Showing posts with label ஆளுமை. Show all posts
Showing posts with label ஆளுமை. Show all posts

Sunday, September 11, 2011

வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி


ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில் வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில் அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவரான அதியமான், வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும் அரிய நூல்.
2008ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டதற்கான தகவல்கள் தட்டுப்படவில்லை. அதீத உழைப்பைக் கோரும் இம்மாதிரியான ஆய்வுகள் சகலத் தரப்புகளிலும் கவனம் பெறாதுபோவதற்கு வாசகர்களின் நோஞ்சான் தன்மையே முக்கியக் காரணம். ஒருசேர அனைவரும் ஒரே இடத்தில் குவியும் இச்சந்தைக் கடை மனப்போக்கு சத்தானதல்ல; ஊட்டச்சத்து குன்றிய ஆகாரத்திற்கு ஒப்பானது.
இன்று தமிழ் அச்சுத் துறை அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பின் எனக் குறிப்பிடுவதைவிட அழுத்தம் திருத்தமாக இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு இந்த அபார வளர்ச்சி அபாய வளர்ச்சியாக ஊதிப்பெருத்துள்ளது. தமிழில் சிறந்த நூற்பதிப்பு என்ற வேட்கையோடு இனிதே இயங்கிவந்த பதிப்புத் துறை இன்றைக்கு நூல் உற்பத்தித் துறையாக மட்டுமே சுருங்கிப்போனது சகிக்கக் கூடாத அவக்கேடு. இம்மாற்றம் லேசானதல்ல; சர்வதேசப் பெரும் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கிய உருமாற்றம். இது உருப்படியான மாற்றமா என்னும் விசாரணை தொடர்ந்து விவாதிக்கத்தக்கது. தொடர்ந்து பொருள் தேடக் கூடியது. தமிழ் அச்சுத் துறையின் வளர்ச்சி இன்று நேற்று உண்டானதல்ல; அச்சுத் துறையில் இந்திய மொழிகளிலேயே முன்னோடி என்னும் நட்சத்திர அந்தஸ்திற்குரிய பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமேயுண்டு. தரங்கம்பாடியில் சீகன் பால்கு, மிஷனரி பணிக்காகக் கால்வைத்த காலத்திலேயே தமிழ் ஊடகம் மறுமலர்ச்சியைக் கண்டுவிட்டது. அதன் அடையாளமாக இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகப் பைபிளைத் தமிழ்மொழியில் தான் வெளிக்கொணர்ந்தார் சீகன் பால்கு. இது வரலாறு. மிஷனரி பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட அச்சகங்கள் மக்கள் பயன்பாட்டை நோக்கி மெல்ல நகர்த்தப்பட்டன.
ஒரு நூற்றாண்டைத் தாண்டி ஆசிரியரின் பொறுப்பில் மட்டுமே செயல்பட்டுவந்த வெளியீட்டுத் துறை 1930களுக்குப் பிறகே ஆசிரியர், தொகுப்பாசிரியர் தனிப்பொறுப்பிலிருந்து சுயாதீனம் பெற்றது. பின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு அச்சேற்றும் தொழிலாக வளர்ச்சிகண்டிருக்கிறது. அச்சு என்பது தனித்த தொழிலாக வளர்ந்த காலத்தில்தான் ஏனைய பதிப்பகங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதையொட்டி உ. வே. சாமிநாதையர் எண்ணிலடங்காத ஓலைச் சுவடிகளுக்கு அச்சு உருவம் கொடுத்தார். அதன்பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மர்ரே பதிப்பகம், முருகவேள் புத்தகச் சாலை, திரு. வி. கவின் சாது அச்சுக் கூடம், அல்லயன்ஸ், நவயுக பிரசுராலயம், ஸ்டார் பிரசுரம், சக்தி பிரசுராலயம், பாரி நிலையம், தமிழ்ப் பண்ணை, பூங்கொடி பதிப்பகம், சக்தி காரியாலயம் இப்படி எண்ணற்ற பதிப்பகங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இவற்றில் பாதி, பொதுப் பதிப்பகங்களாகவும் நிறுவனங்களாகவுமே இயங்கின. அவ்வாறு தோன்றிய பதிப்பகங்களில் அச்சுத் தொழிலில் முன்னெட்டு வைத்த முதல் பதிப்பகம்தான் சக்தி காரியாலயம். அதன் உரிமையாளர் சக்தி வை. கோவிந்தன். இவரின் அச்சகச் சாதனைகள் ஆச்சரியம் கொள்ளத்தக்கவை. மலைக்கவைக்கும் காரியத்தையும் வை.கோ. அன்றே சாதுர்யமாக நிகழ்த்திக் காட்டினார். அதன் சான்றே பின்வரும் ஒரு சம்பவம்:
அடையாறு பிரம்ம ஞான சங்கத்தின் ஒரு விஷேசத்தையொட்டிப் பன்னிரெண்டு வண்ணங்கள் கொண்ட படங்களை அச்சடிக்க முடிவெடுத்திருக்கிறது அந்நிர்வாகம். அதன் ஆர்டரைத் தூக்கிக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவர் கல்கத்தா, மும்பை என அலைந்து திரிந்து முடியாமல் கடைசியில் சென்னை திரும்பி கோவிந்தனிடம் வேலையைக் கொடுத்திருக்கிறார். அரைகுறை மனதோடு ஆர்டர் கைமாறியுள்ளது. பெரிய பெரிய கம்பெனி கதவுகளைத் தட்டிவிட்டுத் திரும்பியவரின் நம்பிக்கை பிசகாதபடி மிக நேர்த்தியாக அமைந்த கோவிந்தனின் அச்சுப் பணி ஆங்கிலேயரை அசரடித்திருக்கிறது. அப்படங்கள் மிகப் பழைய எந்திரத்தில் அச்சாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி வேறு ஆங்கிலேயருக்குக் காத்திருந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பழகியவர் கோவிந்தன். கைவசம் உள்ளதைக் கொண்டு வளர்ச்சியைப் புகுத்தியவர். எதையும் இலாவகமாகக் கையாளக் கற்றவர். இத்தனைக்கும் இவர் படித்தது வெறும் எட்டாம் வகுப்பு. மொத்தத்தில் வை. கோவிந்தன் அச்சுக் கலாச்சாரத்தின் நவீன அரிச் சுவடி. பரவலாக்கல் எனும் வடிவிற்காக அயராது சுழன்றுகொண்டிருந்த சமர்த்தான பல் சக்கரம் அவர்.
பொதுத்தளத்தில் இயங்கிய கோவிந்தன், காங்கிரஸ் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இந்தக் கதர்ச் சட்டைக்காரருக்குள் சிறிதளவு சிகப்புச் சாயச் சார்பும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் உதயமான திராவிட அரசியலின் மீது கோவிந்தனுக்குச் சிலாக்கியமில்லை. வெறுப்பு உண்டு. ஆனால் சுயமரியாதைக் கட்சியினர் புகுத்திய மொழிச் சீர்திருத்தத்தில் உடன்பாடு கொண்டிருந்தார். தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கும் பண்பே தொழில்காரனுக்கு அழகு. அதன் லயம் உணர்ந்தவர் கோவிந்தன். திராவிட அரசியலுக்கு எதிரானவரான இவர் மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்திருக்கிறார். மேற்சொன்னவை கோவிந்தனைப் பற்றிய புறவயமான முக்கிய அம்சக் குறிப்புகள்.
1939இல் தொடங்கப்பட்ட சக்தி காரியாலயம் தமிழில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கே. எம். முன்ஷியின் அகண்ட இந்தியாவில் இருந்து ராஜ கோபாலாச்சாரியின் அபேத வாதம், வெ. சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பில் உருவான பிளேட்டோவின் அரசியல், சூடாமணியின் அலமு, டால்ஸ்டாயின் அன்ன கரினா, தொ. மு. சி. எழுதிய ஆணா பெண்ணா, மு. அருணாசலத்தின் உணவுப் பஞ்சம், ஏ. கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன், ஜே. சி. குமரப்பாவின் ஏசுநாதர் போதனை, கு. அழகிரிசாமியின் கதைகள், கொத்த மங்கலம் சுப்புவின் காந்தி மகான் கதை, புதுமைப்பித்தனின் சிற்றன்னை, வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி, ஆஸ்கர் வைல்டின் சிலையும் குருவியும், ஜான் ஸ்டீன்பெக்கின் சிவப்புக் குதிரைக்குட்டி, மார்க்சிம் கார்க்கியின் தந்தையின் காதலி, செல்லம்மா பாரதியின் பாரதியார் சரித்திரம், மகாகவி பாரதியார் கவிதைகள், கம்ப ராமாயணம், டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்று ஏகப்பட்ட வரிசைகள். வை.கோ. தானே சில நூல்களை எழுதியும் இருக்கிறார். பதிப்பகம், எழுத்தாளர் என்னும் இரட்டைக்குதிரையில் சவாரிசெய்தவர் இவர். இவரது சக்தி பத்திரிகையில் தான் கரிசல்காட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி பணியாற்றினார். அழகிரிசாமியின் ஏராளமான கதைகளை வெளியிட்ட பெருமை சக்தி பத்திரிகைக்கு உண்டு. அழகிரிசாமியின் வெந்தழலால் வேகாதுஎனும் மிகச் சிறந்த கதையின் தொடர்ச்சி போலமைந்த விட்டகுறைசக்தியில் பிரசுரமான கதை. அவர் பல அயலகப் படைப்புகளைச் சக்தி காரியாலயத்திற்காக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
வை. கோவிந்தனின் வாழ்க்கைப் பருவத்தை ஆய்வாளர் மூன்று கட்டங்களாகப் பகுத்துப் பார்க்கிறார். 1912இல் பிறந்தது முதல் தொழிலுக்கு வந்த 1938 வரை இளமைக்காலம்; 1939 முதல் 1960வரை பதிப்பு காலம்; வாழ்வின் இறுதிப் பகுதியில் எழுத்தில் ஈடுபாடு உண்டான காலம். கோவிந்தனின் சொந்த ஊர் ராயவரம். தன் இளமையைப் பர்மாவில் கழித்த இவர், சென்னை விஜயத்திற்குப் பிறகே பதிப்பகப் பணியின் பக்கம் தலைவைத்தார். இப்பதிப்பகம் சென்னை, காரைக்குடி, ராயவரம் என்று மாறிமாறி இயங்கியுள்ளது. இதற்குக் கோயமுத்தூர், திருநெல்வேலி நகரங்களில் கிளைகளும் இயங்கின. பின்னால் ஓர் உத்வேகம் பிறந்து சக்தி, மங்கை, அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, கதைக்கடல் எனப் பல இதழ்களைத் தருவித்தார் கோவிந்தன். தவிர சினிமா இதழொன்றையும் நடத்தியுள்ளார். இதில்தான் கவியரசு கண்ணதாசன் பணியாற்றினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் கால இவரது செயல்பாடு அச்சுத் தொழிலில் தீவிரமாக இயங்கியிருக்கிறது. கோவிந்தன், முதல் மனைவி அழகம்மை மறைவுக்குப் பின்னால் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சந்நியாச சம்போகம் கொண்டும் இருந்திருக்கிறார். அப்புறம் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்திருக்கிறார். அச்சுத் தொழிலைத் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இவரால் பழக்கப்பட்டு உருவான பிற பதிப்பகங்கள் பழனியப்பா பிரதர்ஸ், தமிழ்ப் பண்ணை உள்ளிட்டவை. தான் கற்றதை ஊராருக்கும் எடுத்தோதும் நற்குணம் வை.கோவிந்தனுக்குள் தூக்கலாகவே இருந்திருக்கிறது.
சக்தி காரியாலயத்தின் முதல் நூல் டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டியது யாது. பின்னர் போரும் வாழ்வும் நூலின் ஆறில் ஒரு பகுதியை அச்சிட்டுப் போரும் காதலும் என்னும் தலைப்பில் 1943இல் வெளியிட்டார். தொடர்ந்து அதன் மற்ற பகுதிகளை வெளியிடவில்லை. இதற்கு இரண்டாம் உலக யுத்தத்தால் உருவான காகித நெருக்கடியும் சரியான ஆங்கில மூலம் கிடைக்காததுமே காரணம். மூல நூல் 1957இல் கிடைத்ததும் 2,500 பக்கமுள்ள முழுப் பிரதியையும் வெளியிட்டார். இதன் அடக்க விலை 24 ரூபாய். தனித்தனி பாகங்கள் எட்டு ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. அதை மொழிபெயர்த்தது பேனா மன்னன் டி. எஸ். சொக்கலிங்கம். குறிப்பிட்ட ஒரு மூல நூலுக்காக இப்பதிப்பாளர் 14 ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார். கொஞ்சமும் அச்சு அறமில்லாமல் செயல்படும் இக்காலத்துப் பதிப்பகத்தார் சிலர் கோவிந்தனிடம் கற்றுத்தேற வேண்டிய மிகச் சிறந்த பாடம் இது.
டி. எஸ். சொக்கலிங்கம் எழுதிய மக்கள்தொகைப் பெருக்கத்தால் உண்டாகும் பஞ்சம் பற்றிய சிறு பிரசுரம் வாயிலாகவே சக்தி காரியாலயத்தை நான் முதன்முதலாகக் கண்டடைந்தேன். ஏ. கே. செட்டியார் எழுதிய பிரயாண நினைவுகள் புத்தகத்தைப் பின்னர் படிக்க நேர்ந்தது. அப்படியே சில பழம் பதிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. அதுவரை தமிழில் வாசகர் வட்டம் பதிப்பகத்தை உச்சிமுகர்ந்து கொண்டுவந்த எனக்குச் சக்தி காரியாலயச் சாதனைகள்மீது ஒரு சரித்திரச் சாய்வு இங்குதான் உண்டானது. பல வருடங்கள் கழித்து ஆனந்த விகடனில் கோவிந்தனின் வாரிசுகள் நித்ய ஆகாரத்திற்கே அவதிப்படுவதாய் ஒரு செய்தி படித்து மனம் சரிந்தேன். தமிழின் முன்னோடி ஆளுமைக்கு இப்படி நேர்வது வழமைதானே.
தனது பதிப்பகத்தை லாப நோக்கிற்குள் மட்டுமே சுருக்கிவிடாமல் வை.கோ. மக்கள் வசதி கருதி, பல மலிவுப் பதிப்புகளைக் கொண்டு வந்தார். அப்படி மலிவுப் பதிப்பாக வெளிவந்ததே கம்பராமாயணத்தின் பால காண்டம்-அயோத்தியா காண்டம். வெ. சாமிநாத சர்மாவின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்திற்கு இணையாக வாசக நலம் கருதி வெ. சாவின் தத்துவ முன்னோடி நூல்களை சக்தியும் வெளியிட்டது. பாரதியாரின் கவிதைகள் முதற்பதிப்பில் 15,000 படிகள் அச்சடிக்கப்பட்டு விற்றும் தீர்ந்துள்ளன. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கோவிந்தன் தெரிவித்த கருத்தை இன்று படிக்கவும் பிரமிப்பாக இருக்கிறது. ஏழரை ரூபாய் விலைக்கு விற்ற பாரதியின் கவிதைத் தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். திருக்குறள் விஷயத்திலும் அவ்வாறே. ‘15 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. 21 ஆயிரம் பிரதிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. இன்னும் 50 ஆயிரம் பிரதிகள் சுலபமாக விற்பனையாகும்என்கிறார். இத்தனை வசதி வாய்ப்புகளும் வாசல் தேடி சுலபமாக வந்திட்ட வரப்பிரசாதமல்ல; கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உழைப்பால் இக்கோட்டை மதிற் சுவரைக் கோவிந்தன் கட்டி எழுப்பினார். ஆகவேதான் சி. சு. செல்லப்பா இவரது பதிப்பகத்தை பென்குவினுக்கு நிகர் என்கிறார். சக்தி இதழை டைம்ஸோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அரசு நூலகப் பொருளுதவிகள் இல்லாத நாளில் தனித் தெம்போடு அமைந்த இவரின் லட்சிய நடை மெச்சக் கூடியது. அச்சுத் துறையில் தனிச் சூரியனாய்க் கிளம்பிய கோவிந்தன் 1966இல் தனது தொடர்ச்சியான இயக்கத்தை நிறுத்திக்கொண்டது ஒரு பேரிழப்பு. ஒரு பதிப்பாளரைப் பற்றி அவர்தம் அரும் பெரும் ஆற்றல் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட பழ. அதியமானின் இந்நூல் காலக் கண்ணாடியின் உடைந்த சிறு துண்டு. ஆனால் அதற்குள் தெரிவது பெரிய வானம்.




ஆசிரியர்: 
பழ. அதியமான்
பக். 232, விலை ரூ.175 (2008)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில்

Tuesday, June 14, 2011

தலைவர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்!


எல்லிசன்! தமிழன் மறந்துபோன ஒரு ஆங்கிலேய தமிழ் அறிஞர்! பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற தன் ஆங்கில பெயரை தமிழ் ஒலிச் சப்தத்திற்கேற்ப தூய தமிழில் எல்லீசன் என்று மாற்றிக்கொண்ட தமிழ்மொழிக் காதலர்!

தமிழுக்கு அப்படி இவர் என்னதான் செய்தார் என்கிறீர்களா? திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெரியாரால் போற்றப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த உத்தமர் இந்த எல்லீஸ்! மதராஸ் ஆங்கிலேய அரசாங்கத்தின் வருவாய் வாரியச் செயலாளர் பதிவிக்காக இந்தியா வந்த இவர் நிலச்சுங்க அதிகாரி,சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்த ஓர் உயர் அதிகாரி. இவரது காலத்தில்தான் சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சதைப் போக பல கிணறுகள் வெட்டப்பட்டன. இப்போதும் ஏழுகிணறு என சென்னை மக்களால் குறிப்பிடப்படும் கிணறு எல்லிஸால் வெட்டப்பட்டதுதான். தமிழனின் தாக்கம் போக்கிய இந்த ஆகிலேயனுக்கு தமிழ்மீது தனியா தாகம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை!

மறைந்துபோன எல்லிஸ் வரலாற்றை மறுபடியும் கண்டறிந்தவர் தாமஸ் டிராவுட்மன். ஒரு பயணத்தின்போது எதேட்சையாக அயர்லாந்தில் இருந்த எல்லிஸின் கையெழுத்துப் பிரதிகளை புறட்டிப்பார்த்த டிராவுட்மன் இது அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்.உடனே தாமதிக்காமல் தன் ஆய்வைத் தொடர்கிறார்.இந்த தாமஸும் ஓர் ஆங்கிலேயர் என்பது கூடுதல் தகவல். தமிழை பற்றி ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு தமிழர்களே உணரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! மக்கள் ஒருபுறம் இருக்கட்டும் அரசாவது உணர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் நமக்கு பதில் வருகிறது.கால்டுவெல்லுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு எல்லிஸ் கெளரவிக்கப்படவில்லை.

“தமிழ்மொழி,இலக்கியத்தின் மீது காதலார்வம் கொண்ட்டிருந்த எல்லிஸின் புலமை இன்று பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது;அதனை மீட்டு,தமிழ் வாசகர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம்என்கிறார் தாமஸ் டிராவுட்மன்.இவர் அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலையில் பணியாற்றி வரும் மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்.

எல்லிஸின் ஆய்வுகள் குறித்த நன்கு அறிந்த தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கிடாசலபதியிடம் பேசினோம். “தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு ஆங்கிலேய துரை எல்லீசனுக்கு பயிற்சியிருந்தது.நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம்பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிருகிறார்.சென்னையில் தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கச் சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நான்கு வாரகம் தங்க நாணயங்களை வார்த்து வெளியிட்டவரும் இவரே. 1994ல் ஐராவதம் மகாதேவன் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த இரு நாணயங்களையும் கல்கத்தாவில் இருந்த இரு நாணயங்களையும் கண்டெடுத்து அதன் ஒளிநகலை முதன்முதலாக வெளியிட்டார்.

எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ்கோட்டையில் ஒரு கல்லூரியை 1812ல் நிறுவினார்.சென்னைக் கல்ல்விச் சங்கம்என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது.1856ல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்என்னும் அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே,1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்என்ற புலமை மிக்க கருத்தாக்கத்தை கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு முதலான திராவிட மொழிக்குடும்பம் என்றும்,சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ்தான் முதலில் நிறுவுகிறார்என்ற சலபதியிடம் “தன் ஆய்வுகளை எல்லிஸ் ஏன் வெளியிட முயற்சிக்கவில்லை என்றோம்?மறுபடி தொடர்ந்தார் சலபதி.

“நாற்பது வயது நிறையும் வரை நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதிபூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடீரென்று உடல்நிலை சீர்குலைந்து மறைந்துபோகிறார்.இதனால் அவரது ஆய்வு மூலையில் முடக்கிவிட்டது.இதை மீண்டும் கண்டெடுத்து நூலாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியீடுவதற்கு முன்னதாகவே தமிழாக்க செய்து வெளியிடப்பட்டது.இவ்வளவு சிறப்பு மிக்க நூல் தமிழக அரசு நூலகத்திற்குகூட கொள்முதல் செய்யாமல் தவிர்த்துவிட்டது என்ற செய்தி வருந்த்தக்க ஒன்றாகும்.பள்ளிக்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டம் ஒரு பலனும் கிடைக்கவில்லைஎன்றார்.

தாமஸ் டிராவுமன் தனது தமிழ்மொழிபெயர்ப்பு நூலை எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.அவருடன் பேசினோம். “டிராவுட்மன் அர்த்தசாஸ்திரம் பற்றி ஆய்வைதான் முதலில் மேற்கொள்கிறார்.அதன்மூலம் அர்த்தசாஸ்திரம் கெளடில்யர் என்ற தனியொருவரின் படைப்பல்ல;சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான நூல் அது என்று தன் புள்ளியல் பகுப்பாய்வின் மூலம் நிறுவினார். தற்செயலாக ஏ.எல்.பாஷம் எழுதிய The Wonder that was India என்ற நூலை படிக்கிறார். அதன் பின் டிராவுட்மன் கவனம் இந்தியாவின் மீது விழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு புதிய ஆய்வுகள் நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை.எல்லோரும் பாடிய பாட்டையே பாடுகிறார்கள்.கால்டுவெல் எவ்வளவு முக்கியமான அறிஞரோ அதற்கு சற்றும் குறையாதவர் எல்லிஸ்.மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி உட்பட பல நல்ல துறைகளை சென்னையில் நிறுவியவர்.ஆனால் எல்லிஸை யாரும் கண்ண்டுகொள்வதேயில்லை.இதே போலதான் அறிஞர் சுரேஷ்பிள்ளை.வரலாற்றாய்வில் மிகப் பெரிய முன்னோடி.அவரையும் யாரும் பேசுவதில்லை. தாமஸ் டிராவுட்மனை எனக்கு 1974ல் இருந்து தெரியும்.திராவிட உறவுமுறைஆய்விற்காக இந்தியா வந்த போது பழக்கமேற்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பல வரலாற்று சின்னங்களை காண என்னுடன் பயணித்தார். அவரது ஆய்வை உலகம் அறிந்துகொண்டு எல்லிஸை இன்று கொண்டாடுகிறது.தமிழனுக்காக நடத்தப்பட்ட ஆய்வை தமிழகஅரசுகூட கண்டுகொள்ளாதது துரதிருஷ்டமானதுதான்என்றார்.

எல்லிஸின் கல்லறையை கண்டறிந்தவர் கல்வெட்டறிஞர் வெ.வேதாசலம்“பல்வேறு ஆய்விற்காக நான் சுற்றிய போது இராமநாதபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் எல்லிஸின் கல்லறையுடன் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தேன்.சிதைந்த நிலையில் கிடந்த அக்கல்வெட்டை இப்போது பாதுகாப்பாக மதுரை நாயக்கர் மகால் அருங்காட்சியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்என்றார். எல்லிஸின் சில கட்டுரைகளை தமிழுக்கு மறுபடியும் வழங்கியவர் பேரா.மருதநாயகம்.எல்லிஸின் பிரதிகளை வெளியிட கொடுத்த பதிப்பகமொன்று எல்லிஸ் ஆய்வை தன் தாயாருக்கு சமர்ப்பணம் செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

எவ்வித பிரதிபலனும் பாராமல் உழைத்த எல்லிஸுக்கு இன்று ஒரு படம் கூட இல்லை. சிலை கூட இல்லை.இதைவிட கொடுமை வேரென்ன இருக்கமுடியும்? வாழ்க செம்மொழியான தமிமொழியாம்!

-நன்றி குமுதம்

Wednesday, February 18, 2009

சுகத்தின் கேன்வாஸ்;மருது




இந்த மாத பிப்ரவரி உயிர் எழுத்து(2009) இதழில் ஓவியர் மருதுவைப் பற்றி தா.சனாதனன், அ.மங்கை,இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட சிலர் தங்களின் பார்வையை எழுதியிருந்தார்கள். அதில்ஓவிய விமர்சகர் சனாதனன் சென்னை ஓவியக் கல்லூரியின் ஆரம்பக்கால சரித்திரத்தில் தொடங்கி மருது வரை வளர்ந்து வந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றி பன்முகநோக்கில்குறிபிட்டுச் சொல்லும்அளவிற்கு விரிவாக எழுதியிருந்தார். வாழும் காலத்திலேயே படைப்பாளியை கௌரவிக்கும் நோக்கில் உயிர் எழுத்து எடுக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஓர் இதழ், ஓர்ஆளுமையைப் பற்றிய பதிவுகளை வெளியிடவேண்டும் என விரும்பினால் கொஞ்சமாவது மெனக்கெட்டு பலரிடம் படைப்புகளைப் பெற்று அது நிறைவெட்டும்வரை பொறுத்திருந்து செவ்வனே கொணர வேண்டும். அதுதான் சிற்றிதழ் தருமம்.உயிர் எழுத்தின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்ற என்னுடைய அதீத ஆவல் கரணமாக இதை இங்கு பதியவைப்பதாக நீங்கள் எடுத்து கொள்ளவேண்டும். இடைநிலை பத்திரிகைகளைமுழுக்க வளர்ந்த எழுத்தாளர்கள் வலைத்துப் போட்டுக்கொண்ட ஒரு காலகட்டத்தில் புதிய படைப்பாளிகளுக்கு ’வெளி’யே இல்லாமல் போய்விட்டது. அந்தப் பள்ளத்தை நிraப்பும் முயற்சியைஉயிர் எழுத்து வலிமையாகவே செய்கிறது. எஸ்.வி.ஆரின் தொடர் பங்களிப்பை இணைத்துக் கொண்டு இளைய தலைமுறையினருக்கும் சேர்த்து வாய்ப்பளிக்கும் ஆசிரியர் குழுவின் முயற்சிபோற்றத்தக்கது. இவ்விதழில் வந்த மருது சார் கட்டுரைகளைப் படித்தபோது மருதுவைப் பற்றிய என்னுடைய அனுபவங்கள் மேலெழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.நான் 90களின் வாசகனாகமட்டுமேஇருந்த காலத்தில் வெளிவந்த கவிதை, சிறுகதை, கட்டுரை புத்தகங்கள் மருதுவின் அட்டை ஓவியத்தோடுதான் பெரும்பாலும் வெளிவரும்.அதன் அட்டைகள் பொதுத்தன்மையிலிருந்து நகர்ந்துதனித்துத் தெரியும்அளவிற்கு அதன் காத்திரம் கவரும்படியாக மிளிரும். எழுத்துத் தரத்தைத்தாண்டி மருதுவின் ஓவியங்களுக்காகவே பல புத்தகங்களை நான் நண்பர்களிடம் திருடி இருக்கிறேன். அவர் பயன்படுத்தும்வண்ணங்கள் எனக்கு வசீகரமானவை. அவரின் கோடுகளில் இருந்து வெளிவரும் மனித உருவங்கள் கலைத்துவமானவை. அடர்த்தியான கருங்கோடுகள் நம் கண்களைஊமையாக்கிவிடுபவை.அதில் தென்படும் முரட்டான மாந்தர்கள் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடியவர்கள். அவரின் ஓவியங்களுக்கு பரவலான ரசிகர்கள் இருந்ததைப் போல அவரின் மெலிந்த அட்சரங்களுக்கும் அத்தனை ரசிகர்கள் இருப்பார்கள்.புத்தகத்தின் அட்டையை மெருகேற்றுவதில் கோட்டிற்கும்,ஓவியத்திற்கும்,வண்ணத்திற்கும்,எழுத்துருக்களுக்கும் இடையே பெரும் போட்டியை பார்வையாளனிடம் நிகழ்த்தச் செய்யும்வலிமை மருதுவின்ஓவியங்களுக்கே உரித்தவை. மருதுவின் ஓவியங்கள் சிறு வட்டத்தினை உடைத்துக்கொண்டு பிரபஞ்சத்தை நோக்கி விரிந்த காலத்தில் வெகுஜன ஊடகங்கள் அவரை அப்படியே அள்ளிப் பூசிக்கொள்ளக் தயாராகியது அவருக்குக்கிடத்த பெரிய வெற்றியல்லாமல் வேறென்ன. பத்திரிகைகளின் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு மருது பலமாகவே பயன்பட்டிருக்கிறார்.அதற்கான முன்சால்லை ஆதிமூலம் உருவாக்கியிருந்தது மருதுவுக்கு சற்று சுமைகுறைக்கும் காரியமாக அமைந்தது.அவரது படத்தோடுவெளியாகும் படைப்புகளைக் கண்ட படைப்பாளி எவரும் அக்காலத்தில் மகிழாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.அதையொரு அங்கீகாரமாகவே எழுத்தாளர்கள்கருதிய காலமது.மருதுவின் படைப்புகளை மட்டுமே ரசித்த எனக்கு அவருடன் முதல் பரிச்சயம் 2000-ம் ஆண்டு நிகழ்ந்தது. ஒரு வாரப்பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்த சிலமாதங்களிலேயேஅவரை சந்தித்தேன். அவரின் பழைய நினைவுகளை அசைபோடும் பகுதிக்காக சந்திக்கலாமா என்று தொலைபேசியில் கேட்டேன். உடன் இன்முகத்தோடு வரச் சொன்னார்.நந்தனம் தேவர் சிலையைத்தாண்டியுள்ள தன் காலனியின் முகவரியைக் கொடுத்து மாலையில் சந்திப்பதாகவும், வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றும் பணித்தார். சென்னையின் புதுமுகவாசியான நான்அவரது முகவரியை கண்டுபிடித்துப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போதெல்லாம் இன்றுள்ளதைப் போல் செல் வசதிகள் இல்லை. தவறிய அழைப்பைக் கொடுத்துசங்கேத மொழியில் எல்லாம் விஷங்களை பரிமாறிக்கொள்ள முடியாது. இன்கம்மிங் கால்களுக்கே காசழுத காலம்.அவரது அப்பார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்த பின்பும் கூட அவரது வீடு என் கண்களுக்கு ஆக்காட்டியே நின்றது.ஒருவழியாக வீட்டின் அழைப்புமணியை அழுத்தியபோது அவர் வீட்டின் கறுப்பு கேட்டில் பித்தளைத் தகட்டில் பொரித்த மருது பெயர்ப்பலகை சற்று நிம்மதியை எனக்குப் பரிசளித்தது.இன்றைக்கும் எனக்கு பசுமையாக நினைவுள்ளது. பெரிய ஆளுமை ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் எனக்கு அடிவயிறு கலக்க, பெரும் சிக்கலாய்ப்போனது. சிரித்த முகத்தோடுவீட்டிற்குள் அழைத்த திருமதி மருதுவிடம் நான் முதலில் கேட்ட கேள்வி, கழிவறை எங்கிருக்கிறது என்பதுதான். மருது இப்போதுதான் வெளியில் கிளம்பியதாகவும் சற்றைக்குள் வந்துவிடுவார்என்றும் திருமதி பதிலளித்ததை பாதி காதில் வாங்கிக்கொண்டு கழிவறைக்குள் புகுந்துவிட்டேன். எதனாலோ மனதிற்குள் பிடிங்கித்தின்னும் கூச்சம் வெறி நாயைப்போல்திரிந்துகொண்டிருந்தது அன்று.என் வேலைகள் சுகமாக முடிந்து வெளித் திரும்பியபோது, மருது தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்தார்.சுவற்றில் நான் வாசகப் பருவத்தில் ரசித்த நகல் ஓவியத்தின் அசல்சிரித்தபடி தொங்கியது. அதற்கும் எனக்குமான உறவோடு மருதுவிடம் பேச்சைத் தொடங்கினேன். அவரோ,” ஓஓஓஓ....அதுவா” என்று பேச்சை நீட்டாமல் உடன் முடித்துக்கொண்டார்.வார்த்தகளை விரயமடிப்பதில் உவப்பற்றவர் மருது என்பதைப் புரிந்துகொண்டேன்.அவரது பரபரப்பு எனக்குப் பிடிபடவில்லை. பேசி முடித்துக் கொண்டு வெளியில் வந்து எதிரில் உள்ள மரத்தோடு அவரை நிற்க வைத்து படமெடுத்தார் என்னுடன் வந்த நிழற்படக் கலைஞர்.அவரது பளீர் வெள்ளை உடுப்பு, அறிவுத்தனமான புன்னகை,கவர்ச்சியான நரை,அழகான நீலநிற ஜீன்ஸ், வட்டமான மூக்குக் கண்ணாடி என்று அவரது உருவம் எனக்குள் வீடுவரை தொடர்ந்துகொண்டே வந்தது.அவரிடமிருந்து எனக்கான அவரின் நகலை நான் எடுத்து வந்ததை மருது அறிய வாய்ப்பில்லை. அவர் எங்களை வழியனுப்பும் முன் ”ஒரு விஷயம் கடற்கரய்... ..................நான்சொன்ன இந்தவிஷ்யத்தைமட்டும் குறிப்பிட்டு எதையும் எழுதிடாதீங்க” என்றார். அதை இன்று வரை கடைப்பிடித்து எழுதாமல் தவிர்க்கிறேன்.எங்களை வழி அனுப்பிவிட்டுச் சென்றவரை திருப்பிப் பார்த்தேன். அப்படியொரு வேக நடை அவரிடம். அது மருதுவின் கோடுகளைப் போல வலிமை,வேகமானவை.
***********

ஏறக்குறைய காட்சிமொழியிலான உலகத்தில் நாம் இன்றைக்கு வாழ்கிறோம். அதனால்தான் எந்தத் தகவல்களையும் காட்சிவடிவத்தில் காண விரும்புகிறோம். காட்சி மொழி என்பது நம் அறிவைத்தீர்மானிப்பதாய் செயலாற்றுகிறது. அதன் போக்கில் உண்மை என்பது நம்மிடம் கட்டமைக்கப்படுகிறது. மருத்துவ ரீதியான கண்டுபிடிப்பில் மூலைக்கும் கண்களுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாகவும் நிறச்சேர்க்கைகளை அதன்பொருட்டே நாம் உள்வாங்கிக் கொள்வதாகவும்மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.பிம்பம் என்பது மூளையுடைய பிரதிபலிப்பு.அப்படிப் பார்த்தால் சரியான மொழி என்பது லிபிகளில் மட்டுமே இல்லை. காண் புலத்தில் சம அளவில் இயக்கம் கொள்கிறது. ஆக, மருத்துவம் அறிவுறுத்தும் அறிவுலகத்தில் வந்து நிற்கிறோம் நாம்.அதனால்தான் நமது எல்லா நடவடிக்கைகளுக்கும் பொருள் சொல்ல முற்படுகிறது மருத்துவ உலகம்.காட்சிமொழி நிர்வகிக்கும் இன்றையகாலத்தில் ஊடகத்துறையில் முக்கியப்பங்காற்றும் ஓவியமும் தனது அடுத்த கட்டத்தை தழுவிக்கொள்ளத் துவங்கியுள்ளது. அனிமேஷன் போன்றபுதிய வடிவத்தினை பூசிக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறது. இதையொட்டிதான் மருதுவின் இன்றைய ஓவிய மொழியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது பழைய சாயைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு முற்றிலும் மாறுபட்ட ஓர் நவீனம் கடந்த உலகத்திற்குள் பயணிக்கப் போய்விட்டார். மரபின் பிசுறுகளுக்காக மருதுவைக் கொண்டாடியவர்களுக்கு அவரின்தற்கால ஓவியங்கள் நிறைவளிப்பதில் இன்றைக்கு சில தடைகள் உருவாகியுள்ளன. அவரது புதிய காண்மொழியோடு ஒப்பிடுகையில் நம்மவர்களின் ரசனை மொழி கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது.பழைய பார்வையாளனின் ரசனையின்உயரம் சற்று குன்றியிருக்கிறது.அவரது ஓவிய மொழிக்கும் பழைய பார்வையாளனின் காண் புலத்திற்கும் ஒரு பள்ளம் உண்டாகியிருக்கிறது. மரபின் இழைகளுக்காக மருதுவின் கோட்டினைக்கொண்டாடிய தலைமுறையினர் தேங்கி நிற்கிறார்கள். இது மருது தலைமுறை ரசிகர்களுக்கு நேர்ந்திருக்கின்ற பிரச்னை. இன்றைய தலைமுறைக்கு மருதுவின் அசைவுறும் நிழல்மனிதர்களை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் இராது.ஏனென்றால் இன்றைய பின்நவீன உலகத்தில் அனைத்தம்சங்களும் கேலிச்சித்திரத் தனம் கலந்திருக்கின்றது.எல்லா திரு உருவங்களிலும்கார்ட்டூன் தன்மை கலந்திருக்கிறது.ஆக, அனைத்திலும் கார்ட்டூன் அம்சமே பிரதானம் வகிக்கின்றன.கேலி என்ற கலைக்கு சம்பந்தமில்லாத கருப்பொருள் கலையோடு கை குலுக்கிக் கொள்கிற ஒரு நிலை கலை உலகத்திற்குள் புதிய வரவாக வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு பாத்திரத்தோடும் அதன் கார்ட்டூன் தன்மையை சேர்ந்தே ஒரு ஓவியன் காட்சிப்படுத்தும் தேவை உருவாகியுள்ளது.அப்படிப்பட்ட படைப்புகளை ரசிக்கும் மனநிலை சென்ற தலைமுறையினருக்கு இல்லையென்றே சொல்வேன்.கலையோடு கேலிகள் கலப்பதில் உவப்பற்றவர்கள் அவர்கள். ஆனால் மருதுவோதலைமுறையைத் தாண்டும் கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இன்றைய இளம் தலைமுறையினரோடு தன் ரசனையை இணைக்கும் புள்ளிக்கு தன் கோடுகளை நீட்டும்அளவுக்கு பின்நவீன கலைப்பிரதிகளோடு தன் கோட்பாட்டினைக் கொண்டு கலக்கிறார். தன் பழைய புள்ளியிலிருந்து மருது நகர்ந்திருப்பது எதேச்சையானதல்ல; கருத்தியல் ரீதியானது.தலைமுறை ரீதியானது.கருத்தியல், கோட்பாடுகளின் அளவுகோள்களோடு தன் படைப்பை வெளிப்படுத்தியதில் சென்ற தலைமுறை ஓவியர்களில் மிக முக்கியமானவர் மருது. அவரது படைப்புகள் பற்றி தீர்மானமானகருத்தியல்கள் மருதுவிடம் வெளிப்படையாகவே உள்ளன. அரசியல் செயல்பாடுகளை தெளிவாக முன் வைப்பதில் மருது அளவிற்கான ஓர் ஓவியன் இளையதலைமுறையில் உருவாகவே இல்லை.ஓவியத்தின் மூலம் மருது முன்வைத்த அளவிற்கு தன் கருத்தியலை பிரதியளவிலும் முன்வைத்திருக்கிறார். சமகால இலக்கியப் பிரதி,படைப்பாளிகளோடு மருதுவிற்கு இடைவெளி இல்லாத ஒரு சம்பந்தம் இருக்கிறது. சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை மருதுவோடு எவரும்விவாதிக்கலாம்.அவற்றோடு அறிதலுண்டு அவருக்கு. இன்றைய இளம்தலைமுறை ஓவியர்கள் நாளிதழ்களைக்கூட வாசிப்பதில்லை என்று பகிரங்கமாக மேடைகளில் தெரிவிக்கிறார்கள்.அதில் அவர்களுக்கு எவ்விதக் கூச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. படிக்காத, கலை உலகத்தோடு தொடர்பற்ற சாதாரண ஒரு விவசாயிக்கு நாட்டின் அரசியலோடு தொடர்பிருக்கும் அளவிற்குக் கூட ஒரு கலைஞனுக்கு நாட்டின் அரசியலோடுதொடர்பில்லை என்பதிலிருந்தே நம் அடுத்த கலை தலைமுறை அரசியல் எப்படி கெட்டுப்போய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அரசியலோடு தொடர்பை அறுத்துக்கொள்கிற ஒரு படைப்பாளியின் படைப்பைமக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். ஆக, கலைத்துறையின் வேராக இருக்கிற ஓவியத்தில் இன்று ஊனம் உண்டாகியிருக்கிறது.இந்த ஊனத்தை ஓரளவிற்கு காப்பாற்றும் அரும் பணியை மருது போன்ற பழைய தலைமுறையினர் செய்திருக்கிறார்கள். மருதுவின் பழைய கோடுகள் ஏற்படுத்திய அதிர்வுகள்அளவுக்கு அவரின் இப்போதைய கோடுகள் கூடுதல் பலம் இல்லாததுபோல் நிற்கின்றன. வலிமை என்பது அவரின் பழையகோட்டில் ஒரு வன்முறையைப்போல நிகழ்த்தப்பட்டுள்ளது.அது ஆழ்மன கலையாற்றலின் தங்குதடையற்ற வன்முறை அல்லது பாய்ச்சல். ஆனால் இப்போதையகோடுகளில் சாந்தம் தவழுகிறது. எள்ளல் கூடி நிற்கிறது. எல்லா உருவங்களும் காற்றில் கலைவதைப்போல் கலைகின்றனர்.கண்ணாடியில் மறைவதைப் போல் மறைகின்றன.நிழற்உருவங்கள் அசலோடு மோதுகின்றன. சித்திரங்களோடு அதன் குணநலன்களும்மோதிச் சிதைவுறுகின்றன.ஆகவே அதில் பாய்ச்சல் மென்மையாக வெளிப்படுகிறது.
நான் முன் வேலை செய்த அப்பத்திரிகையை விட்டு விலகி வேறு இதழில் சேர்ந்த பிறகு மருதுவை ஒரு தொடருக்கு படம் போடச் சொல்லி அழத்தேன்.இம்முறையும்மறுக்காமல் சரி தான் அவரது பதிலானது.பல படைப்பாளிகள் பங்கேற்கும் அத்தொடருக்கு மருதுவால் கனம் சேர்க்க முடியும் என்று நாங்கள் எல்லோரும் நம்பினோம். பலவாரங்களை தாண்டி தொடர் வெற்றிபெற்றது. மருதுவின்ஓவியங்களில் கறுப்பு அதிகமாக இருப்பதாகவும் அதை குறைத்தால் நல்லதென்றும் பலர் விரும்பியதால் அவரிடம் சொன்னேன்.அவரோ வழக்கம் போல கோபத்தை கூட்டிப் பேசினார்.அவர் கோபப்படும் தருணம் அந்த மாதிரி சந்தர்ப்பமாகவே இருக்கும் என்பதால் நான் மௌனியாகியிருந்தேன். நியாயம் பேசும் தருணமல்ல இது என்பதால் உருவான மௌனம் அது.தொடருக்கு படம் வரைவதாக இருந்தால் எழுத்தாளரின் பெயர் எந்த அளவிற்காக எழுத்துருவில் போடப் படுகிறதோ அதே அளவுக்கு தன் பெயரையும் போடவேண்டும்என்று வலியுறுத்திய கையோடுவரைய ஆரம்பித்தார். அவரின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது.படைப்பாளிகள் எல்லோரும் சமமே. எழுத்து ஒரு மொழி என்றால் கட்சியும் ஒரு மொழியே.