேபோயிற்றுஎன்கிறார். இந்தப் புரிதல்தான் கமலா ராமசாமியின் மூல ஆதாரம். சு.ராவைப் பற்றித் தமிழ் வாசகர்களிடம் ஏனைய சித்திரங்கள் புகை போலச் சுற்றுகின்றன. அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சில கற்பிதங்கள், வழுவல்கள் உள்ளன. அவர் ஒரு பணக்கார எழுத்தாளர். அவரது குடும்பச் சூழல் அவரை சௌகர்யமாக வைத்திருந்தது. சொந்த ஊரில் அவரின் அப்பா பெரிய ஜவுளிக் கடை அதிபர். பணமுடை இல்லாத குடும்பம். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். அத்தனை புனைவுகளையும் கலைத்துப்போடுகிறார் கமலா அம்மாள்.
அப்பாவின் கணக்குப்படி சு.ரா. ஒரு பரோபகாரி. சொத்து சுகம் சேர்க்க விரும்பாத சரா சரி. வாயில்லாப் பூச்சி. ஜவுளிக்கடை வியாபாரத் தந்திரங்களை அறியாத அம்மாஞ்சி. தேக பலமில்லாத சவலை. ஏறக்குறைய இந்த வார்த்தைகள் தோற்றுவிக்கும் ரூபத்தில்தான் அப்பாவுடைய கண்களுக்குக் காட்சி தந்திருக்கிறார் சு.ரா. அதை நாசூக்காக எடுத்தியம்புகிறது கமலாவின் எழுத்து. உளப்பூர்வமாக சுந்தர ராமசாமிக்கு வியாபாரத்தைக் கவனிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. தறியில் பிசிறும் நூலாய்ப் பிரிந்திருக்கிறார். விடாமல் உள்ளே கோத்து கோத்து அடித்திருக்கிறது அப்பாத் தறி. இவற்றுக்கிடையில் ஊடாட்டம் கிடந்து தலையை உருட்டுகிறது. அவருக்குள் எழுத்தாளன் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் செய்யப் பிறந்தவன் அல்லஎன்று அலுப்பாகப் பேசியிருக்கிறார். மறுத்திருக்கிறார்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தேய்வழக்கு சு.ராவுக்கும் பொருந்தும் தானே? பலரையும் போல அவருக்கும் சில அசட்டுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. மனைவியருக்குத் தயாராகும் பிரசவ லேகியத்தை விரும்பிச் சுவைப்பது. குளியலறைக்குள் தாழிட்டுக்கொண்டு சினிமா பாட்டை முணுமுணுப்பது எனச் சகல சந்தோஷங்களையும் சுவைக்க விரும்பிய அசல் கலைஞனின் அசரிரீகள் பல. பொதுவாக சு.ரா. பதினொன்று மணிக்கு மேலே எழுத ஆரம்பிப்பார். ஒன்றரை வாக்கில் முடித்துக்கொண்டு எழுவார். காலையில் எட்டரை ஒன்பதாகும் படுக்கையை மடிக்க. வீட்டில் அப்பாவுக்கு பயந்து ஒரு தப்பான காரியத்தை செய்யும் குற்றவுணர்வோடு தான் அவர் தன் கதைகளை வீட்டில் மறைத்து வைத்து எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்ததும் வீட்டுப்பெண்களிடம் - அப்பா இல்லாத சமயம் பார்த்து தன் கதைகளை வாசித்துக்காட்டுவது அவரது இயல்பு” - இவ்வாறு இவர் கொடுக்கும் குறிப்புகள் முழுக்க இதுவரை நாம் அறியாத சுந்தர ராமசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சு.ராவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றிய பதிவுகள் இதில் உள்ளன என்பது வாஸ்தவம்.
ஆனால் அதே சமயம் சில விடுபடல்களும் பதிவில் உள்ளன. கிருஷ்ணன் நம்பி, ராஜமார்த்தாண்டன், எம். எஸ்., அ. கா. பெருமாள், ஜெயமோகன், கனிமொழி, அம்பை, சல்மா இப்படிப் பலர். ஆனால் அவை நம் ஆவல் மிகுதியின்பால் எழும் தத்தளிப்புகள். எழுதியிருக்கலாமே எனத் தொனிக்கும் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கலாம். அனைத்தையும் சேர்த்து அடுத்த பதிப்பில் இவர் எழுதி விரிவுபடுத்தலாம். செல்லம்மா பாரதிக்குப் பிற்பாடு நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருடைய மனைவியின் வரலாற்றுப் பிரதி என்பதாலேயே இந்நூலை நான் கவனப்படுத்த விரும்பினேன். இனி, வரும் காலத்தில் பெண்ணிய வாசிப்பில் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சு. ராவின் வீட்டிற்கு ம. பொ. சியின் வருகை, கி. ராஜாநாராயணன், கு. அழகிரிசாமியின் குடும்பத்தோடான விஜயம். நா. பாவின் வாத்சல்ய தங்கல், லா. ச. ராமாமிருத்தின் அடுக்களை ஒத்தாசை, ஜானகிராமனின் வாஞ்சை நிரம்பிய வாசம், வண்ணநிலவன் அடிக்கொருதரம் எட்டுவைத்துப் பார்க்க வந்த பந்தம் என்று பலரின் வருகையைச் சிலாகிக்கும் கமலா ராமசாமி பிரமிளின் கோணல் புத்தியைக் குறிபார்த்துக் கொட்டிவிட்டு நகர்கிறார். தன் கணவரின் அதே எண்ணத்தை மறுபடியும் ஆழப் பதியவைக்கிறார். ஆனால் ஜி.நாகராஜன் உரசலைப் போகிற வேகத்தில் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை என்றாலும் இவரது நூலில் குறைகொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மனிதர் பிரமிள் மட்டுமே. இதைத் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் யாருக்கும் பொல்லாப்பாகாமல் கமலா ராமசாமி அம்மாள் வஞ்சனையற்ற வாக்குமூலத்தை வழங்கி விட்டுத் தப்பியிருக்கலாம்.


நெஞ்சில் ஒளிரும் சுடர், ஆசிரியர்: கமலா ராமசாமி பக். 160. நன்கொடை:100 (2011)வெளியீடு , காலச்சுவடு அறக்கட்டளை, 669 கே.பி.சாலைநாகர்கோவில் 629001 )
நன்றி:காலச்சுவடு நவம்பர் 2011

Sunday, September 11, 2011

வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி


ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில் வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில் அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவரான அதியமான், வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும் அரிய நூல்.
2008ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டதற்கான தகவல்கள் தட்டுப்படவில்லை. அதீத உழைப்பைக் கோரும் இம்மாதிரியான ஆய்வுகள் சகலத் தரப்புகளிலும் கவனம் பெறாதுபோவதற்கு வாசகர்களின் நோஞ்சான் தன்மையே முக்கியக் காரணம். ஒருசேர அனைவரும் ஒரே இடத்தில் குவியும் இச்சந்தைக் கடை மனப்போக்கு சத்தானதல்ல; ஊட்டச்சத்து குன்றிய ஆகாரத்திற்கு ஒப்பானது.
இன்று தமிழ் அச்சுத் துறை அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பின் எனக் குறிப்பிடுவதைவிட அழுத்தம் திருத்தமாக இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு இந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாக ஊதிப்பெருத்துள்ளது. தமிழில் சிறந்த நூற்பதிப்பு என்ற வேட்கையோடு இனிதே இயங்கிவந்த பதிப்புத் துறை இன்றைக்கு நூல் உற்பத்தித் துறையாக மட்டுமே சுருங்கிப்போனது சகிக்கக் கூடாத அவக்கேடு. இம்மாற்றம் லேசானதல்ல; சர்வதேசப் பெரும் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கிய உருமாற்றம். இது உருப்படியான மாற்றமா என்னும் விசாரணை தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. தொடர்ந்து பொருள் தேடக் கூடியது. தமிழ் அச்சுத் துறையின் வளர்ச்சி இன்று நேற்று உண்டானதல்ல; அச்சுத் துறையில் இந்திய மொழிகளிலேயே முன்னோடி என்னும் நட்சத்திர அந்தஸ்திற்குரிய பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமேயுண்டு. தரங்கம்பாடியில் சீகன் பால்கு, மிஷனரி பணிக்காகக் கால்வைத்த காலத்திலேயே தமிழ் ஊடகம் மறுமலர்ச்சியைக் கண்டுவிட்டது. அதன் அடையாளமாக இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகப் பைபிளைத் தமிழ்மொழியில் தான் வெளிக்கொணர்ந்தார் சீகன் பால்கு. இது வரலாறு. மிஷனரி பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட அச்சகங்கள் மக்கள் பயன்பாட்டை நோக்கி மெல்ல நகர்த்தப்பட்டன.
ஒரு நூற்றாண்டைத் தாண்டி ஆசிரியரின் பொறுப்பில் மட்டுமே செயல்பட்டுவந்த வெளியீட்டுத் துறை 1930களுக்குப் பிறகே ஆசிரியர், தொகுப்பாசிரியர் தனிப்பொறுப்பிலிருந்து சுயாதீனம் பெற்றது. பின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு அச்சேற்றும் தொழிலாக வளர்ச்சிகண்டிருக்கிறது. அச்சு என்பது தனித்த தொழிலாக வளர்ந்த காலத்தில்தான் ஏனைய பதிப்பகங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதையொட்டி உ. வே. சாமிநாதையர் எண்ணிலடங்காத ஓலைச் சுவடிகளுக்கு அச்சு உருவம் கொடுத்தார். அதன்பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மர்ரே பதிப்பகம், முருகவேள் புத்தகச் சாலை, திரு. வி. கவின் சாது அச்சுக் கூடம், அல்லயன்ஸ், நவயுக பிரசுராலயம், ஸ்டார் பிரசுரம், சக்தி பிரசுராலயம், பாரி நிலையம், தமிழ்ப் பண்ணை, பூங்கொடி பதிப்பகம், சக்தி காரியாலயம் இப்படி எண்ணற்ற பதிப்பகங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இவற்றில் பாதி, பொதுப் பதிப்பகங்களாகவும் நிறுவனங்களாகவுமே இயங்கின. அவ்வாறு தோன்றிய பதிப்பகங்களில் அச்சுத் தொழிலில் முன்னெட்டு வைத்த முதல் பதிப்பகம்தான் சக்தி காரியாலயம். அதன் உரிமையாளர் சக்தி வை. கோவிந்தன். இவரின் அச்சகச் சாதனைகள் ஆச்சரியம் கொள்ளத்தக்கவை. மலைக்கவைக்கும் காரியத்தையும் வை.கோ. அன்றே சாதுர்யமாக நிகழ்த்திக் காட்டினார். அதன் சான்றே பின்வரும் ஒரு சம்பவம்:
அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் ஒரு விஷேசத்தையொட்டிப் பன்னிரெண்டு வண்ணங்கள் கொண்ட படங்களை அச்சடிக்க முடிவெடுத்திருக்கிறது அந்நிர்வாகம். அதன் ஆர்டரைத் தூக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவர் கல்கத்தா, மும்பை என அலைந்து திரிந்து முடியாமல் கடைசியில் சென்னை திரும்பி கோவிந்தனிடம் வேலையைக் கொடுத்திருக்கிறார். அரைகுறை மனதோடு ஆர்டர் கைமாறியுள்ளது. பெரிய பெரிய கம்பெனி கதவுகளைத் தட்டிவிட்டுத் திரும்பியவரின் நம்பிக்கை பிசகாதபடி மிக நேர்த்தியாக அமைந்த கோவிந்தனின் அச்சுப் பணி ஆங்கிலேயரை அசரடித்திருக்கிறது. அப்படங்கள் மிகப் பழைய எந்திரத்தில் அச்சாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி வேறு ஆங்கிலேயருக்குக் காத்திருந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பழகியவர் கோவிந்தன். கைவசம் உள்ளதைக் கொண்டு வளர்ச்சியைப் புகுத்தியவர். எதையும் இலாவகமாகக் கையாளக் கற்றவர். இத்தனைக்கும் இவர் படித்தது வெறும் எட்டாம் வகுப்பு. மொத்தத்தில் வை. கோவிந்தன் அச்சுக் கலாச்சாரத்தின் நவீன அரிச் சுவடி. பரவலாக்கல் எனும் வடிவிற்காக அயராது சுழன்றுகொண்டிருந்த சமர்த்தான பல் சக்கரம் அவர்.
பொதுத்தளத்தில் இயங்கிய கோவிந்தன், காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இந்தக் கதர்ச் சட்டைக்காரருக்குள் சிறிதளவு சிகப்புச் சாயச் சார்பும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் உதயமான திராவிட அரசியலின் மீது கோவிந்தனுக்குச் சிலாக்கியமில்லை. வெறுப்பு உண்டு. ஆனால் சுயமரியாதைக் கட்சியினர் புகுத்திய மொழிச் சீர்திருத்தத்தில் உடன்பாடு கொண்டிருந்தார். தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கும் பண்பே தொழில்காரனுக்கு அழகு. அதன் லயம் உணர்ந்தவர் கோவிந்தன். திராவிட அரசியலுக்கு எதிரானவரான இவர் மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்திருக்கிறார். மேற்சொன்னவை கோவிந்தனைப் பற்றிய புறவயமான முக்கிய அம்சக் குறிப்புகள்.
1939இல் தொடங்கப்பட்ட சக்தி காரியாலயம் தமிழில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கே. எம். முன்ஷியின் அகண்ட இந்தியாவில் இருந்து ராஜ கோபாலாச்சாரியின் அபேத வாதம், வெ. சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பில் உருவான பிளேட்டோவின் அரசியல், சூடாமணியின் அலமு, டால்ஸ்டாயின் அன்ன கரினா, தொ. மு. சி. எழுதிய ஆணா பெண்ணா, மு. அருணாசலத்தின் உணவுப் பஞ்சம், ஏ. கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன், ஜே. சி. குமரப்பாவின் ஏசுநாதர் போதனை, கு. அழகிரிசாமியின் கதைகள், கொத்த மங்கலம் சுப்புவின் காந்தி மகான் கதை, புதுமைப்பித்தனின் சிற்றன்னை, வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி, ஆஸ்கர் வைல்டின் சிலையும் குருவியும், ஜான் ஸ்டீன்பெக்கின் சிவப்புக் குதிரைக்குட்டி, மார்க்சிம் கார்க்கியின் தந்தையின் காதலி, செல்லம்மா பாரதியின் பாரதியார் சரித்திரம், மகாகவி பாரதியார் கவிதைகள், கம்ப ராமாயணம், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்று ஏகப்பட்ட வரிசைகள். வை.கோ. தானே சில நூல்களை எழுதியும் இருக்கிறார். பதிப்பகம், எழுத்தாளர் என்னும் இரட்டைக்குதிரையில் சவாரிசெய்தவர் இவர். இவரது சக்தி பத்திரிகையில் தான் கரிசல்காட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணியாற்றினார். அழகிரிசாமியின் ஏராளமான கதைகளை வெளியிட்ட பெருமை சக்தி பத்திரிகைக்கு உண்டு. அழகிரிசாமியின் வெந்தழலால் வேகாதுஎனும் மிகச் சிறந்த கதையின் தொடர்ச்சி போலமைந்த விட்டகுறைசக்தியில் பிரசுரமான கதை. அவர் பல அயலகப் படைப்புகளைச் சக்தி காரியாலயத்திற்காக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
வை. கோவிந்தனின் வாழ்க்கைப் பருவத்தை ஆய்வாளர் மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கிறார். 1912இல் பிறந்தது முதல் தொழிலுக்கு வந்த 1938 வரை இளமைக்காலம்; 1939 முதல் 1960வரை பதிப்பு காலம்; வாழ்வின் இறுதிப் பகுதியில் எழுத்தில் ஈடுபாடு உண்டான காலம். கோவிந்தனின் சொந்த ஊர் ராயவரம். தன் இளமையைப் பர்மாவில் கழித்த இவர், சென்னை விஜயத்திற்குப் பிறகே பதிப்பகப் பணியின் பக்கம் தலைவைத்தார். இப்பதிப்பகம் சென்னை, காரைக்குடி, ராயவரம் என்று மாறிமாறி இயங்கியுள்ளது. இதற்குக் கோயமுத்தூர், திருநெல்வேலி நகரங்களில் கிளைகளும் இயங்கின. பின்னால் ஓர் உத்வேகம் பிறந்து சக்தி, மங்கை, அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, கதைக்கடல் எனப் பல இதழ்களைத் தருவித்தார் கோவிந்தன். தவிர சினிமா இதழொன்றையும் நடத்தியுள்ளார். இதில்தான் கவியரசு கண்ணதாசன் பணியாற்றினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் கால இவரது செயல்பாடு அச்சுத் தொழிலில் தீவிரமாக இயங்கியிருக்கிறது. கோவிந்தன், முதல் மனைவி அழகம்மை மறைவுக்குப் பின்னால் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சந்நியாச சம்போகம் கொண்டும் இருந்திருக்கிறார். அப்புறம் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்திருக்கிறார். அச்சுத் தொழிலைத் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இவரால் பழக்கப்பட்டு உருவான பிற பதிப்பகங்கள் பழனியப்பா பிரதர்ஸ், தமிழ்ப் பண்ணை உள்ளிட்டவை. தான் கற்றதை ஊராருக்கும் எடுத்தோதும் நற்குணம் வை.கோவிந்தனுக்குள் தூக்கலாகவே இருந்திருக்கிறது.
சக்தி காரியாலயத்தின் முதல் நூல் டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டியது யாது. பின்னர் போரும் வாழ்வும் நூலின் ஆறில் ஒரு பகுதியை அச்சிட்டுப் போரும் காதலும் என்னும் தலைப்பில் 1943இல் வெளியிட்டார். தொடர்ந்து அதன் மற்ற பகுதிகளை வெளியிடவில்லை. இதற்கு இரண்டாம் உலக யுத்தத்தால் உருவான காகித நெருக்கடியும் சரியான ஆங்கில மூலம் கிடைக்காததுமே காரணம். மூல நூல் 1957இல் கிடைத்ததும் 2,500 பக்கமுள்ள முழுப் பிரதியையும் வெளியிட்டார். இதன் அடக்க விலை 24 ரூபாய். தனித்தனி பாகங்கள் எட்டு ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. அதை மொழிபெயர்த்தது பேனா மன்னன் டி. எஸ். சொக்கலிங்கம். குறிப்பிட்ட ஒரு மூல நூலுக்காக இப்பதிப்பாளர் 14 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார். கொஞ்சமும் அச்சு அறமில்லாமல் செயல்படும் இக்காலத்துப் பதிப்பகத்தார் சிலர் கோவிந்தனிடம் கற்றுத்தேற வேண்டிய மிகச் சிறந்த பாடம் இது.
டி. எஸ். சொக்கலிங்கம் எழுதிய மக்கள்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் பஞ்சம் பற்றிய சிறு பிரசுரம் வாயிலாகவே சக்தி காரியாலயத்தை நான் முதன்முதலாகக் கண்டடைந்தேன். ஏ. கே. செட்டியார் எழுதிய பிரயாண நினைவுகள் புத்தகத்தைப் பின்னர் படிக்க நேர்ந்தது. அப்படியே சில பழம் பதிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை தமிழில் வாசகர் வட்டம் பதிப்பகத்தை உச்சிமுகர்ந்து கொண்டுவந்த எனக்குச் சக்தி காரியாலயச் சாதனைகள்மீது ஒரு சரித்திரச் சாய்வு இங்குதான் உண்டானது. பல வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் கோவிந்தனின் வாரிசுகள் நித்ய ஆகாரத்திற்கே அவதிப்படுவதாய் ஒரு செய்தி படித்து மனம் சரிந்தேன். தமிழின் முன்னோடி ஆளுமைக்கு இப்படி நேர்வது வழமைதானே.
தனது பதிப்பகத்தை லாப நோக்கிற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல் வை.கோ. மக்கள் வசதி கருதி, பல மலிவுப் பதிப்புகளைக் கொண்டு வந்தார். அப்படி மலிவுப் பதிப்பாக வெளிவந்ததே கம்பராமாயணத்தின் பால காண்டம்-அயோத்தியா காண்டம். வெ. சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்திற்கு இணையாக வாசக நலம் கருதி வெ. சாவின் தத்துவ முன்னோடி நூல்களை சக்தியும் வெளியிட்டது. பாரதியாரின் கவிதைகள் முதற்பதிப்பில் 15,000 படிகள் அச்சடிக்கப்பட்டு விற்றும் தீர்ந்துள்ளன. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கோவிந்தன் தெரிவித்த கருத்தை இன்று படிக்கவும் பிரமிப்பாக இருக்கிறது. ஏழரை ரூபாய் விலைக்கு விற்ற பாரதியின் கவிதைத் தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். திருக்குறள் விஷயத்திலும் அவ்வாறே. ‘15 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. 21 ஆயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் சுலபமாக விற்பனையாகும்என்கிறார். இத்தனை வசதி வாய்ப்புகளும் வாசல் தேடி சுலபமாக வந்திட்ட வரப்பிரசாதமல்ல; கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உழைப்பால் இக்கோட்டை மதிற் சுவரைக் கோவிந்தன் கட்டி எழுப்பினார். ஆகவேதான் சி. சு. செல்லப்பா இவரது பதிப்பகத்தை பென்குவினுக்கு நிகர் என்கிறார். சக்தி இதழை டைம்ஸோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அரசு நூலகப் பொருளுதவிகள் இல்லாத நாளில் தனித் தெம்போடு அமைந்த இவரின் லட்சிய நடை மெச்சக் கூடியது. அச்சுத் துறையில் தனிச் சூரியனாய்க் கிளம்பிய கோவிந்தன் 1966இல் தனது தொடர்ச்சியான இயக்கத்தை நிறுத்திக்கொண்டது ஒரு பேரிழப்பு. ஒரு பதிப்பாளரைப் பற்றி அவர்தம் அரும் பெரும் ஆற்றல் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட பழ. அதியமானின் இந்நூல் காலக் கண்ணாடியின் உடைந்த சிறு துண்டு. ஆனால் அதற்குள் தெரிவது பெரிய வானம்.




ஆசிரியர்: 
பழ. அதியமான்
பக். 232, விலை ரூ.175 (2008)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில்