Friday, July 23, 2010

(எனக்குப் பிடித்த)தேவதச்சனின் மூன்று கவிதைகள்


1

இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது.எனினும்
யாராவது பூமியைவிட் கனமானது
எது என்று கேட்டால்,பலூனைச் சொல்வேன்

நீங்களாவது கூறுங்களேன்,இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று..
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடியே வருகிறது.நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்


2

அவளது வலதுபக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்
எதிரில் இருக்கும் அதிகாரியோ
தேநீரை ஒவ்வொரு மடக்காகச் சுவைத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம் அப்பாவினுடையது
ஆறுமாதத்திற்கு முன் இறந்து போனவரின் எச்சம் அது
அதில் முள் ஒருவிநாடி நகரும்போது,எதிர்காலம்
எல்லாமும் நகர்ந்துவிடுகிறது

அம்மா பதற்றத்தோடு பேசுகிறாள்
சில ஆவணங்களையும்,சான்றிதழ்களையும்
காட்டுவதற்கு,பாலிதீன் பையிலிருந்து
அவற்றை எடுக்கிறாள்.

வழக்கம்போல் அவைகள் நழுவி
தரையில் விழுகின்றன
அம்மாவின் வலதுபக்கம் யாருமில்லை

3

நீ சொன்ன இடத்தில் காத்திருந்தேன்
தொலைவில் யார் வந்தாலும் நீயே போலத் தெரிகிறது
ஆண்கள்கூட நீயே போல வருகிறார்கள் போகிறார்கள்
எல்லாப் பெண்களுக்கும் முகம் எப்படியோ
ஒரே மாதிரி இருக்குறது

நீ வரவில்லை.
என் கண்களில்
மிதக்கின்றன.
சாலைமரங்களில் அசைந்து கொண்டிருக்கும் இலைகளும்
அவற்றின்
அசையாத நிறமும்
திடீரென்று மாலை விளக்குகள் எரியத் தொடங்குகின்றன
துரிய இலையில் இருப்பதுபோல் இருக்கும்
காக்கிநிற டப்பா ஒன்றை
ஒருசிறுவன் எற்றிவிட்டுப் போகிறான்.
பசியோடும் கால் வலியோடும்
திரும்பத் தொடங்குகிறேன்.
இப்படி எல்லாம் நடக்கும்தானே

2 comments:

butterfly Surya said...

மூன்றும் அருமை.

பகிர்விற்கு நன்றி.

கடற்கரய் said...

நன்றி...
தேவதச்சன் உருவாக்கும் சித்திரம் அபாரமானது..இல்லையா?