Wednesday, February 11, 2009


சுலபமில்லை மகளே

முருங்கைப் பூ உதிரும் தாழ்வாரம்,

இனி நமக்குச் சொந்தமில்லை மகளே.



வேம்புவை மேற்கில் நட்டுவிட்டார்கள்.



மஞ்சள் ஓர் அரசியல் நிறமானது.

ஆடாதொடை புளாப்பூ ஆவாரை பெரியாநங்கை

சிறுநெல்லி பிரண்டைக்கொடி விரவிய

மேய்ச்சல் நிலத்தில் வளர்ப்பு ஜீவன்கள் அருகிவிட்டன.

உனக்குத் தெரியும்:

சோடியம் பல்பு வெளிச்சத்தை, கீழ்படரவிடாமல்

தடுத்ததற்காக நகராட்சித் தொழிலாளி

மரம் வெட்டவந்த நாளில்தான்,

என்பழைய வாழ்க்கைக்கு நான் முழுக்குப்போட்டதும்.

கோவில் காட்டில்கொட்டிய மழையில்,

இறைந்த மாம்பிஞ்சுகளை பொறுக்கித் தின்றவர்கள்,

திருட்டு மரத்தில் தப்புக்காய் பறித்தவர்கள்,

எல்லாம் நாகரிகப்பட்டதும்.

என் தெய்வம் நந்தவனம் கேட்டதும் அந்நாளில்தான்.

ஊர்க்குடிகள் புழங்கும் பூவல் மேட்டில்

கொம்பூதும் பெருசுகள்

சோகை நோய் பீடித்துசாக நேர்ந்ததும்.

சவுக்குத் தோப்பில்

வாழைப் புதரில்

புங்கமரம் விளையும் வயல்களில்

என் வண்ண மயில் வனப்போடு அழிந்ததும் அன்றைக்குத்தான்.

இனி, நம் குடிலுக்குத் திரும்பும் தூரம் சுலபமில்லை மகளே.

அது என்,உள்ளங்கை ரேகைகளைப் போல கிளைத்துக்கொண்டே போகிறது.


ஐந்திணை வாழ்வு


ஒருவன்,கடைசி மூத்திரத்தை

முனைந்துவெளியேற்றுவதைப்போல

வெளியேறிக்கொண்டிருக்கிறது

மாரிநீர்.

நெய்தல் புரத்தில்

புணரிக்குப் போனவர்கள்

மஞ்சுப் பொதிகள் வலு இழப்பதாய் இல்லைஎன்றார்கள்.

பாலைமேட்டில்

மேற்செம்பாலை பாடியவர்கள்

எங்கேயும் இல்லாமல், வேனல் காற்றில்

வேரோடு கரைந்தார்கள்.

வைகறை காலை

மருத வெளியில் தவளைகளைப் பிரசவிக்கிறது.

அதன்அடர் இசைப் பாடல்கள்மிளையை உயிர்ப்பாக்குகிறது.அதன் ஒலியுண்ணும் நட்சத்திர ஆமைகள்,

நகர ஆரம்பிக்கின்றன.

முல்லைப் புதரில்

காடைக் குஞ்சுகளைத் தேடி

வேட்டுவன் பவனுகிறான்.

சேடல் மலர்கள்நடுங்கின நளிரில்.

குறிஞ்சிச் சரிவில்இரலை ஒன்று இடம் தேடுகிறது, அண்ட.

அதன் இடம் பூமிக்கு வெளியில்

நகர்ந்துபோய்விட்டது.கொம்பால்

முட்டி முட்டி இடத்தைமீண்டும்

பூமிக்கு உள்ளே தள்ளிவிடுகிறது.

தேரிக் காட்டிலோ

உழவாரக்குருவி ஒன்று

உயிரற்றுத் துடிக்கிறது.

அதன்உயிர்க்கூட்டின் மேல்நின்று

வெல்வெட் பூச்சிகள்வேடிக்கை பார்க்கின்றன.



ஈழக் கரும்பனையோ, கடந்து கேவுகிறது.


மீறல்

சாதாரணமான சாலைகளை

பெரிய பெரிய மதிற்சுவராக்கி நட்டுவிட்டது அரசு.

சூரியனின் செங்கதிர்கள் தீண்டுவதில்லை

மண்ணை

உன்னை

என்னை.

வெளிச்சம் வழமைக்கு எதிரில் பிறக்கிறது.

பெயல் பெயர்ந்து போகும்

வானம் மண் இடையில்.

தங்கநாற்கரம்

தரணி குறுக்கே ஓடுகிறது பிளந்தபடி.

உசந்த சுவர், சாலை மேல் நின்று

குக்கிராமங்களைக் கவனிக்கிறேன்.

பார்வைக்கு எட்டிய வரை பதுங்கி உள்ளன, எதுவும்.

செங்கிஸ்கான் புரவிகள் ஓடும்

கதைப் புத்தகத்தில்

வரலாற்று எலிகள்

குஞ்சு பொரிக்கின்றன.

புத்தகத்திலிருந்து வளர்ந்த

வரலாற்று எலியின் வால்களாகிநீள்கிறது சாலை.

புத்தகத்தின் வேறுவேறு பக்கங்களானது ஊர்.

முன்னது தெரிய பின்னது மறைகிறது.

மனிதர்களும் மறைகிறார்கள்.

நான்கு வழிப்பாதை நாயொன்று.

நாட்டார் வாழ்வை நக்கி நக்கிக் குடிக்கிறது.


வருகை


மூன்றாம் நாள், காய்ச்சல் முடிந்து,

படுக்கை முழுக்கதூசும் தும்பட்டையும்.

வேர்வை புளிப்பேற

எறும்புகள் வரிசைகட்டிவிட்டன.

உப்பு வாடையால்உடுப்பும் தடித்தது.

மா நகரில் ஒருதுளி வெந்நீர் கேட்டுத் திரிகிறேன்.

தவம் பூண்ட நவீன தவசி நான்.

அயர்ச்சி உடல் உலர்ந்த காகிதமானது.

அப்படியே காற்றில் பறக்கிறேன்.

உடலை நான்கு துண்டுகளாக மடித்து,

சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான் ஒரு பையன்.

பையின் வெளியே அலைகிறது,ஒரு மிருகத்தின் நாக்கு.

நடை, கால்கள் திரும்பும்.

காகங்கள் வெட்டி இறங்கிதலைகொத்திப் பறக்கின்றன.

சித்தம் தவறிய கால்களைவிரிப்பில் கிடத்துகிறார்கள்.

பசித்த சின்ன எறும்புக்கு முன்மலையாகப் பெருக்கிறது உடல்.


வெளி உலகு


நேற்றைக்குத்தான் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தையை

இன்றைக்கு என் கையில் கொடுக்கிறார்கள்,அதை

என் பழைய கைகளில் வாங்கிக்கொண்டேன்.

இன்றிலிருந்து நான் நேற்றைக்குள் போகிறேன்.

குழந்தைநாளைக்குள் நகர்ந்து நகர்ந்து விழுகிறது.

மகிழ்ச்சித் தழைகள்அரும்ப ஆரம்பிக்கின்றன.

சட்டென்றுவெண்சங்குமுழு மலராகிறது.

முதல் சுடரில்இனிக்கிறது வாழ்க்கை; எல்லோருக்கும்

பாரம் அழுத்துகிறது. சுமை கூடுகிறது.

ஆதுரத்தோடு

பிள்ளையைப் பார்த்துப் போனவர்கள்

யாவரும்நாளையைக் கொன்றவர்கள்.

சிரிக்கிறதுகுழந்தை.

பாவம் அதற்குவெளி உலகம் தெரியாது.
- நன்றி காலச்சுவடு

No comments: