Monday, May 23, 2011

டாக்கீஸ் அனுவம்





ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளுவை இன்றைக்கு ஒருவன் பார்க்க நேர்ந்தால் பல்வேறு கோணங்களில் சந்தேகம் தட்டும். அப்படத்தின் நாயகி சினிமா மோகத்தால் சிக்கிச் சீரழிந்து இறுதியாக சின்னா பின்னமாவாள். ஜெயகாந்தன் தன் கருத்தை வழக்கமாக கதா பாத்திரத்தின் மூலம் ஏற்றி சொல்லியிருப்பார்.பழைய மெட்ராஸில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கும் அடிதட்டு மக்களின் உச்சபட்ச கனவை விவரிக்கும் சினிமா, ஜெயகாந்தனின் இந்தக் குறிப்பிட்ட சினிமா. படத்தில் இடம்பெறும் சம்பவம் உண்மைச் சம்பவம். அன்றாடம் நம் வாழ்க்கையில் தென்படும் சங்கதி. ஆனால் இன்று அப்படம் அசல் தன்மையை இழந்திருக்கிறது. பொய் பிம்பம் பூணுகிறது. சில கருத்தியல் சிராய்ப்புகள் எழுகின்றன. இன்று எளிய விஷயங்களின் மீது நாம் பெரிய தத்துவங்களை போர்த்தி ஒப்பிடுகிறோம்.சுமை தாளாது தள்ளாடுகிறது நம் கலாச்சாரப் பழையத் தோணி..அப்படி பார்த்தால் உண்மை ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு அப்புறம் சந்தேகத்தின் சாயலைத் தழுவிக் கொள்கிறது.நிஜம் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் தன் உஷ்ணத்தின்

கொள்ளளவைக் குறைத்துக் கொள்கிறது. சூடு குறைந்த கரித்துண்டுகள் பின் சாம்பலாவது மாதிரி, நம்பகத்தை இழக்கும் சங்கதிகள் சந்தேகங்களாக மடிந்து மண்ணில் சுருண்டிருக்கின்றன.

இன்று பழைய ஆடம்பரத்தின் எந்தச் சிறு தடங்களும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கும் தியேட்டர்களை காணும் ஒரு தலைமுறைக்கு எண்பதுகளில் இருந்த அதன் அத்ததை பிரமாண்டங்களும் எளிதாகத் தென்பட்ட வாய்ப்பில்லை. சினிமா தன் உச்சக்கட்டமான அனலை உழிந்து நின்ற உச்சி வெயிலில் பிறந்தது கடைசித் தலைமுறையை சார்தவர்களில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் அண்ணனும் நானும் சினிமா பைத்தியம். எங்கள் குடும்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உரசல்கள் மூண்டால் அதற்கு சினமாதான் முதற்காரணம்.அம்மா,அப்பாவிடம் படம் பார்ப்பதற்கு பணம் கேட்

கப் போய் வில்லங்கத்தை விலைக்கு வாங்கினக் கொண்டு நிற்பாள்.இங்கேதான் ஜெயகாந்தனின் சித்தாளு படம், தமிழ் மக்களின் அன்றைய மனநிலையை படம் பிடித்து சொன்னது.

அன்று நான் கைக்குழந்தையாக இருந்த போதே சினிமா பார்த்து ரசித்த

தாக அம்மா மெச்சிக் சொல்வாள்.கண் கொட்டக் கொட்ட வெள்ளித்திரையை வியந்து வியந்து பார்ப்பேனாம்.எண்பதுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் அந்தப் பண்போடுடே அன்று

ஒட்டிப் பிறந்திருக்க முடியும்.இதில் வியப்பொன்றுமில்லை.அம்மாவின் குடும்பத்திற்கு சினிமாவோடு நெருங்கமான பினைப்பு இருந்தது.அவள் சின்ன வயது முதலே சினிமாவோடு நெருக்கமாக பழகியிருக்கிறாள்.அம்மாவின் குடும்பம் சற்றும் சங்கோஜமில்லாமல் போஸ்டர்கள் மீது படுத்து புரண்டு கொண்டிருந்தக் ஒரு குடும்பம்.என் தாய்மாமன் மரக்காணம் பக்கமுள்ள அனுமந்தை கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் ஆபரேட்டராக வேலை பார்த்தவர்.அந்த

க் கிராமத்தின் ஒரே டாக்கீஸ் என்பதால் மாமாவும் ஊரில் ராஜ உபசாரம். அத்தி மலர்ந்த்துபோல் ஊரின் மத்தியில் மலர்ந்திருந்தது மாமா வேலை பார்த்த அந்த டாக்கீஸ்.மாலை காட்சி, இரவுக்காட்சி என்று இரண்டே காட்சிகள். சாயுங்காலம் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒலிபெருக்கியில் பழைய பாடலை போட்டு வானத்தைக் கிழிப்பார்கள். படம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக ப்ரத்யேக இசைத் தட்டைப்போட்டு சுழலவிடுவார்கள்.வழக்கமாக தினமும் ஒரே மெல்லிசைதான்.இமியும் மாறது.இச்சமிக்ஞை உணர்ந்த பொதுமக்கள் படம் பார்க்க வேக வேகமாக விரைந்து டாக்கீஸ் முன்பு குழுமுவார்கள்.

பனை ஓலைகளால் வேயப்பட்ட மேற்கூரை. பக்கவாட்டைச் சுற்றி தட்டி. உள்ளே ஐம்பது அறுபது பேர்கள் உட்காரும் அளவுக்கு கொள்ளளவு. டாக்கீஸின் பெயர் பலகைக்கு மேலாக ஒரு ஒத்தை விளக்கு கம்பம்.அரங்குக்கு உள்ளே சின்ன சிம்னி வெளிச்சத்தில் எரியும் ஒ

ரு குண்டு பல்ப். போஸ்டருக்கு என்று தனியாக ஒரு தொங்கு விளக்கு. உள்ளே கடைசி இரண்டு வரிசையை நிறைக்கும் மர பெஞ்சுகள்.திரையையொட்டி ஆற்று மணலடித்த வெறும் தரை என்று டாக்கீஸ் பார்க்க பூவுலக சொர்க்கமாய் காட்சியளிக்கும். இதே தோற்றம்தான் எல்லா ஊருக்கும்.பேதங்கள் அரிது.அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மறுதல்கள் இருக்கலாம். மற்றபடி டாக்கீஸின் தேசிய அடையாளங்கள் இவை. பார்வையாளர்கள் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உயரம் காணாது சிலர் திண்டாடுவார்கள். தரையில் நிரப்பியிருக்கும் மண்ணை ஒரு மேடாகக் குவித்து உயரத்தைக் கூட்டிக் கொள்வார்கள். படம் பார்க்க கொஞ்சம் செளரியமாக இருக்கும்.இந்த சமீபத்திய செளகர்யம் பல சமயங்களில் முன்னே உட்கார்ந்திருப்பவன் தனக்கு திரையை மறைப்பதாக சொல்லி திடீர் முட்டல் மோதலை உண்டாக்கும். சின்னளவு முட்டல்கள்.பின்பு ரத்தக்களரி

யானதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகாயத்தில் டைவ் அடிக்கும் சினிமா ஃபைட்களைவிட விஞ்சி நிற்கும் அசல் சண்டைக் காட்சிகள் இவை. டாக்கீஸின் ப்ரத்யேக அம்சமே அதன் சூழல்தான். காண்டா விளக்கொளியில் முறுக்கு,சீடை,வெள்ளத்தின் சுவையோடு தயாரிக்கப்பட்ட எள்ளு உருண்டை.கமர்க்கட்டு மிட்டாள்.பெரிய சைஸ் பொரி உருண்டை.அதிரசம், அரிசி மாவில் சுட்ட சுய்யம் உருண்டை,பச்சைக் கடலை,அவித்த வேர்க் கடலை,வள்ளிக்கிழங்கு என்று தின்பண்டக் கடைகள் பல டாக்கீஸ் முன்னால் டேரா போட்டு உடக்கார்ந்திருக்கும்.கடைகள் என்றால் கூடையளவு வியபாரம்.அலுமினிய அண்டாவில் அடுக்கி வைத்து நடக்கும் வியபாரம். 1985களில் நான் பத்துக் காசுக்கு முறுக்கு, நாலு அணாவுக்கு சுய்யம், வள்ளிக்கிழங்கு என வாங்கித் தின்றிருக்கிறேன். நொறுக்குத்தீனி வயிறு முட்டவில்லை என்றாலும் திருப்தி கட்டாயம் மனசை முட்டும். வயிற்றுக்கும் வாய்க்கும் பஞ்சக்கதைகள் இருக்காது.இடைவேளை சமயத்தில் திறந்தவெளியில் நடக்கும் சில்லறை வியபாரம் மக்கள் மத்தியில் அவ்வளவு ஜரூர் காணாது.பலர் வீட்டிலிருந்தே டாக்கீஸுக்கு தின்பண்டங்களை மூட்டைக்கட்டி வந்துவிடுவார்கள். ஆகவே விற்பனை அதிகம் செல்லாது.

மழைபெய்யும் சமயத்தில் டாக்கீஸில் உட்கார்ந்து படம்பார்க்கும் சுகமேதனி. பனை மட்டைகள் எழுப்பும் சலசல சத்தம்.மண்ணை நனைத்துக் கொட்டு எழும் புழுதி வாடை.உள்ளேயே ஒருவரை ஒருவர் உரசிக்கி நின்று ஏற்றும் உடம்புச்சூடு என டாக்கீஸ் எழுப்பும் நினைவலைகள் அற்புதம் நிறைந்தவை. அது கிராமத்தில் ஒரு பொதுக்கலாச்சாரத்தின் குறியீடாக தென்பட்டது.சாதிகளை தாண்டி ஒரு பொது அடையாளத்தினை நோக்கி மக்களை ஈர்த்தது. ரசிகர் மன்றங்களும் திரைப்படத்தின் கொண்டாட்டங்களும் மக்களை சாதி வரம்பை மீறிய பொதுச் செயல்பாட்டிற்கு அழைத்து வந்தன.இவை கூர்ந்துநோக்குகையில் இன்றைக்கு தோணும் சமாச்சாரங்களாக பிடிபடுகின்றன. சினிமா என்ற ஊடகத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட புதிய மதத்தை பற்றிய ஆய்வுகள் அயல்நாடுகளில் ஒரு தியரியாக எழுதப்பட்டு உள்ளன.நமக்குதான் அப்பார்வையே இன்னும் வாய்க்கவில்லை. அக்கோணங்களில் அலசல்கள் எழுதப்படவேண்டும்.

டாக்கீஸில் இரவு படம் முடிந்து ஜனம் ஒட்டுக்க வெளியே போகும் போது ஒன்றோடு ஒன்றாக உரசியபடி ஓடும். படம் விட்ட சற்று நேரத்திற்குள் ஜனம் சந்து பொந்தில் ஓடி மறைவதைபோல சட்டென முழுக்க மறைவார்கள். கிராமங்களில் பொதுவழிப் பயணம் அரிதானது. ஒவ்வொரு ஆட்களையும் குறுக்கு வழிகள் தனித் தனியாகக் கூப்பிட்டுக்கொண்டு நிற்கும்.வயல்களில் இறங்கி, தோப்புகளில் புகுந்து வீடு, மக்கள் கரை சேர்ந்துவிடுவார்கள். கிராமத்தின் இருட்டில் வேடிக்கைக்குகூட ஒரு பொருள் கண்ணுக்குத் தெரியாது.சுற்றிலும் கருந்திரை கண்ணை மறைக்கும்.முதல் ஆட்டத்திற்கே இந்தக் கதி.இரண்டாம் ஆட்டத்திற்கு சொல்லவேத் தேவையில்லை. இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியேவருபவர்களுக்கு வெளிச்சம் என்பது வேடிக்கை பொருள். தூரத்தில் எங்கோ வெளிச்சம் சின்னதாக சிந்திக் கொண்டிருக்கும்.பல நாட்களுக்கு நிலவு வெளிச்சம் நிம்மதி தரும்.அம்மாவாசையன்று ஊரே இரவில் கறுப்புக் கம்பளி போர்த்திக்கிடக்கும். சினிமா ஆசை இருட்டு வெளிச்சம் அறியாது.

நான் பாட்டியின் ஊரிலுள்ள டாக்கீஸில் பார்த்த முதல்படம் சிவாஜி கணேசன் நடித்த முதல்மரியாதை என்பதாக ஞாபகம். நல்ல வெனவு தெரிந்தப் பிற்பாடு நானும் பாட்டியும் சேர்ந்து பார்த்தப் படம் ரஜினி நடித்த மனிதன்.ரூபினியும் ரஜினியும் சேர்ந்து நடித்தப் படம். ‘காள காள..முரட்டுக்காள பாடலும் ‘மனிதன் மனிதன்..எவந்தான் மனிதன்.அடுத்த வீடு தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா?அந்தநேரமோடி வந்து துடிப்பவன் மனிதனா?பாடலும் அதன் காட்சிகளும் இன்னும் நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. முதல்மரியாதையில் ‘எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகணும் சாமீஎன்று சிவாஜியிடம் வேலுச்சாமி கேட்கும் வசனத்தையும் ‘அதோ தூரத் தெரியுதே ரெண்டு பனைமரம் அதுக்கு பின்னால என்னய்யா இருக்கு?என்ற வசனத்தையும் ‘ அந்த நிலாவத்தானா நான் கையில புடிச்சேன்என்ற பாடலையும் ‘இந்த சிறுக்கி அறியாத வயசுல ஒரு தப்பை பண்ணிட்டேன்.திருவிழாவுக்கு போன இடத்துல வயித்துல ஏத்திக்கிடு வந்து நின்னேதான்.இல்லன்னு சொல்லல.அதுகாக நாலு வெள்ளாடும் துருப்பிடிச்ச தொறட்டிக் கம்புமா வந்த வெறும் பைய கையில புடிச்சிக்கொடுத்துட்டு செத்தானே என் அப்பன் அவன சொல்லணும்என்று வடிவுக்கரசி வைக்கும் ஒப்பாரியையும் வைத்து, விபரம் அறிந்த பிறகு என் பழைய நினைவுகளை மீட்டேன். சிவாஜி ராதாவோடு சேர்ந்து ஆற்றில் மீன் பிடிப்பதும் அதைக் கொண்டு வந்து சமைத்து ராதா சிவாஜியை சாப்பிட அழைப்பதும் வேண்டாம் வேண்டாம் என்று பிகு பண்ணிக்கொண்டே பின்னால் நடிகர் திலகம் மீனை உருஞ்சி உருஞ்சி ருசிப்பதும் அபாரமானக் காட்சிகள்.

பாட்டியோ ரஜினியின் தீவிர ரசிகை.டாக்கீஸில் ரஜினி படம் என்றாள் மாலைக்குள் வீட்டுவேலைகளை அசமடக்கி வைத்துவிட்டு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு டாக்கீஸூக்கு கிளம்பிவிடுவாள். லாந்தர் வெளிச்சம் போதும் அவள் அடுத்த தேசம்த்தயும் கடக்க. மணல்வெளிகளில் பதிந்துகிடக்கும் காலடிச்சுவட்டை வைத்தே இன்னார் என்று அறிந்துவிடுவாள்.செறுப்பின் எண் பார்த்து எந்த ஆள் திருடன் என்பதை ஊகிக்கும் அளவுக்கு உஷாரி. இந்த அறிவு ஊரில் சகலரும் அறிந்த்தே.ஆனாலும் மதி கூட பெற்றவர் இதில் நிபுநர் ஆகலாம்.ரஜினியின் காமெடி சென்ஸ் பாட்டியை அவருக்கு ரசிகை யாக்கியிருந்தது.வீட்டுக்கு வந்தற்கப்புறமும் காட்சிகளை சொல்லிச் சொல்லி சிரிப்பாள். தாத்தா சாகக்கூடா வயதிலேயே சாவைத் தழுவிவிட்ட்தால் ஒண்டிப் பொம்பளையாக நின்று தன் மூன்று மகள்களையும் இரண்டு மகன்களையும் கட்டிக்கரை சேர்த்த தைரிய மனுஷி பாட்டி.தாத்தா சாகும்போது என் அம்மாவுக்கு ஐந்து வயது.அவருக்கு கீழ் இரண்டும் ஆண்பிள்ளைகள். தாத்தா தனக்கென்று வைத்திருந்த தென்னந்தோப்பு ஒன்றுதான் ஜீவனத்திற்கு ஆதாரம்.அதுபோக கைத்தறியில் கோரைப்பாய் தயாரிப்பது,ஈச்சம்பாய் பின்னுவது, கீற்று முடைவது என்பன குலத் தொழிலாக இருந்தது.ஏரியில் விளையும் கோரைகளை கொண்டு வந்து கலர் சாயம் கலந்து பின் வெயிலில் காயப்போட்டு பாய் தயாரிப்பார்கள்.ஒருநாளைக்குள் ஒரு பாயை தறியில் அடித்தால் அன்று சினிமாவுக்கு அழைத்துபோவதாக பாட்டிச்சொல்லி பந்தயம் மூட்டுவாளாம்.ஆசைக்குப் பணிந்து அடித்து பிடித்து வேலைகள் நடக்குமாம்.அம்மா சொல்லிக் கேட்டவை இவை. மாமா ஆபரேட்டராக இருந்ததால் டாக்கீஸில் இலவசமாக படம் பார்க்கலாம்.ஆனாலும் அதற்கு பாட்டியின் சம்மதம் அவசியம்.ஆகவே போட்டிக்கு ஒப்புக்கொடுத்து தறி வேகத்தில் தீப்பொறித் தெரிக்குமாம்.நீரில் ஊறிய மட்டைகளைப்போல சினிமாவில் ஊறிய பிள்ளைகளாக அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.இதனால் சின்ன வயதிலேயே அம்மாவுக்கு சினிமா நடிகையாகும் கனவிருந்திருக்கிறது. அதற்கான இரண்டொரு வாய்ப்புகள் கூட வீட்டைத் தட்டியதாக என்னிடம் சொல்லி அம்மா பெருமைப்பட்டுக் கொள்வாள். இதற்காக தனியாக நடனம் கூட பழகி இருக்கிறாள்.திருமணத்திற்கு பிறகு அம்மாவின் ஆசைகள் அவள் அடிமனசோடு எருவாகிவிட்டன.மேல் மனம் உயரத்திற்குகூட அக்கனவு எழுந்துவர தெம்பில்லாமல் செத்துபோயிவிட்டது

திருமணத்திற்கு பின்னால் அம்மா விருத்தாசலத்திற்கு வந்துவிட்டாள். படம் பார்க்கும் பழக்கம் மட்டும் அவள் கூட வந்த சீதனமாய் தங்கிப்போனது. அது தழைத்து எங்களையும் பதம் பார்க்க ஆரம்பித்தது.அண்ணனும் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.அவரின் தத்துவ பாடல் வரிகளும் விஷேசமான அங்க அசைவுகள், அவர் எதிராளியை மடக்கிப்பிடிக்கும் லாவகம் எல்லாம் எங்களைக் கட்டியிழுத்தன. எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே இரண்டாம் ஆட்டமாக ஸ்ரீராஜராஜேஸ்வரி டாக்கீசில் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தார்கள்.அத்தனை இரண்டாம் ஆட்டத்திற்கும் ஆஜராகிவிடுவோம். இருட்டிலும் கூட்டம் பகல் காட்சியை போல திமிரும்.ஜன நெரிசல் நெக்கித்தள்ளும். விருத்தாசத்திலுள்ள பழைய டாக்கீஸ்களில் இன்றைக்கும் உயிரோடுள்ள ஒரே டாக்கீஸ் அதுதான்.

ஊரில் சந்தோஷ் குமார் பேலஸ்தான் பெரிய தியேட்டர்.அதன் உரிமையாளரின் வீடு ராஜேஸ்வரி டாக்கீஸுக்குப் பின்னால் இருக்கிறது. ஜங்ஷன் ரோட்டில் தியேட்டர் வைத்திருக்கும் உரிமையாளரின் வீடு மணிமுத்தாற்றின் மறுகறையில் இருந்தது.வீடென்றால் மாளிகை.முகவாசல் ஒரு தெருவில்லும் புறவாசல் இன்னொரு தெருவுக்குமாய் நீண்டு நிற்கும். அவரின் பேலஸிலும் இந்தப் பந்தா பவிசுகள் தென்பட்டன. வடதமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயர் இதற்குண்டு.நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு கேட்டும் விற்க மறுத்துவிட்டார் என்று அதன் உரிமையாளரை பற்றி ஊரில் ஜம்பமடிப்பார்கள். எனக்கு தெரிந்து எங்களூரில் தியேட்டருக்கு முன்பாக பெரிய நீருற்று வைத்த ஒரே தியேட்டர் சந்தோஷ்குமார்தான். அதற்கு பின் பெரியார் நகரில் சுரேஷ் தியேட்டர் புதியதாக முளைத்தது.அன்றைக்கு இதன் பெயர் பெரியார் நகரில்லை.பின்னால் வழக்கத்திற்கு வந்த புதிய அடையாளம் இது.சுரேஷின் உரிமையாளர் வாண்டையார் வகையேறாவை சேர்ந்தவர்.நவீன அடையாளங்களோடு கட்டப்பட்ட தியேட்டராக சுரேஷ் அன்றைக்கு விளங்கியது.இந்தத் தியேட்டருக்கு முன்னால் அழகிய இரு பெண்கள் குடத்திலிருந்து நீருற்றுவதைபோலவும் லஷ்மி தாமரை இலையில் மேல் உட்கார்ந்திருப்பதைபோலவும் இருபுறங்களிலும் யானைகள் தன் துதிக்கையினால் நீர்த் தெளிப்பதைப் போலவும் அழகான முகப்பை வடிவமைத்திருந்தார்கள்.அன்றைய நாளில் கட்டப்பட்ட அழகியவடிவமைப்பு. அதேப் போல் திரையில் படம் போடுவதற்கு முன்னதாக வண்ணவிளக்குகள் தொங்கிகொண்டே மேலேறும் திரைச்சீலையை இந்த தியேட்டரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தார்கள்.அதைக் காணவே தனிக்கூட்டம் தியேட்டருக்குள் புகுந்தது.

சந்தோஷ்குமாரில் ஒரு ரூபாய் ஐம்பது காசுவில் நான் படம் பார்த்திருக்கிறேன்.அதிகப்படியாக டிக்கெட் 2.50 காசுகள் இருந்தது.பால்கனிக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே அளவுக்கான டிக்கெட்தான் சுரேஷிலும். சுரேஷ் தியேட்டர் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்ததினால் அன்றைக்கு அவ்வளவாக கூட்டம் போகவில்லை. தியேட்டருக்கு முன்னால் சிறைக்கூடம் இருந்தது.சில காவலர் குடியிருப்புகள் இருந்தன.மற்றபடி ஈ ஆடாது. இன்று காவல்நிலையம் இருக்கும் இடத்தில்தான் காவலர் குடியிருப்பு இருந்தது.குடியிருப்பையொட்டி பெரிய ஆலமரம் பற்றி படர்ந்து நின்றது.அதன் கீழ் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும். மற்றபடி ஒப்புக்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. பகலிலேயே இந்த நிலமை என்றால் ராத்திரியில் சொல்லணுமா? இப்பகுதியே மயான அமைதியில் மூழ்கும். எனக்குத் தெரிந்து சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சிகளாக பேய்ப்படங்களை திரையிடுவார்கள்.கும்மியிருட்டில் பேய்ப்படம் பார்த்து திரும்புவது அத்தனை எளிதல்ல; 13நம்பர் வீடு,மைடியர் லிசா, அதிசய மனிதன் பார்ட் ஒன்று, பார்ட் இரண்டு,வா அருகில் வா, உருவம் இவை எல்லாம் இங்கேதான் திரையிடப்பட்டன. அதிசயமனிதனை தனியாக உட்கார்ந்து பார்க்கும் தைரியசாலிக்கு பரிசெல்லாம்கூட அறிவித்த ஞாபகம். இந்தப் படங்களில் ஒன்றைக்கூட விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.அவ்வளவும் மையிருட்டில். வீடு திரும்பும்போது பயத்தைத் தணிக்க சினிமா பாட்டை பாடிக்கொண்டே வீட்டை வந்து அடைவோம்.

சுரேஷ் தியேட்டரில் பல படங்கள் 100வது நாளை தொட்டன..அம்மன் கோவில் கிழக்காலே அவ்வாறு நூறு நாள் ஓடியப்படம். நூறாவது நாளைக்கு நடிகர் தவக்களை உள்ளிட்ட சிலர் தியேட்டருக்கு வந்தார்கள்.எங்க ஊர் பாட்டுக்காரன், உதயகீதம்,ஆண்பாவம்,ஒரு கைதியின் டைரி, காக்கிச்சட்டை, சிந்துபைரவி, கொடிபறக்குது, வைக்காசி பொறந்தாச்சு,இது நம்பாளு போன்ற படங்கள் ரகளைக் கட்டியப் படங்கள். இது நம்மாளு படம் ரிலிஸான அன்று முட்டி மோதி டிக்கெட் கவுண்டரில் உள்ளே நுழைந்தால் எனக்கு மட்டுதான் டிக்கெட் கிடைத்தது. மூன்று பேராகப் போயிருந்தோம்.ஒருவர் மட்டும் போக மனமில்லாமல் டிக்கெட்டை வெளியில் விற்றுவிட்டு வீடு திரும்பினோம்.மறுநாள் இரண்டு டிக்கெட்.மூன்றாம் நாள் டிக்கெட்டே இல்லை.இப்படி கஜினி மாதிரி படையேடுத்து நான்காம் நாள் படத்தை பார்த்தோம். ஆனாலும் சந்தோஷமாக பார்க்க கொடுப்பினை இல்லை. டிக்கெட் கவுண்டரின் சுவற்றில் மோதி என் தம்பிக்கு முன் மணடை உடைந்து போனது.பலநாள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட மனமில்லாமல் தம்பியின் தலையில் வழியும் ரத்ததில் என் கையைவைத்து அழுத்திக்கொண்டே முடியும் வரை படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் அவன் முகமெல்லாம் வலியால் ஊதிப்போய்விட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நான் கேட்கவில்லை.படம்தான் பிரதானம் என்று உட்கார்ந்துவிட்டேன்.

ஒரு நாள் சுரேஷ் தியேட்டரில் இரவுக்காட்சியின் போது ஒரு பெண் கழிப்பிடதிற்கு வைத்து கொலை செய்ப்பட்டுவிட்டதாக ஒரு விவரீதச் செய்தி ஊரெல்லாம் பரவியது. தியேட்டரில் காவலர்கள் உடனே கொலைக்காரியைக் கண்டுபிடித்துவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் நடந்ததை அறிந்தவுடன் தியேட்டரின் வாசலை மூடிவிட்டு பரிசோதித்ததில் கொலைக்காரி கத்தியை கொண்டையில் முடிந்து வைத்திருந்ததாகவும் நகைகளை ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்ததாக பேசிக்கொண்டார்கள்.இதற்கு பிறகு இரவுக்காட்சிக்கு கூட்டம் குறைய ஆரம்பித்தது. காலப்போக்கில் புதிய தியேட்டர்கள் நகரின் மையப்பகுதியான பேருந்துநிலையத்தையொட்டி முளைக்க ஆரம்பித்ததால் சுரேஷ் தன் ஆடம்பரத்தை எளிதாக இழந்தது.இரவுக்காட்சிகளில் ஈ ஓட ஆரம்பித்தது. இதை உணர்ந்த நிர்வாகம் இரவுக்காட்சி பார்த்துவிட்டு போகும் மக்களுக்கு இசவசமாக குதிரை வண்டிகளை அமர்த்திக்கொடுத்தது. தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கும் நிற்கும் குதிரை வண்டியின் எண்ணிக்கைக்கும் சற்றும் சம்பந்தமிராது. பத்து ஆட்கள் குதிரை வண்டியில் ஏறினால் 100பேர் வண்டியில்லாமல் பொடிநடை கட்டுவார்கள். இந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோக்கள் அவ்வளவாக ஊரில் இல்லை. கடைவீதியிலுள்ள பாலக்கரையில் குதிரைவண்டிகளுக்கென்று தனி ஸ்டாண்டே இருந்தது. இவ்வண்டிகளே அன்றைய ஜனங்களுக்கு சவாரி வாகனம்.

(தொடரும்)

படங்கள் நன்றி:கோவை ஓவியர் ஜீவா

No comments: